மன்மோகன் சிங் தலைமையிலான தேசிய முற்போக்கு முன்னணியின் இரண்டாம் ஆட்சிகாலத்தில், பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் காலியான நிதி அமைச்சர் நாற்காலியை ப.சிதம்பரம் அலங்கரித்து ஓராண்டு நிறைவு பெரும் இவ்வேளையில், நிதி அமைச்சராக அவர் செய்தது, செய்யத்தவறியது என அவர் பணியை எடை போடுவோம். இந்திய பொருளாதாரம் வீழ்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருந்த இருந்த வேளையில் ப.சிதம்பரம் பதவி நாற்காலியை அலங்கரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒராண்டு காலத்தில் இவர் கோட்டைவிட்டதையும், கோட்டைப் பிடித்ததையும் இங்கு பார்போம்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வீழ்ச்சி
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கடந்த பத்தாண்டுகளில் அடையாத வீழ்ச்சியை 2013 ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டின் போது 4.7% விழுக்காட்டில் போய் நிற்கிறது. சற்றே ஆறுதலாக, நான்காம் காலாண்டின் போது சிறிது ஏற்றம் கண்டு 4.85 விழுக்காடு என்ற நிலையில் உள்ளது. ப.சிதம்பரம் பதவியில் இருந்த கடந்த ஒரு ஆண்டு காலத்தில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி தப்பிதவறிக்கூட ஏறுமுகத்தை எட்டிப்பார்க்கவில்லை. பன்னாட்டு முதலீட்டு தர ஆய்வு நிறுவனங்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை தொடர்ந்து குறைத்தே மதிப்பிட்டு வருகின்றன.
ரூபாயின் மதிப்பின் கதி மிகவும் கவலைகிடம்!!
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு அதல பாதாளத்தை தொட்டு விட்டதையும் ப.சிதம்பரம் தன்னுடைய பதிவிக்காலத்தில் பார்த்துவருகிறார். கடந்த காலங்களில் எப்போதும் இல்லாத அளவிற்கு ரூபாய் மதிப்பு அடுக்கிவைத்த சீட்டு கட்டு போல் சரிந்து 61.20 என்ற நிலையை அடைந்துள்ளது. அரசும், மத்திய ரிசர்வ் வங்கியும் ரூபாயின் மதிப்பை உயர்த்த எடுத்த முயற்சிகள், கடலில் கரைத்த பெருங்காயத்தை போல் எந்த பலனையும் தரவில்லை என்பதே நிதர்சனம்.
கவலை தரும் நடப்பு கணக்கு பற்றாக்குறை
2013 ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டின் போது, நடப்பு கணக்கு பற்றாக்குறையும் கடுமையாக உயர்ந்து, 6 விழுக்காடு எனும் கவலைகரமான நிலையை அடைந்தது. மார்ச் மாதம் முடிந்த காலாண்டின் போது,சற்ற குறைந்து 3.6 விழுக்காடு அளவை தொட்டு இருப்பது நலம். கடந்த காலங்களின் மோசமான பொருளாதார கொள்கையையே, நடப்பு கணக்கு பற்றாக்குறை ஏற்றத்தின் துருப்புசீட்டு எனும் போது, ஒரு வருட காலம் என்பது ப.சிதம்பரத்திற்கு போதாது என்பதும் கணக்கில் கொள்ள வேண்டும்.
விறுவிறு செயல்பாடுகள்
சரிந்து கிடக்கின்ற பொருளாதார வீழ்ச்சியை தடுக்க சிதம்பரத்தின் விறுவிறு செயல்பாடுகள் பாராட்டுகுறியவை. பொருளாதாரக் கொள்கைகள் கைகொடுக்கவில்லை என்ற கையறு நிலை வாதம் தற்போது இல்லை. மானியங்களை குறைக்க எடுத்த முயற்சிகள், குறிப்பிட்ட சில துறைகளில் அந்நிய முதலீட்டை அதிகரிக்க செய்த ஏற்பாடுகள் போன்ற காரியங்களை , நிதி அமைச்சராக சிதம்பரம் செய்த பணிகளாக பாராட்ட வேண்டும் என்பது உண்மை.
நிதி பற்றாக்குறை
2012-13 ஆம் நிதி ஆண்டில் 5.2 விழுக்காடு என்ற நிலையை தொடும் என்று கணக்கிடப்பட்ட நிதி பற்றாக்குறையை, 4.9 விழுக்காடு அளவில் கட்டுப்படுத்தி இருக்கும் காரணத்திற்காக, சிதம்பரம் பாராட்டப்பட வேண்டும். பொருளாதார ஆய்வாளர்கள், செலவீனங்களை குறைக்க சிதம்பரம் எடுத்த முயற்சிகள் முதலீட்டையும் குறைத்து விட்டன என்ற கருத்தையும் முன் வைக்கின்றனர். ஆனாலும் நிதி பற்றாக்குறை தன் கட்டுப்பாட்டில் கொணர்ந்து, பன்னாட்டு முதலீட்டு தர ஆய்வு நிறுவன முதலைகளின் வாய்க்கு கிடைக்கவிருந்த அவலை பறித்து விட்டார் என்பதும் யதார்த்தமே.