சென்னை: பணவீக்க குறியீட்டு தேசிய சேமிப்பு பத்திரங்கள் (IINSS-C) சிபிஐ அல்லது நுகர்வோர் விலை பணவீக்க குறியீட்டுடன் தொடர்புடையது. இத்தகைய பத்திரகளில் முதலீடு செய்ய சில்லறை முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இதற்கு காரணம் இப்பத்திரம் நுகர்வோர் விலை பணவீக்க குறியீட்டுடன் நேரடி தொடர்பு உடையதால் அதிகப்படியான லாபம் கிடைக்கும். எனவே இப்பத்திரங்களை டிசம்பர் மாத கடைசியில் அல்லது இம்மாதம் 15 ஆம் தேதி பின்னர் சில்லரை முதலீட்டாளர்களுக்கென் தனியே வெளியிட ஆர்பிஐ திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது.
மேலும் இப்பத்திரங்களின் சில முக்கிய அம்சங்களைப்பற்றி இங்கு பார்க்கலாம்.
குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச முதலீட்டுத் தொகை:
சிபிஐ-யில் இணைக்கப்பட்ட குறியீட்டு முதலீட்டுப்பத்திரங்களின் ஃபேஸ் வாலியூ ரூ.5000 ஆகும், அதாவது, ஒரு முதலீட்டாளர் இவ்வாறான முதலீட்டுப்பத்திரங்களில் முதலீடுசெய்ய விரும்பினால் குறைந்தபட்சமாக ரூ.5000 முதலீடு செய்ய வேண்டும். மேலும் இவ்வாறான பத்திரங்களில், ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சமாக முதலீடு செய்யகூடிய தொகை ரூ.5 லட்சம்.
முதிர்ச்சிக் காலம்(மெச்யூரிட்டி டெர்ம்):
இந்த முதலீட்டுப் பத்திங்களின் முதிர்ச்சிக் காலம் 10 வருடங்கள் ஆகும். இருப்பினும், தண்டனைக் கட்டணத்துடன் கூடிய மீட்சிகாலம் மூத்த குடிமக்களுக்கு ஒருவருடத்துக்குப் பின்னரும் மற்றும் ஏனைய குடிமக்களுக்கு 3 வருடங்களுக்கு பின்னரும் அனுமதிக்கப்படும்.
கடன் உத்தரவாதமாக பயன்படுத்தக்கூடிய தகுதி:
வங்கிகள் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவதற்கான உத்தரவாதமாக IINSS-C பத்திரங்களை பயன்படுத்த முடியும்.
வருடாந்திர வட்டி விகிதம்:
சிபிஐ-லிங்க்ட் குறியீட்டு பத்திரங்களுக்கு, உண்மை வட்டி விகிதம் (ஆண்டுக்கு 1.5% நிலையான வட்டி) + பணவீக்க விகிதம் என்ற அடிப்படையில் அரையாண்டுக்கு ஒருமுறை கூட்டு வட்டிவிகிதம் வழங்கப்படும். ஆகவே சிபிஐ 9% ஆக இருந்தால், ஒரு முதலீட்டாளருக்கு 10.5% (9%+1.5%) வட்டி வழங்கப்படும்.
நாமினி நியமனம்:
ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தனிநபர்களை முதலீட்டு பத்திரதாரர் நாமினியாக நியமிக்க முடியும், பத்திரதாரர் இறக்க நேரிட்டால் பத்திர உரிமை கூப்பன் விகிதத்தில் நாமிக்கு வழங்கப்படும். ஒரு என்ஆர்ஐ கூட நாமினியாக நியமிக்கப்பட முடியும்.
ஏனைய கடன்பத்திரங்களைவிட சிபிஐ -லிங்க்ட் குறியீட்டு பத்திரங்கள் ஒரு சிறந்த தேர்வா?
வங்கி நிலையான வைப்புகளுடன் ஒப்பிடுகையில், எஃப்டிகளுக்கான தற்போதைய சராசரி வட்டி விகிதம் சிபிஐ குறியீட்டுக்கு குறைவாக உள்ளதால், சிபிஐ-லிங்க்ட் குறியீட்டுப் பத்திரங்களுக்கு உயர் வட்டி விகிதம் வழங்கப்படும். இருப்பினும், வரிவிலக்கு கடன்பத்திரங்கள் மற்றும் வருங்கால வைப்பு நிதிகள்(பிபிஎஃப்) உள்ளிட்ட ஏனைய கடன்பத்திரங்களுடன் ஒப்பிடுகையில், சிபிஐ-லிங்க்ட் கடன் பத்திரங்களில் இருந்து ஈட்டும் வட்டி வருவாய்க்கு வரிவிலக்கு இல்லை என்பதால் உயர் வருமானவரி பிரிவில் உள்ளடக்கப்படும் முதலீட்டாளர்களுக்கு வரிவிலக்கு வசதி கிடைக்காது.