சென்னை: கமிஷன் தொகையை உயர்த்திடக் கோரி பெட்ரோல் டீலர்கள் வரும் அக்டோபர் மாதம் 15ம் தேதி முதல் 8 மணிநேரம் மட்டுமே பெட்ரோல் பங்குகளை திறந்து வைக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு பெட்ரோல் டீலர்கள் சங்க மாநிலச் செயலாளர் எம்.ஹைதர் அலி கூறுகையில்,
தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்தால் டீலருக்கு ரூ.1.49 கமிஷனாகக் கிடைக்கிறது. இந்த கமிஷன் தொகையை ரூ.1.60க உயர்த்த வேண்டும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் நியமித்த அபூர்வா சந்தர் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. ஆனால் அந்த கமிட்டியின் பரிந்துரை இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
மேலும் தற்போது பெட்ரோலுக்கு வழங்கப்பட்டு வரும் கமிஷன் தொகை லிட்டர் விற்பனை அடிப்படையில் தான் நிர்ணயிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக விலை அடிப்படையில் கமிஷனை நிர்ணயிக்க வேண்டும் என்பது எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கை ஆகும். அதுவும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய பெட்ரோல் டீலர்கள் சம்மேளனம் வரும் அக்டோபர் மாதம் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யாமல் இருக்கும் போராட்டத்தை நடத்தவுள்ளது. இது போன்ற போராட்டம் வரும் 1 மற்றும் 2ம் தேதிகளில் தமிழகத்திலும் நடக்கும்.
இதையடுத்து வரும் அக்டோபர் 15ம் தேதி முதல் 8 மணிநேரம் மட்டுமே பெட்ரோல் பங்குகள் இயங்கும் போராட்டத்தை நடத்தவிருக்கிறோம் என்றார்.