கொரோனா வைரஸால், ஒட்டு மொத்த உலகமும் தன் இயல்பு வாழ்கையை இழந்து இருக்கிறது.
ஒரு நோயால் உலகத்தில் சுமார் 10.15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றால், அனைத்து நாட்டு மக்கள் மனதிலும் ஒரு பயம் வரத் தானே செய்யும்.
அந்த பயம் தற்போது அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. அந்த பயம் + மோசமான பொருளாதார சூழல் காரணமாக, பல்வேறு ஐடி நிறுவனங்கள் வருவாய் இழப்பைச் சந்திக்கத் தொடங்கி இருக்கின்றன.
லே ஆஃப்
இந்த வருவாய் இழப்பைச் சந்திக்க, ஐடி நிறுவனங்கள், வழக்கம் போல லே ஆஃப் அஸ்திரத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள். இந்தியாவின் பல பகுதிகளிலும் ஐடி நிறுவனங்களில் லே ஆஃப் தொடங்கிவிட்டதை நம்மால் செய்திகளில் பார்க்க முடிகிறது. இந்த லே ஆஃப் யாரை அதிகம் பாதிக்கும். எத்தனை பேர் வரை இந்த லே ஆஃப் நடவடிக்கையால் பாதிக்கப்படுவார்கள். வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.
CIEL HR Services
இந்திய ஐடி துறையில் நடக்க இருக்கும் லே ஆஃப்-கள் பெரும்பாலும், சிறிய ஐடி நிறுவனங்களில் தான் நடக்கும், குறிப்பாக பெரிய வாடிக்கையாளர்களை நம்பி இருக்கும் சிறிய ஐடி கம்பெனிகளில் நடக்கும் எனச் சொல்கிறார் CIEL HR Services நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ஆதித்யா நாராயன் மிஸ்ரா.
எத்தனை பேர்
இப்போது தான் கொரோனா வைரஸ் பிரச்சனையால் லே ஆஃப் தொடங்கி இருக்கிறது. அடுத்த 3 முதல் 6 மாத காலத்துக்குள் சுமார் 1.5 லட்சம் ஐடி ஊழியர்கள் தங்கள் வேலையை இழக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள் மனித வள மேம்பாட்டுத் துறை நிபுணர்கள் & துறை சார் வல்லுநர்கள்.
ஐடி நிறுவனங்கள்
இந்தியாவில் சுமார் 45 - 50 லட்சம் பேர், ஐடி துறையில் தான் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இதில் சுமார் 10 லட்சம் பேர் தான் இந்தியாவின் டாப் 5 ஐடி கம்பெனிகளில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு பெரிய அளவில் லே ஆஃப் கவலை இல்லை எனலாம்.
சிறிய கம்பெனிகள்
இன்னொரு 25 - 28 லட்சம் பேர் நடுத்தர மற்றும் ஓரளவுக்கு வளர்ந்த ஐடி கம்பெனிகளில் ஊழியர்களாக வேலை பார்க்கிறார்கள். சுமார் 10 - 12 லட்சம் பேர் சிறிய ஐடி கம்பெனிகளில் தான் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த சிறிய ஐடி கம்பெனிகளில் வேலை பார்த்துக் கொண்டு இருப்பவர்கள் தான், இப்போது லே ஆஃப் பூதத்துக்கு பெரிய அளவில் பலியாக அதிக வாய்ப்பு இருக்கிறது.
இழப்பு
நல்ல சம்பளத்தில் ஐடி வேலையில் சேர்ந்து விட்ட ஒரே காரணத்தினால், இஎம்ஐ-யில் கடன் வாங்கி வீடு, கார், ஸ்மார்ட்ஃபோன் வாங்கியவர்கள் எல்லா இப்போது இ எம் ஐ செலுத்த முடியாமல் தவிப்பார்கள். இந்த இக்கட்டான சூழலில், வேறு வேலை தேடுவதும், கிடைப்பதும் மிகவும் சிரமம். இதை எல்லாம் ஐடி ஊழியர்கள் எப்படி எதிர் கொள்வார்கள்? இவர்களுக்கு அரசு ஏதாவது செய்தால் தானே கொஞ்சமாவது நிம்மதியாக வாழ முடியும்..?