இந்தியாவில், வீட்டில் இருந்தே அலுவலக வேலைகளைப் பார்க்கும் Work from home கலாச்சாரம் கடந்த சில ஆண்டுகளாகத் தான் தலை எடுக்கத் தொடங்கி இருக்கிறது.
இத்தனைக்கும், இன்னும் இது பெரிய அளவில் பரவில்லை. ஆனால் கொரோனா வைரஸ் கட்டாயமாக பரப்பி இருக்கிறது.
கொரோனாவுக்கு முன், Work from home வசதி கொடுக்கும் கம்பெனிகளில், சொந்த ஊரிலேயே இருந்து கொண்டு வேலை பார்க்க "சார், பாட்டிக்கு உடம்பு முடியல... அப்பத்தாவுக்கு மாரடைப்பு..." என பல கதைகளைச் சொல்லி அனுமதி கேட்டு இருப்போம்.
கட்டாயம்
அப்போது எல்லாம் "அப்பத்தாவோ, அம்மாவோ, அது எல்லாம் வேலைக்கு ஆகாது. அலுவலகத்துக்கு வந்தே ஆக வேண்டும்" எனச் சொல்லி இருப்பார்கள். ஆனால் இப்போது, கொரோனா எல்லா கம்பெனி ஊழியர்களையும், அலுவலக கம்ப்யூட்டர், மவுசு சகிதமாக நம்மை வீட்டுக்கு வழி அனுப்பி வைத்தார்கள். இதுவரை Work from home வசதியை அனுபவிக்காத ஊழியர்களைக் கூட, வீட்டில் இருந்தே வேலை பார்க்க வைத்து இருக்கிறது.
ஐடி கம்பெனிகள்
இந்த Work from home வசதி, ஊழியர்களுக்கு ஒரு வித வசதி என்றால், பெரிய கம்பெனிகளுக்கும் பல வகைகளில் வசதியாக இருக்கிறது. உதாரணத்துக்கு ஐடி கம்பெனிகள். ஊழியர்கள், அலுவலகம் வந்து போகிறார்கள் என்றால், போக்குவரத்து, தண்ணீர், மின்சாரம்... என பல செலவுகள் இருக்கும். ஆனால் Work from home என்றால் இந்த செலவுகள் எதுவும் கிடையாது. குறிப்பாக ரியல் எஸ்டேட் செலவுகள் மிச்சம்.
மாற்றம்
இந்த கொரோனா வைரஸ் பிரச்சனையின் போது அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களுக்கு Work from home கொடுக்க வேண்டும். அத்தனை பேருக்குமான டெக்னாலஜி அடிப்படை கட்டமைப்புகளைச் செய்ய வேண்டும். வியாபார முறைகளை, வாடிக்கையாளரின் அனுமதியோடு மாற்ற வேண்டும். இந்த இமாலய வேலையை ஐடி கம்பெனிகள் செய்துவிட்டன என்கிறார் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சேனாபதி கோபாலகிருஷ்ணன்.
90 - 95 % பேர்
எனக்கு தெரிந்த வரை 90 - 95 சதவிகித ஐடி கம்பெனி ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த மாற்றத்தை மிக மிக விரைவாகவும், சிக்கல் இல்லாமலும் செய்து இருக்கிறார்கள். இனி Work from home ஐடி கம்பெனிகளில் இது ஒரு அங்கமாக இருக்கும் எனச் சொல்லி இருக்கிறார் சேனாபதி.
எதுக்கு அலுவலகம்
சேனாபதி கோபால கிருஷ்ணன் தற்போது ஸ்டார்ட் அப் கம்பெனிகளில் முதலீடு செய்யும் Axilor Ventures என்கிற கம்பெனியில் தலைவராக இருக்கிறார். இப்போது இந்திய ஸ்டார்ட் அப் கம்பெனிகள், வீட்டில் இருந்தே எல்லா வேலைகளையும் செய்து கொள்ள முடிகிறதே... தங்களுக்கு அலுவலகம் வேண்டுமா என யோசித்துக் கொண்டு இருக்கிறார்களாம்.
20 - 30 % பேர்
இந்தியாவில் 20 - 30 சதவிகித ஐடி ஊழியர்கள், (எண்ணிக்கையில் சுமாராக 10 - 12 லட்சம் பேர்) கொரோனா வைரஸ் லாக் டவுன் காலத்துக்குப் பின்பும் கூட, வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் நிலை வரலாம் எனச் சொல்லி இருக்கிறார் முன்னாள் இன்ஃபோசிஸ் தலைவர் சேனாபதி கோபால கிருஷ்ணன்.
வேலை இழப்பு
மேலும் பேசிய சேனாபதி "தற்போது ஐடி கம்பெனிகளில் பெரிய அளவில் லே ஆஃப் இல்லை, அதே போல புதிதாக வேலைக்கு எடுப்பதும் பெரிய அளவில் இல்லை, காரணம் வியாபாரத்தில் வளர்ச்சி இல்லை" எனச் சொல்லி இருக்கிறார். சம்பள குறைப்புகள் இருக்கலாம் எனவும் சொல்லி இருக்கிறார்.