உலகில் பல்வேறு நாடுகள், கச்சா எண்ணெய் தேவைக்கு மத்திய கிழக்கு நாடுகளைத் தான் சார்ந்து இருக்கிறது. அதில் பாகிஸ்தானும் ஒன்று.
சில மாதங்களுக்கு முன்பு வரை, பாகிஸ்தான் நாட்டுக்கு, சில சலுகைகள் மூலம் கச்சா எண்ணெய் சப்ளை செய்த வந்த சவுதி அரேபியா, தன் எண்ணெய் சப்ளையை நிறுத்திவிட்டது.
அப்படி பாகிஸ்தானுக்கு என்ன சலுகை கொடுத்து இருந்தது சவுதி? ஏன் திடீரென சவுதி அரேபியா பாகிஸ்தானுக்கு சப்ளை செய்து வந்த கச்சா எண்ணெய்யை நிறுத்திவிட்டது? வாருங்கள் பார்ப்போம்.
2018-ல் டீல்
கடந்த நவம்பர் 2018 காலகட்டத்தில் சவுதி அரேபியா, பாகிஸ்தானுக்கு 6.2 பில்லியன் டாலர் மதிப்பில் சில உதவித் திட்டங்களை அறிவித்தது. அதில் 3.2 பில்லியன் டாலருக்கு கச்சா எண்ணெய் சப்ளை டீலும் ஒன்று என்கிறது எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன் பத்திரிகை செய்திகள். இந்த கச்சா எண்ணெய் டீலில் சிறப்பு என்ன என்றால், சவுதி சப்ளை செய்யும் கச்சா எண்ணெய்க்கு, பாகிஸ்தான் தாமதமாக பணத்தைச் செலுத்தினால் போதுமாம்.
டீல் காலாவதி
இந்த டீல், கடந்த மே 2020-ல் காலாவதியாகிவிட்டது. மேலே சொன்ன டீலில், காலாவதியான ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம் எனவும் சொல்லி இருக்கிறார்களாம். ஆனால் சவுதி அரேபியா, டீலை புதுப்பிப்பது தொடர்பாக இன்னும் வாய் திறக்காமல் இருக்கிறார்கள். எனவே இந்த திட்டத்தின் கீழ், பாகிஸ்தானுக்கு, சவுதி செய்து வந்த கச்சா எண்ணெய் சப்ளை தடை பட்டு இருக்கிறது.
எதிர்பார்ப்பு
பாகிஸ்தான் நாட்டின் பட்ஜெட்டில், இந்த 2020 - 21 நிதி ஆண்டில் பாகிஸ்தான் அரசு குறைந்தபட்சம் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய்யை பெறும் எனக் கணித்து இருந்தார்கள். ஆனால் சவுதி அரேபியா - பாகிஸ்தானுக்கு இடையிலான டீல் தேங்கிக் கிடப்பதால் இந்த எண்கள் சாத்தியமா எனவும் கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது.
என்ன பிரச்சனை
காஷ்மீர் விவகாரத்தில், இஸ்லாமிய நாடுகள் அமைப்பு (Organization of Islamic Countrie - OIC) ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் பல முறை கேட்டும் நடத்தவில்லை. இந்த ஓ ஐ சி அமைப்பு, தற்போது உலக அளவில், பெரிய இஸ்லாமிய அமைப்புகளில் ஒன்று. இந்த ஓ ஐ சி அமைப்புக்கு சவுதி அரேபியா தான் தலைவராக இருக்கிறது.
பாகிஸ்தான் நடத்தும்
இஸ்லாமிய நாடுகள் அமைப்பு, காஷ்மீர் விவகாரத்தில் ஒரு கூட்டத்தை நடத்தவில்லை என்றால், பாகிஸ்தானை ஆதரிக்கும் நாடுகளை வைத்துக் கொண்டு தனியாக ஒரு கூட்டத்தை நடத்த வேண்டி இருக்கும் என வெளிப்படையாக மிரட்டல் விடுத்து இருக்கிறார் பாகிஸ்தான் வெளி விவகாரத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி (Shah mehmood Qureshi). இதனால் சவுதி பெரிதும் அதிருப்தி அடைந்து இருக்கிறது.
இன்னொரு அதிருப்தி காரணம்
சன்னி இஸ்லாமிய நாடுகளுக்கு தற்போது சவுதி தான் தலைவராக இருக்கிறது. துருக்கியோ, சவுதியை இந்த பதவியில் இருந்து இறக்க நினைக்கிறது. இந்த நேரத்தில் துருக்கியின் அதிபர் தயிப் எர்டோகன் (Tayyip Erdogan) உடன் பாகிஸ்தான் நெருக்கமாக இருக்கிறதாம். இந்த செய்தியும் சவுதியை மேலும் எரிச்சலடைய வைத்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இது தான் காரணம்
இந்த பிரச்சனைகளால் தான், சவுதி அரேபியா, பாகிஸ்தானுக்கு வழங்க இருந்த உதவி திட்டங்களில் இருந்து பின் வாங்குகிறது. பாகிஸ்தான் மட்டும் சும்மா இருக்குமா என்ன? சவுதி அரேபியாவிடம் வாங்கிய கடன்களில் ஒரு பகுதியை தடபுடலாக திருப்பி அடைத்து இருக்கிறார்கள். அதென்ன கடன் கணக்கு? வாங்க பாப்போம்.
பாகிஸ்தான் திருப்பிச் செலுத்திய கடன்
பாகிஸ்தான், சவுதி அரேபியாவிடம் இருந்து 3 பில்லியன் டாலர் கடன் வாங்கி இருந்தார்கள். அந்த கடனில் 1 பில்லியன் டாலரை 4 மாத காலத்துக்கு முன்பே திருப்பிச் செலுத்தி இருக்கிறது. அதோடு மீதமுள்ள 2 பில்லியன் டாலரையும், சீனாவிடம் இருந்து கடன் கிடைப்பதைப் பொருத்து திருப்பிச் செலுத்திவிடுவார்கள் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
பெரிதாகும் பிரச்சனை
இந்த பஞ்சாயத்தில் இரண்டு விஷயங்களை நம்மால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
1. பாகிஸ்தானுக்கும், சவுதி அரேபியாவுக்கு இடையிலான உறவுகள் அத்தனை சிறப்பாக இல்லை.
2. சீனாவுக்கும், பாகிஸ்தானுக்குமான நெருக்கம் அல்லது சீனாவை பாகிஸ்தான் சார்ந்து இருப்பது, இந்த கடன்களால் இன்னும் அதிகரிக்கலாம். இவை இந்தியாவை மறைமுகமாக பாதிக்கலாம்.