சமீபத்தில் ஏர்டெல் 199,870,006 புதிய பங்குகளை வெளியிட்டிருக்கிறது. ஒரு பங்கின் விலை ரூ.340 என்று நிர்ணயித்திருந்தது. இதை அறிந்த கத்தார் ஃபவுண்டேசன் என்டோவ்மென்ட் (QFE) நிறுவனம் ஏர்டெல்லின் 5% பங்குகளை வாங்கி இருக்கிறது.
"வெளிநாட்டைச் சேர்ந்த கியுஎஃப்இ நிறுவனம், இந்திய நிறுவனமான ஏர்டெல்லின் பங்குகளை அதிக அளவில் வாங்கியிருப்பது, பங்குப் பரிவர்த்தனையின் ஒரு புதிய மைல்கல் ஆகும். இதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் அதிகமாக முதலீடு செய்ய முன்வருவார்கள். மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் அதிகமாக முதலீடு செய்ய இந்த பரிவர்த்தனை ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுக்கும். அதோடு கியுஎஃப்இ நிறுவனத்தோடு ஒரு இனிமையான உறவைத் தொடர நாங்கள் விரும்புகிறோம்" என்று ஏர்டெல்லின் சேர்மன் சுனில் பாரதி மிட்டல் தெரிவித்திருக்கிறார்.
புதிய பங்குகளின் பரிவர்த்தனையின் மூலம் ஏர்டெல்லின் மூலதனம் ரூ.19,987,000,510 அளவிற்கு உயர்ந்திருக்கிறது. ஒரு பங்குக்கு ரூ.5 வீதம் 3,997,400,102 பங்குகள் விற்பனையாகி இருக்கின்றன.
மேற்கண்ட் புதிய பங்குகள் வெளியீடு சம்பந்தமாக, கடந்த மே மாதம் 3 அன்று, ஏர்டெல் மற்றும் கியுஎஃப்இ நிறுவனங்கள் இணைந்து ஒரு புதிய ஒப்பந்தத்தை வெளியி்ட்டன. 5% பங்குகளை வாங்கியதன் மூலமாக, ஏர்டெல்லின் ஆட்சி மன்ற குழுவில் கியுஎஃப்இ நிறுவனத்திற்கு ஒரு உறுப்பினர் பதவி கிடைத்திருக்கிறது.
இதைப் பற்றி கியுஎஃப்இ நிறுவனத்தின் தலைமை மேலாளர் கூறும் போது, "நாங்கள் செய்திருக்கும் முதலீட்டிற்கு, பாரதி ஏர்டெல் நிறுவனம் அளிக்கும் ஆதரவை நினைத்து நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். ஏர்டெல்லின் ஒரு முதலீட்டாளர் என்ற முறையில், ஏர்டெல் நீண்ட காலம் நிலையான வளர்ச்சியைப் பெற எங்கள் ஆதரவை வழங்குவோம்" என்று தெரிவித்திருக்கிறார்.