ஒரு எஸ்.ஐ.பி மூலமாக கோடீஸ்வரர் ஆக முடியுமா? லட்சாதிபதி ஆக முடியுமா? எது சாத்தியம். எவ்வளவு முதலீடு செய்யலாம். ஏன் முதலீடு செய்ய வேண்டும். எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை தான் இந்த கட்டுரையில் பார்க்க விருக்கிறோம்.
பெரும்பாலானவர்கள் முதலீடு என்றாலே வங்கி வைப்பு நிதி அல்லது அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்வர். இதில் லாபம் குறைவு என்றாலும் மிக பாதுகாப்பாக பார்க்கப்படுகிறது.
எது சிறப்பு
எனினும் இதில் பெரியளவில் லாபம் இருக்காது. ஆக வங்கி வைப்பு நிதியோ அல்லது அஞ்சலக திட்டங்கள் என்பது பெரியளவில் கார்ப்பஸினை உருவாக்க முடியாது. ஆனால் அதே நேரம் பணவீக்கம் என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவில் இருந்து வருகின்றது. ஆக நமது முதலீடுகளில் மாற்றம் செய்வதே மிக சிறப்பான ஒன்றாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதிகரிக்கும் பணவீக்கம்
உதாரணத்திற்கு நீங்கள் உங்களது சிறு வயதில் ஒரு கிராம் தங்கம் விலை வெறும் 500 ரூபாய்க்கு வாங்கியிருக்கலாம். இன்று கிராமுக்கு செய்கூலியோடு சேர்த்து குறைந்தபட்சம் 5,000 ரூபாய்க்கு மேலாக உள்ளது. இது உங்களது குழந்தைகள் வளரும் போது 50,000 ரூபாயாக அதிகரிக்கலாம். அப்படியில்லாவிட்டாலும், கிராமுக்கு 10,000 ரூபாயாகவாவது அதிகரிக்கலாம்.
எது சிறந்த ஆப்சன்
இப்படி அத்தியவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகும்போது, உங்களின் முதலீடுகளையும் அதிகரிக்க வேண்டும். அப்படி இல்லையேல் நல்ல லாபகரமான முதலீடாக நீங்கள் தேர்தெடுக்க வேண்டும். அதற்கு பெஸ்ட் ஆப்சன் மியூச்சுவல் ஃபண்டுகள் தான். அதிலும் குறிப்பாக எஸ்.ஐ.பிக்கள் பெஸ்ட் ஆப்சன் எனலாம். பொதுவாக பெரியளவிலான இலக்குகளை அடைய பங்கு சந்தை பெஸ்ட் ஆப்சன் என்றாலும், அதில் பலரும் ரிஸ்க் எடுக்க விரும்ப மாட்டார்கள். ஆக அதற்கு மாற்றாக மியூச்சுவல் ஃபண்டுகளை நாடலாம்.
ஏற்ற இறக்கம் இருக்கலாம்
மியூச்சுவல் ஃபண்டுகளிலும் ஏற்ற இறக்கம் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது லாபகரமானதாக இருக்கும். ஆக உங்களது இலக்கினை அடைய மியூச்சுவல் ஃபண்டுகள் தான் சிறந்த ஆப்சனாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதிலும் தற்போது உங்களது வருமானம் குறைவாக இருந்தாலும், எதிர்காலத்தில் உங்களது வருமானம் என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால் அதனை இப்போதிலிருந்தே திட்டமிட்டு செய்யுங்கள்.
உங்கள் இலக்கு என்ன?
அதே போல நீங்கள் முதலீடு செய்ய தொடங்கும் முன்பு, உங்களது இலக்கினை தீர்மானித்துக் கொண்டு, அதற்கேற்ப முதலீடு செய்ய தொடங்குங்கள். உதாரணத்திற்கு உங்களது குழந்தையின் கல்விக்காக முதலீடு செய்ய நினைக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். ஆக அதற்கேற்ப உங்களது முதலீட்டினை செய்யத் தொடங்குங்கள்.
நான் என்ன செய்ய?
குட் ரிட்டர்ன்ஸ் ரீடர் ஒருவர் நான் மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்ய தயாராக இருக்கிறேன். 25 வருடங்களுக்கு முதலீடு செய்ய முடியும். எனது குழந்தைக்கு இன்று 5 வயது, அவளுக்கு திருமணம், எங்களுக்கு ஒரு சொந்த வீடு என்பது இலக்கு. ஆக இந்த முதலீட்டில் இருந்து இன்னும் நான் எவ்வளவு அதிகரிக்க வேண்டும். எவ்வளவு முதலீடு செய்தால் 25 வருடம் கழித்து எனக்கு ரூ.1 கோடி கார்பஸ் கிடைக்கும் என கூறுங்கள் என கேட்டிருந்தார். அதற்கு நிபுணர்களின் பதில் என்ன வாருங்கள் பார்க்கலாம்.
எவ்வளவு வருவாய் கிடைக்கும்?
மாதம் 1,000 ரூபாய் முதலீட்டினை, 300 மாதங்கள் அவர் செய்கிறார், அதாவது 25 வருடம் முதலீடு செய்கிறார். மொத்தம் 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பார்.
உதாரணத்திற்கு உங்களுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைக்கிறது என வைத்துக் கொண்டால், உங்களுக்கு வருமானம் என்பது 15,97,635 ரூபாய் கிடைக்கும். ஆக மொத்தம் 18,97,635 ரூபாய் கிடைக்கும்.
ரூ.5000 முதலீடு செய்தால்?
இதே அவர் மாதம் 5000 ரூபாய் முதலீடு செய்கிறார் என வைத்துக் கொண்டால், சராசரி வருமானம் 12% எனக் கணக்கிட்டால், 25 வருடங்களுக்கு பின்னர் அவர் கையில் 94,88,175 ரூபாய் இருக்கும். எனினும் அவரது வருமானம் அதிகரிக்க அதிகரிக்க அதற்கேற்ப, அவரின் எஸ்ஐபி முதலீட்டினையும் அதிகரித்தால் அவரின் இலக்கினை எளிதாக அடைய முடியும்.
ரூ.1 கோடி எப்போது சாத்தியம்
நீங்கள் 25 வருடம் கழித்து 1 கோடி ரூபாய் கார்பஸ் இலக்கு எனில், நீங்கள் மாதம் 6000 ரூபாய் எஸ்ஐபியில் முதலீடு செய்தால், 12% வருமானம் என கணக்கில் எடுத்துக் கொண்டால் 1,13,58,811 ரூபாயாக இருக்கும். ஆக அப்போது தான் உங்கள் குழந்தையின் திருமணம், வீடு என்பதை நிறைவேற்ற முடியும்.
அதே போல முதலீடு செய்த கையோடு இருந்திடாமல், உங்கள் முதலீட்டினையும் அவ்வப்போது பார்க்க வேண்டும். நீங்கள் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைத்துள்ளதா? அப்படி கிடைக்காவிட்டால் வேறு எந்த ஃபண்ட் பெஸ்ட் ஆப்சன் என்பதையும் பார்க்க வேண்டும். அப்போது தான் உங்களது இலக்கினை அடைய முடியும்.
ஓய்வுக்காகவும் முதலீடு செய்ய வேண்டும்?
ஆனால் அவரின் ஓய்வுகாலத்தினை பற்றியும் அவர் நினைக்க வேண்டும். ஆக அவரின் வருமானம் அதிகரிக்க அதிகரிக்க எஸ்ஐபியை அதிகரிக்க வேண்டும். கூடுதலாக மெடிக்கல் இன்சூரன்ஸ், அவசர தேவைக்காக முதலீடு என்பது தனியாக இருக்க வேண்டும், அப்போது தான் குழந்தையின் திருமணம், வீடு என்பது போல, ஓய்வுகாலத்திற்கு என ஒரு கார்பஸ் கிடைக்கும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.