மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் நடந்து வரும் அகலப் பாதை சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து வருவதால், அங்கு அறிவிக்கப்பட்ட ரயில் போக்குவரத்து மாற்றம் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மதுரை இடையிலான அகலப் பாதை இரட்டைப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த பாதையை தற்போது மதுரை ரயில் நிலையத்துடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
செப்டம்பர் 30ம் தேதி முதல் இந்தப் பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக மதுரையிலிருந்து புறப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் கூடல் நகர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்கின்றன.
தற்போது இந்த மாற்றம் வருகிற 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:
வண்டி எண் 22621 ராமேசுவரம்-கன்னியாகுமரி வாரம் மும்முறை ரயில் ஏற்கனவே கடந்த 29, 1, 4, 6, 8, 11-ந் தேதிகளில் ரத்து செய்யப்பட்டிருந்தது.
தற்போது அந்த ரயில் 13, 15, 18 ஆகிய 3 நாட்களுக்கும் சேர்த்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதே போன்று கன்னியாகுமரி-ராமேசுவரம் (வண்டி எண்-22622) ரயில் கடந்த 30, 2, 5, 7, 9, 12 ஆகிய நாட்களில் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டிருந்தது. அது மேலும் 14, 16, 19 ஆகிய 3 நாட்களுக்கும் ரத்து செய்யப்படுகிறது.
வண்டி எண் 12635 சென்னை-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ஏற்கனவே 12-ந்தேதி வரை கூடல்நகருடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது 19-ந்தேதி வரை மேலும் 7 நாட்களுக்கு கூடல்நகரோடு நிறுத்தப்படுகிறது.
வண்டி எண் 12636 மதுரை - சென்னை வைகை எக்ஸ்பிரஸ் 13-ந்தேதி வரை கூடல்நகரில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அது 19-ந்தேதி வரை மேலும் 7 நாட்களுக்கு கூடல் நகரில் இருந்து புறப்படும்.
சென்னை-மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் 12-ந்தேதி வரை கூடல்நகருடன் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் 7 நாட்களுக்கு, 19-ந்தேதி சென்னையில் இருந்து புறப்படும் ரயில் 20ம் தேதி வரை கூடல்நகருடன் நிறுத்தப்படுகிறது.
எதிர்முனையில் மதுரை-சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் 12-ந் தேதி வரை கூடல்நகரில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது அது மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு, 19-ந்தேதி வரை கூடல்நகரில் இருந்து புறப்படும்.
வண்டி எண் 22628 நெல்லை-திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 12-ந் தேதி வரை நேரமாற்றம் இன்றி இயக்கப்படும். மாறாக 7-ந்தேதி, 19-ந்தேதி ஆகிய 2 நாட்கள் மட்டும் இந்த ரயில் நெல்லையில் இருந்து பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 16788 ஜம்முதாவி-நெல்லை வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் 11-ந்தேதி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 1 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும்.
வண்டி எண் 16127 சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் 12-ந்தேதி 65 நிமிடம் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது மாற்றப்பட்டு, 19-ந்தேதி இந்த ரயில் திண்டுக்கல்லில் 85 நிமிடங்கள் நிறுத்திவைக்கப்படும். 12-ந்தேதி அந்த ரயில் வழக்கம் போல் இயக்கப்படும்.
வண்டி எண் 56825 ஈரோடு-நெல்லை பாசஞ்சர் ரயில் 12-ந்தேதி 40 நிமிடம் நிறுத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்று அந்த ரயில் வழக்கம் போல் இயக்கப்படும். அதற்கு பதில், 19-ந்தேதி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் அந்த ரெயில் 40 நிமிடம் நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.