இந்தியாவும் சீனாவும் சுமாராக 4,000 கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இது நாள் வரை இந்தியா, எந்த ஒரு போரையும் தொடங்கியது இல்லை.
Recommended Video
மற்ற நாடுகள் தொடங்கிய போரில், தம்மை தற்காத்துக் கொள்ளத் தான் போர் செய்து இருக்கிறது. இதில் சீன போர்களும் அடக்கம்.
கடந்த மாதத்தில், சீனா இந்தியா எல்லைப் பிரச்சனையில், சீன ராணுவத்தினர்களின் தாக்குதலால், 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். இதற்கு இந்தியா பல பதிலடிகளைக் கொடுத்து இருக்கிறது.
இது தான் செமத்தியான அடி
ஆனால் சமீபத்தில், சீனாவின் டிக் டாக், யூ சி பிரவுசர், ஹலோ, வீ சாட்... போன்ற 59 அப்ளிகேஷன்களுக்கு தடை விதித்தது இந்தியா. இந்தியா, வர்த்தக ரீதியில் ஏற்றுமதி இறக்குமதிகளை கட்டுப்படுத்துவது, சீனாவின் காண்டிராக்ட்களை ரத்து செய்வது, சீன கம்பெனிகளை இந்தியாவில் முதலீடு செய்ய விடாமல் இருப்பது என பல நடவடிக்கைகளை விடவும், இந்த அப்ளிகேஷன்களுக்கான தடை தான் மிகப் பெரிய அடி, மிகப் பெரிய முடிவு என ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.
ஏன் அப்ளிகேஷன் தடை அவ்வளவு முக்கியம்
உலகத்தின் எல்லா துறைகளிலும் ஆள துடித்துக் கொண்டிருக்கிறது சீனா. சீனா என்றால் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி. அப்படி சீனா உலகத்தை ஆள முக்கியமாக பயன்படுத்தும் சில ராஜ தந்திரங்களில் ஒன்று தான் இந்த ‘military-civilian fusion' என்கிறார்கள். இது என்ன புதிய வார்த்தையாக இருக்கிறதே..? வாருங்கள் அங்கிருந்தே தொடங்குவோம்.
military-civilian fusion
சீனாவின் டிக் டாக், யூ சி பிரவுசர் போன்ற அப்ளிகேஷன்கள் வழியாக, தரவுகளை சீனா சேகரித்துக் கொள்ளும் (Data Mining) . பச்சையாக சொல்ல வேண்டும் என்றால், முறையான அனுமதிகள் ஏதும் பெறாமல் தரவுகளைச் சுரண்டிக் கொள்ளும். சேகரித்த தரவுகளை சீனா தன் அரசியலுக்காகவும், ராணுவத்துக்காகவும் பயன்படுத்திக் கொள்ளுமாம்.
ஜி ஜின்பிங்
இந்த military-civilian fusion திட்டம் ஏதோ இப்போது தொடங்கிய திட்டம் இல்லையாம். மாவோ காலத்தில் இருந்தே அவ்வப்போது பயன்படுத்திய டெக்னிக் தானாம். சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் வந்த பின் இந்த military-civilian fusion திட்டத்தை, அடுத்த லெவலுக்கு கொண்டு சென்று இருக்கிறாராம். அது தான் டிக் டாக் போன்ற செயலிகள் வழியாக மக்கள் பயன்படுத்தும் சாதாரண டெக்னாலஜி வரை இறங்கி டேட்டாவை சுரண்டத் தொடங்கி இருக்கிறது சீனா.
உதாரணம் அமெரிக்கா
அட, இப்படி யார் வேண்டுமானாலும் எதையாவது சொல்லலாம். உண்மையாக ஏதாவது சம்பவங்கள் நடந்து இருக்கிறதா..? எனக் கேட்கிறீர்களா. இதோ அமெரிக்காவிலேயே நடந்திருக்கிறதே. டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரச்சாரத்தில் டிக் டாக் பயன்படுத்தி, அமெரிக்க இளைஞர்கள் அலப்பறை கொடுத்து இருப்பதாக பல செய்திகளைப் பார்க்க முடிகிறது.
அமெரிக்காவிலேயே இப்படியா?
Trump Election rally tiktok என கூகுளிடம் கேட்டுப் பாருங்கள், ட்ரம்ப், பிரச்சார கூட்டம் வெறுச்சோடி இருக்கும் வீடியோக்களை எல்லாம் காட்டும். ஆக சீனாவின் military-civilian fusion திட்டம், வல்லரசு அமெரிக்காவையே உலுக்கும் திட்டம் என்பதை இங்கேயே புரிந்து கொள்ள முடிகிறது. பிறகு இந்தியா எல்லாம் சீனாவுக்கு கறிவேப்பில்லை கொத்தமல்லி தான்.
இந்திய பாதுகாப்பு அமைப்புகள்
இந்தியாவை, எல்லையில் ராணுவத்தினர் பாதுகாப்பது போல, உள் நாட்டிலும், வெளிநாட்டிலும், பல இந்திய புலனாய்வு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த புலனாய்வு அமைப்புகளும், அவ்வப் போது, மத்திய அரசுக்கு, சீனாவின் தரவு சுரண்டல் (Data Mining) பற்றிச் சொல்லிக் கொண்டே தான் இருந்தார்கள். ஆக சீனா தரவுகளை சுரண்டுகிறார்கள் என்பது இங்கு உறுதியாகிறது.
மரண அடி
மேலே சொன்ன அத்தனை விஷயங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, இப்போது இந்திய அரசு 59 சீன அப்ளிகேஷன்களுக்கு தடை விதித்து இருப்பதாகவே தெரிகிறது. இது சீனாவுக்கு மிகப் பெரிய அடி தான். நம் ஊர் பக்கம் ஒரே கல்லில் பல மாங்காய் அடித்ததாக சொல்வார்களே. அதே போல, இந்தியாவின் இந்த 59 சீன அப்ளிகேஷன் தடை உத்தரவால் இந்தியாவுக்கு 3 முக்கிய லாபம் கிடைத்து இருக்கிறது.
லாபம் 1 - டேட்டா பாதுகாப்பு
ராணுவ வீரர்களின் தியாகத்துக்கு தக்க பதிலடி கொடுத்து இருக்கிறது இந்திய அரசு. இந்தியாவில் பலரும், சீனா பொருட்கள் மற்றும் சீன நிறுவனங்கள் புறக்கணிப்பு பற்றிப் பேசுகிறார்கள். இதை வெறுமனே வாய் வழியாக மட்டும் சொல்லிக் கொண்டே இருக்காமல், 59 சீன செயலிகளுக்கு அரசு தடை விதித்தது பரவலாக மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு நாட்டு மக்களின் டேட்டா பாதுகாப்பை உறுதி செய்து இருக்கிறது.
லாபம் 2 - military-civilian fusion
அதோடு, வருங்காலத்தில் சீனா, இந்தியாவின் டெக்னாலஜி துறையில் நுழைவதை தடுக்கவும், இந்த 59 சீன அப்ளிகேஷன் தடை உதவும். குறிப்பாக இந்தியாவின் வளர்ந்து வரும் டெக்னாலஜி திட்டங்களான செயற்கை நுண்ணறிவு (Artificial Intellience) போன்றவைகளில் சீனாவுக்கு அனுமதி மறுக்க முடியும். இதனால் சீனாவின் military-civilian fusion திட்டத்தை தற்காலிகமாக, ஒரு பகுதி மட்டும் இந்தியா முறி அடித்து இருக்கிறது எனலாம். ஆனால் முழுமையாக தப்பிக்க வேண்டும் என்றால் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் தேவை.
லாபம் 3 - அமெரிக்க நட்பு
சீனாவோடு நட்பாக இருக்கலாமா அல்லது அமெரிக்காவோடு நட்பாக இருக்கலாமா என்றால், தற்போதைய சூழலில் அமெரிக்காவோடு நட்பாக இருப்பது நல்லதாகப் படுகிறது. சமீபத்தில், சீன அப்ளிகேஷன்கள் மீது இந்தியா தடை விதித்ததை, அமெரிக்க அரசு மன மாறப் பாராட்டி இருக்கிறது. ஆக எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற கணக்கிலும், சீன செயலிகள் மீதான அதிரடி தடை முடிவாலும், அமெரிக்கா இந்தியா இடையிலான நட்பு அதிகரித்து இருக்கிறது.
சீனா உஷார்
சீனாவில் இருந்து இந்தியாவின் டெக்னாலஜி சார்ந்த ஸ்டார்ட் அப் கம்பெனிகளில் முதலீடு செய்வதை கட்டுப்படுத்த வேண்டும். சீன அப்ளிகேஷன்களை சரமாரியாக அனுமதித்து இருப்பது போன்றவைகளை எல்லாம் இன்னும் முழுமையாக கண்டு பிடித்து அவைகளுக்கு தடை விதிக்க வேண்டும். இந்தியாவில் இருந்து ஒரு ஊரின் பின் கோட் கூட, நம் அனுமதி இல்லாமல் சீனர்கள் பார்க்க கூடாது. அந்த அளவுக்கு சைபர் பாதுகாப்பை இந்தியா பலப்படுத்த வேண்டும். அதை அரசு செய்யும் என எதிர்பார்க்கலாம். காரணம் இது வெறும் வியாபாரம் சார்ந்த விஷயம் அல்ல, ஒட்டு மொத்த நாட்டின் பாதுகாப்பும் இதில் அடங்கி இருக்கிறது.