சென்னை: சேமிப்புக் கிடங்குகளில் இருப்பதாக தேசிய ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் (NSEL) கூறிய பொருட்களின் அளவு குறித்து சந்தேகம் இருப்பதால், சுமார் 13,000 முதலீட்டாளர்களின் பண்டக சந்தை மூலதனம் கேள்விக்குறியாகியுள்ளது.
தேசிய ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் நிறுவனத்தை சார்ந்த தரகு நிறுவனங்களின் தரகர்கள், சேமிப்புக் கிடங்குகளுக்கு சென்று பொருட்களின் அளவுகளை சோதனை இட்டதாக கூறப்படுகிறது. NSEL கூறியது போல் கிடங்குகளின் பொருட்களின் கையிருப்பு நிலை சரிவர இல்லை என நம்பப்படுகிறது.
கிடங்குகளில் உள்ள பொருட்களைப் பற்றி பதிவேடுகளில் தவறான கணக்குகள் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், 13,000 முதலீட்டாளர்களின் பண்டக சந்தை மூலதனம் ஒரு பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
NSEL நிறுவனர் ஜிக்னேஷ் ஷா, எவ்வாறு NSEL முதலீட்டாளர்களுக்கு ரூ 5,500 கோடியை திருப்பிச் செலுத்த போகிறது என்று விரைவில் அறிவிப்பார் என நம்பப்படுகிறது.
பண்டகச் சந்தையின் ஒழுங்கு முறை ஆணையமான பண்டகச் சந்தைகள் ஆணையம், திங்களன்று நுகர்வோர் விவகார அமைச்சகத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையில் இந்த பிரச்சினையப் பற்றிய விவரங்களை தெரிவித்துள்ளதாக எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
முன்னோக்கு ஒப்பந்தங்களை வர்த்தகச் சந்தையில் பரிமாற்றம் செய்யக் கூடாது என்ற விதியை மீறி NSEL அதிகாரிகள் முன்னோக்கு ஒப்பந்தங்களை வழங்கியபோது இந்த பிரச்சினைகள் தொடங்கின. பின்னர் விதிமீறல் குற்றத்திற்காக தடைசெய்யப்பட்ட பின்னர் தனது செயல்பாடுகளையும் கடமைகளையும் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.
பைனான்சியல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஒரு அமைப்பான தேசிய ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் (NSEL) பல் பொருள் பண்டப் பரிமாற்று வர்த்தகத்தை இயக்கும் தளமாகும். இந்த நிறுவனத்தின் கீழ் ஒன்பது பரிமாற்றகங்களும் நான்கு சுற்றுச்சூழல் திட்டங்களும் உள்ளன.