இந்திய பங்குச் சந்தையான சென்செக்ஸ் இன்று மதியம் சுமார் இரண்டரை மணிக்கு 36 ஆயிரத்து 425 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாக இருக்கிறது. இது தான் இன்றைய நாளுக்கான குறைந்த பட்ச புள்ளியாக இருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் இன்று மட்டும், 698 புள்ளிகள் இறக்கத்தை தொட்டு வர்த்தகமாகி வருகிறது சென்செக்ஸ்.
இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்தில் இருந்தே சென்செக்ஸ், இறக்கத்திலேயே வர்த்தமாகி வந்ததை முந்தைய செய்தியில் சொல்லி இருந்தோம். அப்போது, ஒருவேளை சென்செக்ஸ் மேலும் இறக்கம் காண தொடங்கினால், 36 ஆயிரத்து 400 பள்ளிகளில் சப்போர்ட் இடத்தில் நிற்கும் என்பதையும் சொல்லி இருந்தோம்.

இன்று வர்த்தகம் ஆகின்ற போக்கை பார்த்தால், இன்று வர்த்தக்க நேரத்திற்குள் 36 ஆயிரத்து 400 என்கிற வலுவான சப்போர்ட் புள்ளியை உடைத்துக் கொண்டு கீழே போகாமல் இருந்தாலே மிகப்பெரிய விஷயம் போல் இருக்கிறது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மோடி தலைமையிலான அரசு இந்திய பொருளாதாரத்தையும் பங்குச் சந்தையையும் தூக்கி நிறுத்த பல்வேறு அறிவிப்புகளை சொல்லி இருந்த போதிலும், சவுதி அரேபியாவின் எண்ணெய் சப்ளை குறைந்ததால் பிரச்சனைகள் வேறொரு பரிமாணத்தை எடுத்திருக்கின்றன.
ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 20 சதவிகிதம் வரை உயர்ந்து இருப்பது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் எழுபத்திரண்டு ரூபாயை நோக்கி வர்த்தகமாகிக் கொண்டிருப்பது போன்றவைகள் இந்திய சந்தையை நேரடியாக பாதித்துக் கொண்டிருக்கின்றன.
ஆட்டோமொபைல், வங்கி, ரியல் எஸ்டேட், நிதி நிறுவனங்கள் போன்ற துறை சார் பங்குகள் சற்றே அதிக இறக்கத்தில் வர்த்தகமாகி சென்செக்ஸின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகின்றன. கிட்டத்தட்ட பி எஸ் இயில் இருக்கும் அனைத்து துறைசார் இன்டெக்ஸ்களும் இறக்கத்திலேயே வர்த்தகமாகி வருகின்றன. எனவே இதற்கு மேல் சந்தையில் வர்த்தகம் மேற்கொள்பவர்கள் மிக மிக ஜாக்கிரதையாக தங்கள் ஆர்டர்களைப் போடுவது அல்லது விற்பது நல்லது என்கிறார்கள் அனலிஸ்டுகள்.
இந்திய சந்தைக்கு எப்போது தான் நேரம் சரியாகுமோ தெரியவில்லை. இது நாள் வரை இந்திய அரசே சென்செக்ஸை கண்டு கொள்ளாமல் இருந்தது. இப்போது சென்செக்ஸை அவர்கள் உயர்த்த நினைக்கும் போது, உலக காரணிகள் அவர்களை பந்தாடிக் கொண்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications