மனேசர்: மானேசரில் உள்ள மாருதி தொழிற்சாலையில் நடந்த கலவரத்திற்கும் நக்சல் தீவிரவாதிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது முதல் கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஹரியானா மாநிலம் மானேசரில் உள்ள மாருதி தொழிற்சாலையில் ஒரு தொழிலாளி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதை எதிர்த்து சக ஊழியர்கள் நேற்று முன்தினம் தொழிற்சாலைக்கு வெளியே வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அன்று மாலை திடீர் என்று தொழிலாளர்கள் தொழிற்சாலைக்குள் புகுந்து அங்குள்ள கார்களை அடித்து நொறுக்கியும், பலவற்றுக்கு தீவைத்தும், அதிகாரிகளை தாக்கியும் வன்முறையில் ஈடுபட்டனர். அந்த வன்முறையின்போது ஹெச்.ஆர். பொது மேலாளர் அவனிஷ் குமார் தேவ் அடையாளம் தெரியாத அளவுக்கு எரித்துக் கொல்லப்பட்டார். மேலும் வன்முறையில் 100 பேர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து அந்த தொழிற்சாலை மூடப்பட்டது. வன்முறையில் ஈடுபட்ட 100 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். முதலில் எரித்துக் கொல்லப்பட்டவர் யார் என்றே தெரியாமல் இருந்தது. அதன் பிறகு அவனிஷின் குடும்பத்தார் அவரது உடலை அடையாளம் கண்ட பிறகே கொல்லப்பட்டது பொது மேலாளர் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு நடத்திய முதற்கட்ட விசாரணையில் மானேசர் கலவரத்திற்கும் நக்சலைட்டுகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. இந்த தகவலை மத்திய அரசு தெரிவி்த்துள்ளது.