அதாவது சந்தையில் பொது மக்களுக்கு விற்கப்பட்ட தங்களது நிறுவனத்தின் பங்குகளை அந்த நிறுவனங்களே திரும்ப வாங்குவது. இதன்மூலம் தங்களிடம் உள்ள பணத்தை அந்த நிறுவனங்கள் தங்களே நிறுவனத்திலேயே முதலீடு செய்கின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை நிறுவனங்கள் இரண்டு முறைகளில் தங்களது பங்குகளை தாங்களே வாங்கலாம். தனது பங்காகவே இருந்தாலும், சந்தையில் இருந்து வாங்கும்போது, அதை பங்குகள் மற்றும் பரிமாற்ற வாரியமான செபியின் விதிகளுக்கு உட்பட்டே பங்குகளை எந்த நிறுவனமும் வாங்க முடியும்.
முதல் முறையின்படி பங்குகளை வைத்திருக்கும் பொது மக்களிடம் இருந்து (முதலீட்டாளர்கள்) டெண்டர் முறையில் அதை நேரடியாக வாங்கலாம். இரண்டாவது முறைப்படி பங்குச் சந்தையில் அதை வாங்கலாம், இதற்கு open market purchase என்று பெயர். இதற்கு இன்னொரு பெயர் reverse book-building.
டெண்டர் முறையின்படி ஒரு முதலீட்டாளர் தன்னிடம் உள்ள எல்லா பங்குகளையும் அல்லது ஒரு குறிப்பிட்ட அளவு பங்குகளை மட்டும், அந்த நிறுவனத்துக்கு விற்கலாம். அதற்கான விலையை (டெண்டர் மாதிரி) அவர் குறிப்பிட வேண்டும்.
இந்த விலை நிறுவனத்துக்கு படிந்தால் அதை முதலீட்டாளரிடமிருந்து வாங்கும். வழக்கமாக அதிகபட்ச பங்குகளை, குறைந்த விலைக்கு வாங்கவே எந்த நிறுவனமும் முயலும்.
இரண்டாவது முறைப்படி சந்தையில் விற்பனைக்கு வரும் பங்குகளை அந்த நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிக் குவிக்கும். இந்த முறைப்படி ஓராண்டு வரை நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பங்குகளை திரும்ப வாங்குவது உண்டு.
இந்த இரண்டு முறைகளையும் கையாளும் முன் செபியின் அனுமதியை அந்த நிறுவனம் பெற வேண்டும். மேலும் ஒரு பங்குக்கு அதிகபட்சம் எவ்வளவு பணத்தை செலவிடவுள்ளது என்பதையும், அதிகபட்சமாக எவ்வளவு பணத்தை இந்த பங்குகளை வாங்கி முடிக்க செலவிடவுள்ளது என்பதையும் முன்பே செபியிடம் அந்த நிறுவனம் தெரிவிக்க வேண்டும்.
எதற்காக பங்குகளை திரும்ப வாங்குகின்றனர்?:
ஒரு நிறுவனம் எதற்காக தான் விற்ற பங்குகளை தானே திரும்ப வாங்குகிறது?. முதலிலேயே சொன்னது மாதிரி தன்னிடம் உள்ள உபரி வருமானத்தை, பணத்தை தனது நிறுவனத்திலேயே முதலீடு செய்வது ஒரு காரணம். அடுத்தது, அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் தங்களது பங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள முயலும் போதும் பங்குகளை சந்தையிலிருந்து திரும்பப் பெறுவது உண்டு.
இதன்மூலம் சந்தையில் அந்த நிறுவனத்தின் பங்குகளின் எண்ணிக்கை குறைவது மட்டுமல்லாமல், சந்தையில் அதன் மதிப்பு அதிகரிக்கும்போது கிடைக்கும் லாபமும் அதிகரிக்கும்.
அதாவது மிக நல்ல லாபம் ஈட்டும் நிறுவனத்தின் பங்குகள் குறைந்த அளவில் சந்தையில் இருந்தால் லாபம் அதிகம். இதன்மூலம் நிறுவன உரிமையாளருக்கும் அதிக லாபம் கிடைப்பதோடு, பங்குகளை வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் அதிக லாபம்.
இதன்மூலம் அந்தப் பங்குகளை மீண்டும் சந்தையில் விடும்போது அதை வாங்க போட்டி அதிகரிப்பதோடு, அதன் விலையும் மேலும் அதிகரிக்கும்.
இதனால் தான் நிறுவனங்கள் இந்த வேலையில் இறங்குகின்றன!.