உலக அளவில் பல்வேறு பெரிய கம்பெனிகளும், கொரோனா வைரஸ் பிரச்சனை & அமெரிக்கா சீனா பிரச்சனை வந்த பின், தங்கள் உற்பத்தி ஆலைகள் மற்றும் அலுவலகங்களை பல்வேறு நாடுகளுக்கு மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
Recommended Video
உலகின் முன்னணி எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனியான சாம்சங் நிறுவனமும், தன்னுடைய உற்பத்தியை சில நாடுகளுக்கு மாற்றுவதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
குறிப்பாக, இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தியைப் பெருக்க, திட்டம் தீட்டிக் கொண்டு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
உலக ஸ்மார்ட்ஃபோன் சந்தை
உலக அளவில் சீனா தான் ஸ்மார்ட்ஃபோன் ஏற்றுமதிக்கான, தலை நகரம் போல செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. இதை நாம் பலரும் செய்திகளில் படித்து இருப்போம். ஆனால், சீனாவைத் தொடர்ந்து, வியட்நாம் என்கிற குட்டி நாடு, ஸ்மார்ட்ஃபோன் ஏற்றுமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக இருக்கிறது என்கிற விஷயம் தெரியுமா?
சாம்சங் வியட்நாம் உறவு
தற்போது, சாம்சங் நிறுவனம் உற்பத்தி செய்யும் ஸ்மார்ட்ஃபோன்களில், 50 சதவிகித ஸ்மார்ட்ஃபோன்கள் வியட்நாமில் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக துறை சார்ந்த கணிப்புகள் சொல்கின்றன. அதோடு சாம்சங் கம்பெனிக்கு பிரேசில் & இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் உற்பத்தி ஆலைகள் இருக்கின்றனவாம். ஆச்சர்யமாக, தன் சொந்த நாடான தென் கொரியாவில், தொழிலாளர்களுக்கு அதிகம் செலவாவதால், அங்கு உற்பத்தி வேலைகளை கணிசமாக குறைத்துக் கொண்டு இருக்கிறார்களாம். சரி இந்தியவுக்கு வருவோம்.
வியட்நாம் டூ இந்தியா
இப்போது, சாம்சங் நிறுவனம், வியட்நாமில் இருந்து தான், ஒரு கணிசமான ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தியை இந்தியாவுக்கு மடை மாற்ற வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். மத்திய அரசின் PLI (Production Linked Incentive) திட்டத்தின் கீழ் சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தன் உற்பத்தியை அதிகப்படுத்த விண்ணப்பித்து இருக்கிறார்களாம்.
3 லட்சம் கோடி ரூபாய்
இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமாராக 40 பில்லியன் டாலர் (3 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிலான ஸ்மார்ட்ஃபோன்களை உற்பத்தி செய்ய, சாம்சங் நிறுவனம் திட்டம் தீட்டிக் கொண்டு இருக்கிறார்களாம். சாம்சங் நிறுவனம் தன் ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தியை பல்வேறு நாடுகளில் மாற்ற விரும்புகிறதாம்.
காஸ்ட்லி ஸ்மார்ட்ஃபோன்
மேலே சொன்ன 40 பில்லியன் டாலர் ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தியில், உற்பத்தி ஆலைகளில் இருந்து, 200 டாலருக்கு மேல் விலை உடன் வெளியே போகும் ஸ்மார்ட்ஃபோன்கள் மட்டும், 25 பில்லியன் டாலருக்கு மேல் இருக்குமாம். இந்த ரக ஸ்மார்ட்ஃபோன்கள் தான் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது என விஷயம் தெரிந்த அரசு அதிகாரி ஒருவரே, எகனாமிக் டைம்ஸ் பத்திரிகைக்குச் சொல்லி இருக்கிறார்.
விலை மலிவான இறக்குமதி
Association of Southeast Asian Nations (ASEAN) அமைப்பின் உறுப்பு நாடுகளுடன், இந்தியா Free Trade Agreement செய்து கொண்டு இருக்கிறது. தற்போது சாம்சங் கம்பெனி, இந்தியாவில் தன் உற்பத்தியை பெருக்கினால், இந்த ஏசியன் உறுப்பு நாடுகளில் இருந்து, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் விலை மலிவான இறக்குமதிகளை குறைக்க உதவியாக இருக்கலாம் என்கிறார்கள் அரசு அதிகாரிகள்.
உலகின் பெரிய ஆலை
ஏற்கனவே தென் கொரியாவில் சாம்சங் கம்பெனி, தன்னுடைய மிகப் பெரிய ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தி ஆலையை இந்தியாவில், நொய்டா பகுதியில் நடத்திக் கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நொய்டாவில் இருக்கும் சாம்சங் ஆலையில், உற்பத்தி செய்யப்படும் ஸ்மார்ட்ஃபோன்கள், பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறதாம்.
ஆப்பிள் உடன் கை கோர்க்கும் சாம்சங்
தற்போது சாம்சங் நிறுவனத்தின் திட்டப் படி, இந்தியாவில் தன் உற்பத்தியை அதிகரித்தால், ஆப்பிள் நிறுவனத்தோடு கை கோர்த்ததாகச் சொல்லலாம். உலகில் மொத்த ஸ்மார்ட்ஃபோன் ஏற்றுமதி மதிப்பு 270 பில்லியன் டாலர். அதில் 38 % மதிப்பை ஆப்பிள் நிறுவனமும், 22 % மதிப்பை சாம்சங் நிறுவனமும் வைத்திருக்கிறார்கள். வால்யூம் அடிப்படையில் சாம்சங் 20 % & ஆப்பிள் 14 % வைத்திருக்கிறார்கள்.
இந்தியாவுக்கு கெத்து தான்
ஆக, சாம்சங் நிறுவனமும், ஆப்பிள் நிறுவனத்தைப் போல இந்தியாவுக்குள் வந்து உற்பத்தியை அதிகரித்துவிட்டால், உலக ஸ்மார்ட்ஃபோன் ஏற்றுமதியில், இந்தியா, கணிசமான பங்களிக்கும். அது நிச்சயமாக இந்தியாவுக்கு ஒரு பெருமையைக் கொடுக்கும். அதோடு பல ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தியாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். சாம்சங் ஜி சீக்கிரம் வாங்க.