நிறைய நேரங்களில் உங்களிடம் அதிக அளவு பணம் இருந்தால் அதை உடனடியாக குறுகிய கால முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டிவரும்.
அந்த முதலீடு எளிதில் பணமாக மாற்றக்கூடியதாகவும், வரிச்சலுகைகள் உள்ளதாகவும் அதே நேரம் அதிக லாபமுள்ளதாகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 15 நாட்களிலிருந்து 1 ஆண்டு வரையிலான குறுகியகால முதலீட்டு திட்டங்களை கருத்தில் கொண்டோம். சிறந்த குறுகிய கால முதலீட்டு திட்டங்களின் பட்டியல் இதோ. ஒரு ஆண்டுகால திட்டங்களிலும் முதலீடு செய்யலாம் ஆனால் அதற்கான வரிவிகிதங்களை நினைவில் கொள்ளுங்கள்.
உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி (Ujjivan Small Finance Bank)
ஒரு வருடத்திற்கு குறைவான குறுகிய கால முதலீட்டு திட்டமான இந்த வைப்புநிதி திட்டத்திற்கு, 8% வட்டியை தருகிறது இவ்வங்கி. இது மிகச்சிறந்த வட்டிவிகிதம்.
உங்கள் வைப்பு நிதியின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளும் போது, இந்த சிறு நிதி வங்கிகள் செயல்பட ரிசர்வ் வங்கியின் லைசென்ஸ்-ம் மற்றும் தேவையான மூலதனம் உள்ளிட்ட ரிசர்வ் வங்கி விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். எனவே உங்களின் முதலீடு மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.
ஆனால் இந்த காலத்தில் அனைத்திலும் சிறு அபாயம் இருக்கத்தான் செய்கிறது.
சூர்யோதய் (Suryoday)
சிறப்பான குறுகிய கால முதலீட்டு திட்டங்களின் வட்டி விகிதங்கள் காரணமாக சிறு நிதி வங்கிகள் பெருகி வருகின்றன. எடுத்துக்காட்டாக சூர்யோதய் என்னும் சிறு நிதி வங்கி, 24-36 மாதகால வைப்புநிதிக்கு 8.75% வட்டியும், 12-24 மாதகால வைப்புநிதிக்கு 8.5% வட்டியும் வழங்குகிறது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான வணிக வங்கிகள், இதே கால அளவிலான வைப்புநிதிக்கு 6% வட்டியே வழங்கும் நிலையில் இது மோசமில்லை தானே. எனவே குறுகிய கால முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு சிறு நிதி வங்கிகளே சிறந்த வழி. இந்த வங்கிகளுக்கு சமீபத்தில் தான் ரிசர்வ் வங்கி லைசென்ஸ் வழங்கியது.
இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், வங்கி வைப்புநிதி மூலம் கிடைக்கும் வட்டிக்கு டி.டி.எஸ் வரி பிடித்தம் செய்யப்படும்.
பந்தன் வங்கி (Bandhan Bank)
6 மாதம் முதல் ஒரு வருடம் வரை உங்களிடம் இருக்கும் பணத்தை எதாவது செய்ய விரும்பினால், பந்தன் வங்கியின் நிரந்திர வைப்புநிதி சிறந்த குறுகியகால முதலீட்டு திட்டமாக இருக்கும்.
6-12 மாத வைப்புநிதிக்கு 7% வட்டிவிகிதம் வழங்கப்படுகிறது. நாட்டின் எந்தவொரு பொதுத்துறை அல்லது தனியார் வங்கியோ, குறுகிய கால முதலீட்டுக்கு இவ்வளவு வட்டி வழங்கியதில்லை. எனவே இது சிறந்த முதலீட்டு திட்டமாக இருக்கும்.
இந்த வகை முதலீட்டை எளிதில் பணமாக மாற்றிக்கொள்ள இயலும். ஆனால் முன்கூட்டியே திரும்பப்பெறும் முதலீட்டுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்பதை நினைவில் கொள்க. இன்னொரு கவனிக்கதக்க விசயம் என்னவென்றால், எஸ்.பி.ஐ வங்கி தனது நீண்ட கால முதலீட்டுக்கு கூட இவ்வளவு அதிக வட்டிவிகிதம் தருவதில்லை.மேலும் வங்கி வைப்புநிதிக்கு அதிக வரி என்பதையும் கருத்தில் கொண்டு திட்டமிடுங்கள்.
ஆர்.பி.எல் வங்கி சேமிப்பு கணக்கு (RBL Bank Savings Account)
தற்காலிகமான பணத்தை முதலீடு செய்ய சிறந்த இடம் இதுதான். எடுத்துக்காட்டாக,நீங்கள் ஒரு சொத்தை விற்று வரும் பணத்தை அடுத்த சொத்து வாங்கும் வரை எளிதில் பணமாக மாற்றும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால், ஆர்.பி.எல் வங்கி சேமிப்பு கணக்கை துவங்கலாம்.
இதன் மூலம் 7.1% வரையிலான வட்டியும், 5லட்சத்திற்கான விபத்து காப்பீடும் கிடைக்கும். வங்கியில் வைப்புநிதியாக முதலீடு செய்யலாம். ஆனால் முன்கூட்டியே பணம் தேவைப்பட்டால் வைப்புநிதி கணக்கை முடித்துவைக்க அதிக கட்டணம் செலுத்த நேரிடும்.
மேலும், சேமிப்பு கணக்குகளின் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு ரூ10,000 வரை வரிவிலக்கு கோரலாம். ரூ1 கோடியிலிருந்து 5கோடி வரையிலான முதலீட்டுக்கு 7.1% , ரூ10லட்சம் முதல் 1 கோடி வரையிலான முதலீட்டுக்கு 6.5%, 1லட்சம் வரையிலான முதலீட்டுக்கு 5.5% வட்டியும் வழங்கப்படுகிறது.
கே.டி.டி.எப்.சி வைப்புநிதி (KTDFC Deposits)
1 வருடத்திற்குள் முதிர்ச்சியடையும் வைப்புநிதி திட்டங்களை தேடுபவர்களுக்காகவே இருக்கிறது கேரள அரசு நிறுவனமான கே.டி.டி.எப்.சி.
இந்நிறுவனம் ஒரு வருட முதலீட்டுக்கு 8% வட்டிவிகிதம் வழங்குகிறது. ஒரு குறுகிய கால முதலீட்டுக்கு இந்த வட்டிவிகிதம் மோசமில்லை தானே. இதில் சிறப்பான விசயம் என்னவென்றால், ரூ2000 கோடி வரையிலான வைப்புத்தொகைக்கு கேரள அரசு பொறுப்பேற்கிறது.
லிக்விட் பண்ட் (Liquid Funds)
மியூட்சுவல் பண்ட் திட்டமான இதில், அரசு பத்திரங்களை போல குறுகிய கால பத்திரங்களில் முதலீடு செய்யப்படும் மற்றும் வங்கி வைப்புநிதியை போலவே லாபம் கிடைக்கும். இவை வங்கி வைப்புநிதியை போல எளிதில் பணமாக மாற்றமுடியாவிட்டாலும், அதிக வரிச்சலுகைகள் கிடைக்கும். முதலீடு செய்யும் முன் இதை பற்றி நன்கு ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது. இவற்றை வாங்கும் போதும் விற்கும் போதும் அதன் கால அளவை கவனமாக ஆராய வேண்டும்.
கோடாக் வங்கி (Kotak Bank)
எஸ் வங்கியை போலவே கோடாக் வங்கியும் சேமிப்பு கணக்கிற்கு 6% வட்டிவழங்குவதன் மூலம், இதை சிறந்த முதலீடாக மாற்றுகிறது. ஆனால் இந்த 6% வட்டி என்பது, ரூ. 1கோடி முதல் ரூ5 கோடி வரை இருப்பு உள்ள சேமிப்பு கணக்குகளுக்குத் தான்.ரூ1 லட்சத்திற்கு குறைவான இருப்பு தொகைக்கு 5.5% வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.
அல்ட்ரா சார்ட் டேர்ம் பண்ட் (Ultra Short Term Funds)
இவை லிக்விட் பண்ட்களை போலவே மியூட்சுவல் பண்ட் திட்டங்கள் தான். குறுகிய காலத்தில் நல்ல லாபம் தருபவை. குறுகிய காலத்திற்கான வட்டி விகிதத்தில் உள்ள வேறுபாடுகள் முதலீட்டின் மீதான லாபத்தை பாதிக்கின்றன. இதில் அதிகப்படியான பணம் அதிக தரம்வாய்ந்த பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகின்றன. வங்கி வைப்புநிதியுடன் ஒப்பிடுவது கடினமாக இருந்தாலும், அதிக லாபத்தை வழங்குபவை. குறைந்து வரும் வட்டிக்கு மத்தியில் சிறந்த குறுகிய கால முதலீட்டு திட்டம் இது.
குறுகிய கால முதலீடுகள் என்றால் என்ன?
குறுகிய கால முதலீடுகள் மூலதனத்தை பாதுகாக்க உதவுபவை. முதலீட்டுக்கான கால அளவு குறைவாக இருப்பதால் சொற்பமான லாபமே கிடைப்பவை. குறுகிய கால முதலீடுகள் 3 ஆண்டுகளுக்கு மிகாமல் இருப்பவை.
இது தற்காலிக முதலீடு அல்லது சந்தை பத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது. குறுகிய கால முதலீடுகளின் நோக்கமே குறைந்த அபாயத்தோடு மூலதனத்தை பாதுகாப்பதாகும்.
லாபம் குறைவுதான்
எனினும் குறைந்த அபாயம் உள்ள குறுகிய கால முதலீட்டில் கிடைக்கும் லாபமும் குறைவுதான். நிரந்திர வைப்புநிதி, தொடர் வைப்புநிதி, மியூட்சுவல் பண்ட், பங்குகள், சேமிப்பு கணக்கு, பத்திரமுதலீடு , வைப்புநிதி சான்றிதழ், கருவூல கணக்கு என குறுகிய கால முதலீட்டில் பல வகைகள் உள்ளன.
இவ்வகை முதலீடுகளை தேர்வு செய்யும் போது, ஆபத்து மற்றும் லாபமும் அதிகமாக இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள முதலீடுகள் வருங்காலத்தில் நல்ல லாபம் தரலாம்.
3 ஆண்டுகள்
நீங்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் முதலீடு செய்ய விரும்பினால், குறுகிய கால முதலீடாக இல்லாமல் பங்குசந்தை போன்றவற்றையும் கருத்தில் கொள்ளலாம். ஆனால் அவை ஆபத்தான முதலீடுகள் என்பதை கவனத்தில் கொண்டு எப்படி முதலீடு செய்வது என்பதை முடிவு செய்யுங்கள்.
வரி விதிப்பு
இது சம்பந்தமாக வல்லுநர்களின் அறிவுரையையும் கேட்கலாம். மேலும் இந்த முதலீடுகள் வரும் வரிவிதிப்பையும் புரிந்துகொள்ள வேண்டும். இது உங்களின் வருமானம் மற்றும் லாபத்தை குறைக்கவல்லது. இந்த முதலீடுகளின் மூலம் வரும் வட்டி வருமானத்திற்கு வரி விதிக்கப்படும் என்பதை கருத்தில் கொள்க. அதாவது மொத்த வருமானத்துடன் வட்டியையும் சேர்த்து வரிவிதிப்பின் போது கணக்கிடப்படும்.
பொது வருங்கால வைப்புநிதி
உங்களுக்கு வரிச்சலுகையுடன் அதிக லாபமும் வேண்டுமென்றால் சிறந்த முதலீடு பொது வருங்கால வைப்புநிதி தான். எனினும் இது குறுகிய கால முதலீடாக இல்லாமல் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் முதலீடு செய்யவேண்டியவை.