சிறு குறு தொழில்முனைவோர்கள் இல்லாத நாடே கிடையாது எனலாம். எல்லா நாட்டிலும் ஒரு காலத்தில் சிறு குறு தொழில்முனைவோராக இருந்த நிறுவனங்கள் தான், இன்று கொடி கட்டிப் பறக்கு மிகப் பெரிய வணிக சாம்ராஜ்யங்களாக வலம் வந்து கொண்டு இருக்கின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை, சிறு குறு தொழில்முனைவோர்கள், கணிசமான அளவுக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவின் பொருளாதார சக்கரத்திலும், இவர்களுக்கு என்று ஒரு தனி இடமே இருக்கிறது.
அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சிறு குறு தொழில்முனைவோர்கள், இந்த கொரோனா காலத்தில் கையில் பணம் இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதை தீர்க்கும் விதத்தில் மத்திய அரசு, கடந்த மாதம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அடுத்த 45 நாட்களுக்குள், சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு, மத்திய அரசு மற்றும் மத்திய அரசு நிறுவனங்கள் (CPSE - Central Public Sector Enterprises) கொடுக்க வேண்டிய பேமெண்ட் பாக்கி தொகைகளை கொடுப்பதாகச் சொன்னார்கள். ஆனால் இதுவரை பேமெண்டில் வேகம் காட்டியதாகத் தெரியவில்லை.
இப்போது மத்திய ரயில்வே அமைச்சகம், இந்த விஷயத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டு இருக்கிறது. அதற்கு சாட்சியாக, மத்திய ரயில்வே அமைச்சகம், தன் சோனல் ரயில்வே அலுவலகங்கள், உற்பத்தி ஆலைகள் போன்ற ரயில்வே தொடர்பான அனைத்து பிரிவுகளுக்கும் ஒரு உத்தரவைப் பிறப்பித்து இருக்கிறது.
அந்த உத்தரவில், சிறு குறு தொழில்முனைவோர்களுக்குச் செலுத்த வேண்டிய பேமெண்ட் பாக்கி தொகைகளை விரைவில் செலுத்துமாறு அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவுக்குப் பிறகாவது சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு விரைவில் பேமெண்ட் பாக்கி தொகை கிடைக்கும் என நம்புவோம்.
எந்த ஒரு வியாபாரத்துக்கும், பொருட்களை வாங்கியவர்கள் அல்லது சேவையைப் பெற்றவர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பணத்தைக் கொடுத்தால் தானே மேற்கொண்டு வியாபாரத்தை நடத்த முடியும். அப்போது தானே வியாபாரத்தில் பணம் புழங்கும். எத்தனை நாட்களுக்குத் தான் சிறு குறு தொழில் முனைவோர்களும் பணம் இப்போது வரும், அப்போது வரும் என எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்..? இந்த கொரோனா பிரச்சனையை சாக்காக வைத்தாவது முழு பணமும் சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு கிடைக்கட்டும்.