
இது குறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் கடந்த மாதம் (ஜூன்) 20ம் தேதி ஒருநாள் அதிகபட்ச மின் பயணீட்டு அளவு 243.880 மில்லியன் யுனிட் அளவை எட்டியது. இதன் தொடர்ச்சியாக, கடந்த 26ம் தேதி மாலை 6.30 மணி அளவில் மின்தடை ஏதும் இன்றி மாநிலத்தின் மின் தேவை அதிகபட்சமாக 11,283 மெகாவாட் அளவை எட்டி உள்ளது. இது கடந்த ஆண்டின் அதிகபட்ச மின் தேவையான 10,859 மெகாவாட்டை விட 424 மெகாவாட் அதிகமாகும்.
மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் மற்றும் மின் தொடரமைப்பு கழகம் மேற்கொண்ட பெரு முயற்சியினாலும், காற்றாலையில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு அடிக்கடி அதிகரிப்பதாலும் இந்த அதிகபட்ச மின் தேவையை, மின் தடையின்றி பூர்த்தி செய்ய முடிந்தது. மேலும் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, காவிரி டெல்டா பகுதிகளுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.
மாநிலத்தின் அதிகபட்ச மின்தேவையை மின்தடையின்றி கடந்த 26ம் தேதி மாலை 6.30 மணியளவில் பூர்த்தி செய்த போதிலும், காற்றாலை மின்சாரத்தின் நிலையற்ற தன்மையால் கடந்த ஒரு வார காலத்தில் தினமும் பெறப்படும் மின்சாரத்தின் அளவு 60 முதல் 82 மில்லியன் யுனிட் ஆக வேறுபடுகிறது. இதன் காரணமாக அடிக்கடி காற்றாலை மின்சாரம் குறையும் நேரங்களில் கூடுதலாக மின்தடை செய்யப்படுகிறது.
மேலும் தென்மேற்கு பருவமழை தாமதமாகி, சரிவர பெய்யாவில்லை. இதனால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசனத்திற்காக நீர் உரிய நேரத்தில் விடுவிக்கப்படாததால், புனல் மின்உற்பத்தி அளவு வெகுவாக குறைந்துள்ளது. மாநில மற்றும் மத்திய மின்நிலையங்களில் ஏற்படும் பராமரிப்பு மற்றும் எதிர்பாராத பழுதுகளாலும் மின்உற்பத்தி அளவு அடிக்கடி குறைகிறது.
நடைமுறையில் உள்ள புதிய மின்திட்டங்களான கூடங்குளம், வடசென்னை, வள்ளூர் கூட்டுமுயற்சி அனல்மின் திட்டம், மேட்டூர் நிலை-3 மற்றும் புனல் மின்திட்டங்கள் ஆகியவை மின்உற்பத்தியை துவங்கும் போது, தமிழகத்தில் மின்பற்றாக்குறை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications