கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் விஸ்ட்ரான் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் அமைந்துள்ளது. இந்த ஆலை தைவான் நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனம் ஆகும்.
இந்த நிறுவனத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் பாகங்கள் மற்றும் ஸ்மார்ட்போன், பயோடெக் சாதனங்கள் என பலவும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆலையானது கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலையில் சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். சமீபத்தில் இந்த ஆலையில் ஊழியர்கள் தொழிற்சாலையை கண்டபடி அடித்து நொறுக்கினர். நிறுவனத்தில் இருந்த உபகரணங்கள், உற்பத்தி இயந்திரங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை உடைத்தனர்.
சம்பள பிரச்சனை
நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஒன்றாக சேர்ந்து காலை 5.45 மணியளவில் நிறுவனத்தை அடித்து நொறுக்கியதில் அந்த இடமே பதற்றமான ஒரு போர்க்களம் போன்று காட்சியளித்ததாக அப்போது செய்திகள் வெளியானது. அந்த நிறுவன ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் குறித்த சம்பளத்தை வழங்காமல் நிறுவனம் காலம் தாழ்த்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
குறைந்த சம்பளம்
மேலும் பொறியியல் படித்த பட்டதாரிக்கு மாதம் 21,000 ரூபாய் சம்பளம் தருவதாக கூறி வேலைக்கு அமர்த்தி, அதிலும் பிடித்தம் செய்து வெறும் 16,000 ரூபாய் மட்டுமே வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அந்த குறைந்த சம்பளத்தினையும் கடந்த சில மாதங்களில் 12,000 ரூபாயாக குறைத்துள்ளதாக தெரிகிறது.
வெறும் ரூ.5000 மட்டுமே
இதே பொறியியல் அல்லாத பட்டதாரிகளுக்கு மாதச் சம்பளமாக 11,000 ரூபாய் சம்பளம் என்று கூறி சேர்த்து, வெறும் 5,000 ரூபாய் மட்டுமே வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளனர். இதன் காரணமாகத் தான் இந்த போராட்டம் அரங்கேறியதாக கூறப்பட்டது.
வேலைப்பளூ அதிகம்
ஊழியர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்பட்ட அதே நேரம், அவர்கள் 8 மணி நேரத்திற்கு பதிலாக 12 மணி நேரம் வேலை செய்துள்ளனர். ஆனால் அதிக நேரம் வேலை செய்ததற்காக எந்த ஊக்கத் தொகையும் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. ஆக அதிலும் நிர்வாகத்துடன் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
பெரும்பாலும் ஒப்பந்த ஊழியர்கள்
மேலும் ஊழியர்களுக்கு அங்கு வழங்கப்பட்ட உணவும் மிக மோசம் என ஊழியர்கள் தரப்பில் கூறப்பட்டது. குறிப்பாக இங்கு வேலை செய்யும் பெரும்பாலான ஊழியர்கள் முதலில் ஒப்பந்த அடிப்படையிலேயே சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரும் ஏஜென்சிகள் மூலம் பணி அமர்த்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
புதுபொலிவுடன் விரைவில் திறக்கலாம்
இப்படி மோசமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இந்த ஆலை மூடப்பட்டது. எனினும் விரைவில் புது பொலிவுடன் இந்த் ஆலை மீண்டும் தனது சேவையை தொடங்கலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. விஸ்ட்ரான் தற்போது, புதிய பணியமர்த்தலையும், புதிய சம்பள திட்டத்தினையும் கொண்டு வரலாம் என கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுத்தம்
ஆப்பிள் நிறுவனம் இந்த நிறுவனம் பிரச்சனைகளை முடிக்கும் வரையில், புதிய வணிகத்தினை நிறுத்தியுள்ளதாகவும் தெரிகிறது. இதே மற்றொரு அறிக்கையில் ஆப்பிள், கடந்த எட்டு வாரங்களாக விஸ்ட்ரானுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் ஆப்பிளுக்கு இந்த பெங்களூரு ஆலை மிகவும் கைகொடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆப்பிளுக்கு தேவை
இந்த ஆலை ஆப்பிளின் ஆன்லைன் ஸ்டோருக்கும் மிக உதவிகரமாக இருப்பதாகவும், இது பின்னாளில் ஆப்பிள் ஷோரூம்களை திறக்க வசதியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதோடு ஐடி நகரமான பெங்களூருவில் ஆப்பிள் நிறுவனம் தனது வணிகத்தினை உயர்த்த விஸ்ட்ரான் ஒரு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்த நிறுவனம் மீண்டும் தொடங்கப்படுவது ஆப்பிளுக்கு அவசியமான ஒன்று.