நிதிநிறுவனங்கள் ஓய்வில்லாமல் எப்.எம்.பி எனப்படும் நிரந்தர முதிர்வு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. தற்போது மொத்தம் 16 புதிய நிரந்தர முதிர்வு திட்டங்கள் சந்தையில் கிடைக்கின்றன. முக்கிய நிதி நிறுவனங்களான ரிலையென்ஸ் மியூட்சுவல் பண்ட்,டாடா மியூட்சுவல் பண்ட், ஆக்சிஸ் மியூட்சுவல் பண்ட், எச்.டி.எப்.சி மியூட்சுவல் பண்ட் போன்றவை இதில் களமிறங்கியுள்ளன.
நிரந்தர முதிர்வு திட்டம் என்றால் என்ன?
இது நிலையான முதிர்ச்சி காலத்துடன் கூடிய மூடிய கடன் பரஸ்பர நிதி திட்டமாகும். இந்த முதிர்ச்சி காலத்திற்கு ஏற்றவாறு இருக்கும் திட்டங்களில் முதலீடுகள் செய்யப்படும். இந்த முதலீட்டு முறை மூலம் வட்டிவிகித ஏற்ற இறக்கத்தால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க முடியும்.
யாரெல்லாம் முதலீடு செய்யலாம்?
நீங்கள் 30% வரிவரம்பிற்குள் இருந்து, குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்குப் பணத்தை முடக்கத் தயாராக இருந்தால் நிரந்தர முதிர்வு திட்டத்தில் முதலீடு செய்வதைப்பற்றிப் பரிசீலிக்கலாம். மூன்று ஆண்டு முதிர்ச்சி காலத்துடன் கூடிய நிரந்தர முதிர்வு திட்டங்கள் குறியீட்டுடன் கூடிய நீண்ட கால மூலதன ஆராய வரிக்கு தகுதியுடையவை. இந்தக் குறியீட்டுப் பலன்கள் மூலம் வரிவிகிதம் ஒற்றைப்படைக்குக் குறைக்கப்படும்( குறிப்பாகப் பணவீக்க சூழ்நிலையில்).
எப்.எம்.பி-க்கு எப்படி வரி விதிக்கப்படும்?
முதலீடு மூன்று ஆண்டுகளுக்குக் குறைவாக இருந்தால், நிரந்தர முதிர்வு முதலீடு வருமானமாகக் கணக்கிடப்பட்டு, முதலீட்டாளரின் வரி வரம்பிற்கு ஏற்ப வரிவிதிக்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கும் அதிகமான முதலீடுகளுக்கு, குறியீட்டுப் பலன்களுடன் லாபத்திற்கு 20% வரிவிதிக்கப்படும்.
எப்.எம்.பி-ல் முதலீடு செய்ய இது சரியான நேரமா?
வரும் மாதங்களில் ரிசர்வ் வங்கி கொள்கை விகிதங்களை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது நிகழ்ந்தால், வங்கிகள் வைப்புநிதிக்கான வட்டிவிகிதங்களை அதிகரிக்கும். வங்கி வைப்புநிதியை எளிதில் பணமாக மாற்ற முடியும் என்பதால், வைப்புநிதி திட்டங்கள் எப்.எம்.பி திட்டங்களுக்குப் பின்னடைவாக இருக்கும். இதனால் எப்.எம்.பி யை நிரந்தர வைப்புநிதி திட்டம் வீழ்த்த முடியாது என்கின்றனர் பரஸ்பர நிதி ஆலோசகர்கள். எனவே, அதிக வரி வரம்பிற்குள் உள்ள ஓய்வு பெற்ற நபர்கள் இந்த நிரந்தர முதிர்வு திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
குறைந்த வரிவரம்பில் உள்ளவர்கள் தவிர்க்கலாம்
பரஸ்பர நிதி ஆலோசர்களின் அறிவுரையின் படி, 10% வரி வரம்பில் உள்ள ஓய்வுபெற்ற முதலீட்டாளர்கள் நிரந்தர வைப்புநிதி திட்டத்தைத் தேர்வுசெய்யலாம். ஏனெனில் நிரந்தர முதிர்வு திட்டத்தை விட அதில் மூத்த குடிமக்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. மேலும், உங்களுக்கு மற்றொரு தொடர் வருமானம் இல்லாத நிலையில் உங்களுக்குக் கிடைக்கும் குறைந்த வருமானத்தையும் இதில் முடக்குவது சரியானதல்ல.
நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்
நிரந்தர முதிர்வு திட்டத்தில் பணம் முடக்கப்படும் என்பதால்,ஓய்வுபெற்ற நபர்கள் தங்களின் மொத்த பணத்தையும் இதில் முதலீடு செய்ய வல்லுநர்கள் பரிந்துரைப்பதில்லை.மேலும் நீங்கள் முதலீடு செய்யும் நிரந்தர முதிர்வு திட்டங்களின் பத்திர மதிப்பிலும் அதிகக் கவனமாக இருக்க வேண்டும்.