டெல்லி: இந்தியாவில் ஏற்கனவே ஏகப்பட்ட விமான நிறுவனங்கள் லாபத்திற்காக அடித்துகொள்ளும் நிலையில், இந்திய விமானத்துறை அமைச்சகம் புதன் கிழமை 6 புதிய நிறுவனத்திற்கு விமான சேவை அளிக்க தடையற்ற (NOC)சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த 6 நிறுவனங்களின் விண்ணப்பங்களும் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு இருந்தவை.
ஏர் ஒன், பிரீமியர் ஏர், ஜூயஸ் ஏர்வேஸ், டர்போ மேகா, ஏர் கார்னிவல் மற்றும் ஜாவ் ஏர்வேஸ் ஆகிய 6 நிறுவனங்களுக்கு விமானத்துறை அமைச்சகம் NOC சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த 6 நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் டாடா-சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்ட நிறுவனம் விமான சேவைக்கு ஒப்புதல் பெற்றநிலையில் இந்த வருட இறுதிக்குள் தனது சேவையை இந்தியாவில் துவங்க உள்ளது.
ஏர் பிகாசஸ்
இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு விமான சேவை துவங்கிய ஏர்ஏசியா தனது அதிரடி சலுகை விலையின் காரணமாக அதிகளவிலான வாடிக்கையாளரை பெற்றுள்ளது. இந்நிலையில் ஏர் பிகாசஸ் என்னும் புதிய நிறுவனம் இந்தியாவில் மலிவான விமானச் சேவை வழங்குவதற்கான இறுதிக்கட்ட ஒப்பதல் பணியில் உள்ளது.
ஏர் சஹாரா டூ ஏர் ஒன்
ஏர் சஹாரா நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரியான அலோக் ஷர்மா இப்போது ஏர் ஒன் நிறுவனத்தின் தலைவராகியுள்ளார். விமானச் சேவைக்கான ஒப்புதல் பெற்ற 6 நிறுவனங்களில் ஏர் ஒன் நிறுவனமும் ஒன்று. இந்தியாவில் விமான சேவை அளிக்க ஒப்புதல் கிடைத்த நிலையில் நாங்கள உலக நாடுகளுக்கும் பறக்க எங்களை தயார் செய்ய உள்ளோம் என்று தெரிவித்தார்.
இந்தியாவில்..
இந்தியா வானில் ஏற்கனவே ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், ஜெட்லைட், இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், கோ ஏர், ஏர் கோஸ்டா மற்றும் ஏர்ஏசியா ஆகிய 8 நிறுவனங்கள் பறந்து கொண்டு இருக்கிறது.
மலிவு விலை விமானகள்
2005ஆம் ஆண்டு இந்தியா சந்தையில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ், கோ ஏர் மற்றும் ஸ்பைஸ் ஜெட் ஆகிய நிறுவனங்கள் மீண்டும் இறங்கியது இந்த நிறுவனங்களுடன் சேர்த்து இண்டிகோ நிறுவனமும் மலிவான விமான சேவையை வழங்கியது.
பத்து வருட காலத்தில்
இந்தியாவில் அடுத்த 10 வருட காலகட்டத்தில் 20க்கும் அதிகமான விமான நிறுவனங்கள் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விமான போக்குவரத்து கட்டணங்கள் அதிகளவில் குறையவும் வாய்ப்புகள் உள்ளது. எல்லாம் நன்மைக்கே..