டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமான சன் நெட்வொர்க் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக 300 அதிவேக பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்திய வழக்கில் தொடர்புடைய முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதி மாறனின் தனிச் செயலாளர் வி.கவுதமன் சிபிஐ ஆதிகாரிகள் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் சன் டிவி பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் 20.70 புள்ளிகள் (5.07%) குறைந்து 391.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
300 அதிக வேக இணைப்புகள்
காங்கிரஸ் ஆட்சியில் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது தனது சென்னை வீட்டிற்கு முறைகேடாக 300க்கும் மேற்பட்ட அதிவேக தொலைபேசி இணைப்புகளை வைத்திருந்தார். சில காலங்களுக்கு பின் அவை சன் டிவி நிறுவனத்திற்கு முறைகேடான முறையில் மாற்றப்பட்டது.
சிபிஐ அதிகாரிகள்
இவ்வழக்கில் தொடர்புடைய தயாநிதி மாறனின் தனிச் செயலாளராக பணியாற்றிய வி.கவுதமன், சன் டி.வி நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், சன் டி.வியின் எலக்ட்ரீஷியன் கே.எஸ்.ரவி ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.
சன் டிவி பங்குகள்
இச்செய்தி வெளியான அடுத்த சில நிமிடங்கலில் சன் டிவி நிறுவனத்தின் பங்கு விலை தொடர்ந்து சரிய துவங்கியது. மும்பை பங்கு சந்தை புதிய உச்சத்தில் இருக்கும்போது சன் டிவி நிறுவனத்தின் பங்கு விலை குறைந்திருப்பது இந்நிறுவனத்திற்கு கவலை அளிக்ககூடிய விஷயமாகும்.
விசாரணை
மேலும் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் இந்த மூவரிடமும் விசாரணை நடந்து வருவதகாவும், விசாரணையில் பல உண்மைகள் வெளி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதேபோல் இவ்வழக்கிற்கு தேவையான பல ஆதாரங்களும் கிடைத்துள்ளதாக சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது.