ஒரு நிறுவனம் தனது பணியாளரின் செயல்திறனை ஊக்குவிக்கும் வகையிலோ அல்லது ஈடு செய்யும் வகையிலோ , நிறுவனத்தின் பங்குகளைப் போலவே 'வரையறுக்கப்பட்ட பங்குகளை' (Restricted Stock units) வழங்கும். வரையறுக்கப்பட்ட பங்குகள் என்பது நிறுவனத்தின் குறிப்பிட்ட அளவு பங்குகளை எதிர்காலத்தில் வழங்குவதற்கான உத்திரவாதம் போன்றது.
ஆனாலும், இந்த வரையறுக்கப்பட்ட பங்குகளை வழங்குவதற்கான சில வரைமுறைகள் உள்ளன. பணியாளர் நிறுவனத்தில் சேரும்போதே வழங்கப்படும் வரையறுக்கப்பட்ட பங்குகள் 'முடிவெடுக்கும் காலத்திற்கு' (Vesting Period) பிறகே பங்குகளாகக் கிடைக்கும்.
வரையறுக்கப்பட்ட பங்குகளை வழங்குவதற்கான நிபந்தனைகள்
1) பணியாளரின் செயல்திறன் வரையறுக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பின் இந்தப் பங்குகளை ஒதுக்கீடு செய்யலாம்.
2) முடிவெடுக்கும் காலத்திற்கு முன்பு இந்தப் பங்குகளுக்கு எந்த மதிப்பும் இராது. அதற்குப் பின், வரையறுக்கப்பட்ட பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்றவாறு நிறுவனத்தின் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
இன்போசிஸ்-ன் வரையறுக்கப்பட்ட பங்குகள்
எடுத்துக்காட்டாக, இன்போசிஸ் நிறுவனம் தனது இடைநிலை மேலாளர்களுக்கு 4 வருட முடிவெடுக்கும் காலத்துடன் கூடிய வரையறுக்கப்பட்ட பங்குகளை வழங்குகிறது எனக் கொள்வோம். இவர்களின் செயல்திறன் சிறப்பாக இருந்து, மேலும் இதே நிறுவனத்திலேயே தொடர்ந்தால் வரையறுக்கப்பட்ட பங்குகளின் சந்தை மதிப்பிற்கு நிகராக இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகளை வழங்கும்.
வரையறுக்கப்பட்ட பங்குகள் (RSU) vs பணியாளர் விருப்ப பங்குகள் (ESOP)
வரையறுக்கப்பட்ட பங்குகள் நிறுவனத்தால் உத்திரவாதமாக வழங்கப்படுபவை. பின்னர் இவற்றைப் பங்குகளாக மாற்றிக்கொள்ளலாம். ஆனால் பணியாளர் விருப்ப பங்குகளில் பணியாளரே முதலீடு செய்யவேண்டும். அதுவும், சந்தை மதிப்பை விட அதிக விலைக்கு நிறுவனத்திலிருந்து வாங்குவது மதிப்பற்றது.
நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு வரையறுக்கப்பட்ட பங்குகளால் ஏற்படும் பாதிப்புகள்
நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கும் நிலையில், அந்நிறுவனம் தன் பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட பங்குகளைத் தருமாயின் சமபங்குகளின் எண்ணிக்கை உயரும். அதனால், பங்குகளின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்படும்.
ஆனாலும் இங்குக் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால், நிறுவனம் புதிய பங்குகளை உருவாக்கி வழங்குகிறதா அல்லது ஏற்கெனவே உள்ளவற்றை வழங்குகிறதா என்பதே!
வரையறுக்கப்பட்ட பங்குகளின் குறைபாடுகள்
இவ்வகைப் பங்குதாரர்களுக்கு நிறுவனத்தின் பங்குகள் இன்னும் ஒதுக்கீடு செய்யப்படாததால் பங்குகளின் மீது வாக்களிக்கும் உரிமையும், அவற்றின் லாபப் பங்கும் கிடையாது.