பெங்களூர்:கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கான லைசென்ஸ் ரத்தாகி விட்டதால் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாமல் அதன் ஊழியர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர். இந்த வேலையை நம்பி பெரும் பெரும் செலவுகளைச் செய்து விட்ட பலர் கடனில் மூழ்கும் அபாயத்தில் உள்ளனராம். பேசாமல் இந்த வேலைக்குப் பதில் ஆட்டோ ஓட்டிப் பிழைத்துக் கொள்ளலாம் என்றும் விரக்தியில் ஊழியர்கள் புலம்புகின்றனர்.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்களுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் சம்பளவே வரவில்லை. பலர் வேறு வேலை தேட ஆரம்பித்து விட்டனர். ஆனால் சம்பளப் பாக்கிக்காக அவர்கள் தவித்துக் கொண்டுள்ளனர். வேலையை விட்டுப் போய் விட்டால் சம்பளப் பாக்கியை வாங்க முடியாமல் போய் விடுமே என்ற தவிப்பிலும் அவர்கள் உள்ளனர்.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் டெக்னீஷியனாகப் பணியாற்றி வரும் ஹர்தயாள் சிங் என்பவர் கூறுகையில், எனது குழந்தைகளை பெரும் பொருட் செலவில் படிக்க வைத்து வந்தேன். ஆனால் தற்போது எனது வேலை கேள்விக்குறியாகியிருப்பதால் எனது குழந்தைகளை சாதாரண பள்ளிக்கு மாற்ற வேண்டியதாகி விட்டது.
நான் எனது மாமனாரிடம் ரூ. 5 லட்சம் கடன் வாங்கியுள்ளேன். வங்கியில் ரூ. 10 லட்சம் கடன் வாங்கியுள்ளேன். இப்போது இதை எப்படி அடைக்கப் போகிறேன் என்பது தெரியவில்லை. பெரும் அதிர்ச்சியில் உள்ளேன. பேசாமல் எனது கிராமத்திற்கேப் போய் விடலாம் போல உள்ளது என்றார். இவர் பீகாரைச் சேர்ந்தவர்.
சமீபத்தில் ஒரு ஊழியரின் மனைவி தனது கணவரின் நிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து தற்கொலையே செய்து கொண்டு விட்டாராம் டெல்லியில்.
மகேஷ் வர்மா என்ற என்ஜீனியர் கூறுகையில், எனது குடும்பத்தின் நிலை பெரும் கவலைக்குரியதாக மாறியுள்ளது. எனது குழந்தைகளுக்கு நல்ல டிரஸ் எடுக்க முடியவில்லை, சாப்பாடு தர முடியவில்லை. செப்டம்பர் மாதம் எங்களை வீட்டை விட்டு துரத்தி விட்டார் வீட்டு உரிமையாளர். இப்போது எனது மைத்துனரின் வீட்டில் நாங்கள் தஞ்சமடைந்துள்ளோம்.
வேறு வழியில்லாததால், எனது மனைவி மற்றும் குழந்தைகளை உ.பியில் உள்ள எனது கிராமத்திற்கே அனுப்பி விட்டேன். வேறு வேலை தேட வேண்டும். ஆட்டோ டிரைவர் வேலை கிடைத்தால் கூட செய்யலாம் என்று முடிவு செய்துள்ளேன் என்றார் அழாத குறையாக.
இந்த சோகக் குரல் வெளிநாடுகளில் போய் குஜாலாக இருக்கும் மல்லையாக்கள் காதில் விழுமா என்பதுதான் தெரியவில்லை...