கடந்த சில தினங்களாகவே, இந்தியா சீனா எல்லை பிரச்சனை தொடர்பான செய்திகள் நம்மை ஒரு வித பதற்றத்தை நோக்கி தள்ளிக் கொண்டு இருக்கிறது.
அது ஒரு பக்கம் இருக்க, இந்திய ராணுவ வீரர்கள் பலர் வீர மரணம் அடைந்து இருப்பதாக வெளி வரும் செய்திகள் நம்மை இந்தியனாக கோவப்படச் செய்கின்றன.
இந்த கோபத்தின் வெளிப்பாடாக பலரும், சீன பொருட்களை புறக்கணிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இப்போது மத்திய அரசும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு விஷயத்தைச் சொல்லி இருக்கிறது.
சீனாவில் இருந்து இறக்குமதி
சீனாவின் ஏற்றுமதி வியாபாரத்தில் ஒரு கணிசமான பங்கு, இந்தியாவுக்கும் உண்டு. 2017 - 18 நிதி ஆண்டில் சீனா, இந்தியாவுக்கு சுமாராக 76.38 பில்லியன் டாலருக்கு பொருட்களை ஏற்றுமதி செய்து இருக்கிறார்கள். 2018 - 19 நிதி ஆண்டில் சீனா சுமாராக 70.31 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்து இருக்கிறது. இந்த வர்த்தகத்தை நிறுத்திவிட்டால் சீனாவுக்கு ஒரு பெரிய இழப்பு தானே..?
சீன பொருட்கள் புறக்கணிப்பு
மத்திய அரசு, விரைவில் தரமற்ற & விலை மலிவான பொருட்களை, சீனா போன்ற நாடுகளில் இருந்து, இறக்குமதி செய்ய தடை விதிக்கும் நோக்கில் சில புதிய விதிகளைக் கொண்டு வரப் போகிறார்களாம். இந்த செய்திதை மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானே உறுதி செய்து இருக்கிறார்.
மக்களுக்கு வேண்டுகோள்
மத்திய அரசு அறிவிப்பது ஒரு பக்கம் இருக்க, மக்களே முன் வந்து சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானே சொல்லி இருக்கிறாராம். ஏற்கனவே மக்கள், சீனா பொருட்களை புறக்கணிப்பதை நாம் சமூக வளைதளங்கள் மற்றும் டிவி சேனல்களில் பார்க்க முடிகிறது.
நம்பர் 1 எதிரி
மேலும் பேசிய மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் "அதல் பிகாரி வாஜ்பாய் காலத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், சீனா தான் இந்தியாவுக்கு நம்பர் 1 எதிரி எனக் குறிப்பிட்டத்தை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்" எனவும் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
இந்திய தரம்
நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகத்தில், பி ஐ எஸ் (BIS) இருக்கிறது. இந்த பி ஐ எஸ்-ன் கீழ் 25,000 பொருட்களுக்கான தரம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது நமக்கு ஒரு புதிய சட்டம் வர இருக்கிறது. அந்த சட்ட திட்டங்கள் நிறைவடையும் தருவாயில் இருக்கின்றன. இந்த சட்ட திட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் தரமற்ற, சீப்பான பொருட்கள் இந்தியாவில் வருவது கணிசமாக குறையும் எனச் சொல்லி இருக்கிறார் ராம் விலாஸ் பாஸ்வான்.
இந்திய தொழில்முனைவோர்கள்
சீன பொருட்களை புறக்கணிப்பது ஒரு பக்கம் நடந்தாலும், இந்திய தொழில்முனைவோர்கள், இந்தியாவில் தரமான பொருட்களைத் தயாரித்து, போட்டியான விலையில் விற்க வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார். இதை சிறு குறு தொழில்முனைவோர்கள் ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சீன பொருட்கள் குறித்த விழிப்புணர்வு
உலக வர்த்தக அமைப்பின் விதிகள் படி, இந்தியா சீனாவிடம் இருந்து இறக்குமதியை நிறுத்த முடியுமா? இறக்குமதி அளவை குறைக்க முடியுமா? முடியாதா எனச் சொல்ல முடியாது. ஆனால் மக்கள் சீன பொருட்கள் பற்றி விழிப்புணர்வு அடைந்துவிட்டால், மக்களை சீனா பொருட்களை வாங்கச் சொல்லி யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்கிறார் அமைச்சர். அதோடு தன் அமைச்சகத்தில் சீன பொருட்களை வாங்க விரும்பவில்லை எனவும் தன் கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.