
தீபாவளி பண்டிகையையொட்டி மதுரையில் உள்ள திரையரங்களில் பிரபல நடிகர்களின் படங்கள் திரையிடப்பட்டுள்ளன. புதிய படங்களைப் பார்க்க மக்கள் பலர் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் நியாயமான கட்டணம் வசூலிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் திரையரங்குகளுக்கு நேரில் சென்று டிக்கெட் எடுத்தவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. சாதாரண வகுப்புக்கு கூட ரூ.100, ரூ.150 வசூலிக்கப்பட்டது என்ற புகார் எழுந்துள்ளது.
திரையரங்கு ஊழியர்கள் முதல் 4 பேருக்கு மட்டும் நியாய விலையில் டிக்கெட்டை கொடுத்துவிட்டு கவுண்ட்டரை மூடிவிடுகிறார்களாம். அதன் பிறகு அவர்களே திரையரங்கிற்கு வெளியே அதே டிக்கெட்டை கூடுதல் விலைக்கு பிளாக்கில் விற்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
ஒரு பக்கம் கட்டணக் கொள்ளை மறுபக்கம் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிள் கூட முறையாக செய்து கொடுக்கப்படவில்லை என்று மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மதுரையில் அரசு விதிகளை மீறி கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்ட தியேட்டர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தது போன்று இந்த ஆண்டும் செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.


Click it and Unblock the Notifications