தமிழக அரசின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா ஈரோட்டில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் வழங்கினார்.
பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழத்தில் தற்போது நிலவிவரும் மின் வெட்டு படிப்படியாக குறையும் வாய்ப்பு உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. காவிரி பிரச்சனையில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும் செப்டம்பர் 3ம் தேதி நடக்கிறது. இதில் தமிழ்நாட்டுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்று நம்புகிறோம்.
மணல் தட்டுப்பாட்டை போக்க மூடப்பட்டுள்ள மணல் குவாரிகளுக்கு பதில் திருச்சி, கரூர், தஞ்சை பகுதிகளில் 46 புதிய மணல் குவாரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் செயற்கை மணல் உற்பத்திக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. செயற்கை மணல் உற்பத்தி செய்ய 100க்கும் மேற்பட்டோர் அனுமதி கேட்டுள்ளனர். இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி பெற்று விரைவில் புதிய குவாரிகள் தொடங்கப்படும்.
எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து ஈரோட்டில் விமர்சனம் செய்துள்ளார். தேர்தல் நேரத்தில் அவர் எங்களுடன் தான் இருந்தார் . தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் அம்மா சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இதை பொறுத்துக்கொள்ள முடியாமல், அரசின் நலத்திட்டங்களை விஜயகாந்த் விமர்சித்து வருகின்றார். ஆனால் இதைச் சொல்ல அவருக்கு அருகதை இல்லை. அதே போல முதல்வரைப் பற்றியும் பேசவும் அவருக்கு தகுதியில்லை என்றார்.