டெல்லி: நாட்டின் மிகப்பெரும் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தன் பணியாளர்களுக்குப் பங்குகளை விற்பதன் மூலம் 1200 கோடி ரூபாயை 2014-15 ஆம் ஆண்டில் திரட்ட திட்டமிட்டுள்ளது. தற்போது அதன் பணியாளர்களின் எண்ணிக்கை 2.28 லட்சம் என்பது குறிப்பிடதக்கது.
அந்த வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கூறுகையில், இந்தத் திட்டம் சுமார் 800 கோடி முதல் 1200 கோடி ரூபாய் வரை பெறுமானமுள்ளது எனத் தெரிவித்தார். இந்த பங்கு வெளியீட்டின் அளவு அவ்வங்கி வெளியிடவுள்ள பங்குகளின் விலையைப் பொருத்து அமையும் என அவர் தெரிவித்தார்.
அமைச்சக ஒப்புதல்
"நாங்கள் 800 முதல் 1200 கோடி ரூபாய் வரையிலான பணியாளர் பங்கு வர்த்தகத் திட்டத்தினை எதிர்நோக்கியுள்ளோம். இதற்கான ஒப்புதலை நிதியமைச்சகத்திடம் இருந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தத் திட்டம் அடுத்த ஆண்டில் துவங்கப்படும்" என பட்டாச்சார்யா வெள்ளிக்கிழமையன்று டாடா மருத்துவ மையத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது தெரிவித்தார்.
இத்திட்டம் அனைவருக்கும் பொருந்தும்
அனைத்து வங்கி அலுவலர்கள் மற்றும் எழுத்தர் உள்ளிட்ட அனைத்து வங்கிப்பணியாளர்களும் இதற்குத் தகுதி உடையவர்கள் எனவும் பங்குகள் சலுகையில் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
சலுகை விலையில் பங்குகள்
"பங்குகள் சலுகையில் வழங்கப்படும். இல்லையென்றால் அது ஏற்கக்கூடியதாக இருக்காது. ஏனென்றால், அவர்கள் நேரடியாக சந்தையிலேயே வாங்கிக்கொள்ள இயலும்" என்று கூறிய அவர் தள்ளுபடியின் அளவு குறித்துத் தெரிவிக்கவில்லை.
பங்கு விலை
மும்பை பங்குச் சந்தையில், எஸ்பிஐ-யின் பங்குகள் 1691.35 ரூபாயில் 42.60 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தன.
வராக் கடன்
அந்த வங்கி வராக் கடன்களையும் குறைக்கவும் அதன் மூலம் கடன் மதிப்பீட்டை அதிகரிக்கவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக பட்டாச்சார்யா தெரிவித்தார். வராக்கடன்களை சொத்துச் சீரமைப்பு நிறுவனங்களுக்கு விற்றுவிடவும் ஆலோசித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பயன்தரா சொத்துகள்
அவ்வங்கியின் மொத்த பயன்தரா சொத்துகளின் மதிப்பு விகிதம் 43 அடிப்படைப் புள்ளிகள் உயர்ந்து 5.73 சதவிகிதத்தை கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் அடைந்தது. இது கடந்த ஆண்டு 5.30 சதவகிதமாக இருந்தது.
நிகர பயன் தரா சொத்துகள்
நிகர பயன் தரா சொத்துகளின் மதிப்பு இந்த கால கட்டத்தில் கடந்த ஆண்டின் 2.59 சதவிகிதத்திலிருந்து 3.24 சதவிகிதமாக உயர்ந்தது.