2000ம் ஆண்டில் இந்திய பங்குச் சந்தையில் மாபெரும் மோசடிகளில் ஈடுபட்டு ரூ. 1,000 கோடியை விழுங்கி, கூட்டுறவு வங்கியான மதாவ்புரா மெர்க்கன்டைல் கூட்டுறவு வங்கியையே திவாலாக்கியவர் கேதன் பரேக். இவர் இன்னொரு பங்குச் சந்தை பிராடு ஹர்ஷத் மேத்தாவின் சிஷ்யர்.
இதையடுத்து 2017ம் ஆண்டு வரை இந்திய பங்குச் சந்தைகளில் எந்த வர்த்தகத்திலும் ஈடுபடக் கூடாது என்று பரேக்குக்கு கடந்த 2003ம் ஆண்டு செபி தடை விதித்தது.
ஆனாலும் மறைமுகமாக அவர் இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். இந் நிலையில், இவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சில முக்கிய நிறுவனங்களின் பங்கு விலைகளை செயற்கையாக கூடச் செய்து வருவதாக உளவுப் பிரிவான ஐபி மத்திய அரசை எச்சரித்துள்ளது.
திவான் ஹவுசிங், கோயங்கா டைமண்ட்ஸ், ஆர்சிட் கெமிக்கலஸ், ஐவிஆர்சிஎல், பேண்டலூன், திரிபுவன்தாஸ் பீம்ஜி ஷவேரி ஐபிஓ, ஜிஎம்ஆர் இன்ப்ரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலைகளை circular trading, insider trading போன்ற முறைகேடான வழிகளைப் பயன்படுத்தி கூட்டி விட்டு வருவதாக ஐபி கூறியுள்ளது.
இந்த விஷயத்தில் கேத்தன் பரேக்குக்கு இரு முக்கிய பங்குச் சந்தை புரோக்கர்கள் உதவி வருவதாகவும் தெரிகிறது என்று ஐபி கூறியுள்ளது. இந்த விவகாரம் வெளியில் வந்ததையடுத்து இந்த நிறுவனங்களின் பங்கு விலைகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.