பெங்களுரூ: ஜூலை மாதத்தில் 400 ஊழியர்களை மொத்தமாகப் பணிநீக்கம் செய்த நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், மீண்டும் 800 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதற்கான பணிகளைச் செய்து வருகிறது.
இந்தியாவில் அமேசான் நிறுவனம் தனது வர்த்தகத்தை முழுமையாகத் துவங்குவதற்கு முன்பு வரை நிலையான மற்றும் ஸ்திரமான வர்த்தக உயர்வைச் சந்தித்து வந்த பிளிப்கார்ட், அதன் அறிமுகத்திற்குப் பின் மிகப்பெரிய அளவிலான வர்த்தகச் சரிவு சந்தித்து வருகிறது.
வர்த்தகம் மற்றும் முதலீட்டாளர்களின் நெருக்கடிகளைச் சமாளிக்கவே பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே '800 ஊழியர்களின் பணிநீக்கம்'.
800 ஊழியர்கள் பணிநீக்கம்
பிளிப்கார்ட் நிறுவனம் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பிளிப்கார்ட் நிறுவனத்தில் இருக்கும் 800 ஊழியர்களை முழுமையாகப் பணிநீக்கம் செய்யும் மிகப்பெரிய நிர்வாகச் சீர்திருத்த திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
இதில் 400 ஊழியர்கள் உடனடியாகவும், மீதமுள்ள 400 ஊழியர்களுக்குச் சில மாதங்கள் கால அவகாசம் அளித்து நிறுவனத்தை விட்டு வெளியேற்ற நிர்வாகம் திட்டமிட்டுள்ளது இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பகுதி பகுதியாக.
இந்நிறுவனத்தை விட்டு வெளியேற உள்ள முதல் 400 ஊழியர்களை மொத்தமாக இல்லாமல் பகுதிபகுதியாக வெளியேற்றவும். மீதமுள்ள 400 ஊழியர்கள் காலஅவகசாம் அளிக்கப்பட்டு வருகிற டிசம்பர் மாத்திற்குள் முழுமையாக 800 ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் எனவும் அந்த உயர் அதிகாரி கூறினார்.
யாருக்கு ஆபத்து..?
ஜூலை மாதத்தில் வெளியேற்றப்பட்ட ஊழியர்கள் பெரும்பாலானோர் வாடிக்கையாளர் சேவை மற்றும் செயற்பாடுகள் பிரிவுகளில் இருந்தவர்கள்.
தற்போது பிளிப்கார்ட் நிறுவனம், 3,200 ஊழியர்கள் கொண்ட தனது முக்கிய அணியில் (Core Team) கைவைத்துள்ளது.
முக்கிய அணி
தற்போது பிளிப்கார்ட் முக்கிய அணியில் நடுத்தர மற்றும் உயர் ஊழிய குழுவில் இருக்கும் அதிகளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத்திட்டமிட்டுள்ளது.
இதன் படி வருடத்திற்கு 8-9 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் அளவில் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் அதிகமானோர் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்ப அணி
இந்தப் பணிநீக்க நடவடிக்கையில் முக்கியமாகப் பாதிக்கப்படுவது 1000 ஊழியர்கள் கொண்ட தொழில்நுட்ப அணி தான். அதிலும் சாப்ட்வேர் இண்ஜினியர் முதல் பிராடெக்ட் மேனேஜர் வரையில், UI மற்றும் UX டிசைனர்கள் ஆகிய பதவிகளில் இருக்கும் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் எனப் பிளிப்கார்ட் நிறுவனத்தின் பெயர் வெளியிடப்படாத உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
9 வருட மிகப்பெரிய வரலாறு கொண்டு இந்தப் பிளிப்கார்ட் நிறுவனத்தில் 30,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பிக் பில்லியன் சேல்
ஆக்டோபர் மாதத்தில் பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ள பிக் பில்லியன் சேல் சலுகை திட்டத்திற்கு அதிகளவிலான ஊழியர்கள் தேவை இருப்பாதல் இதன் பின்னர் அதிகமானோரைப் பணிநீக்க செய்யலாம். இல்லையெனில் ஒப்பந்த ஊழியர்கள் மூலம் இத்திட்டத்தை எளிமையாக நடத்த முடியும் எனவும் சந்தையில் கருத்து நிலவுகிறது.
ஊதிய உயர்வு
சில வருடங்களுக்கு முன்பு வரை பிளிப்கார்ட் நிறுவனத்தில் இணையும் ஊழியர்களுக்குச் சந்தையின் சாரசரி ஊதிய ஊயர்வை விடவும் 30-40 சதவீதம் அதிகமான உயர்வை அளித்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது 800 ஊழியர்களைச் சர்வசாதாரணமாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது பிளிப்கார்ட்.