டெல்லி: "ஒருநாள் நிதியமைச்சர் " பியூஸ் கோயல் அறிவித்துள்ள பட்ஜெட்டிற்கு சரிவிகிதாச்சாரப்படி வரவேற்பும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய முக்கிய 3 வட மாநிலங்களில் மண்ணை கவ்வியதன் பின்னணியோ, அல்லது மத்திய அரசு மீது மக்களுக்கு உள்ள கடுமையான அழுத்தமோ என்னவோ தெரியவில்லை, இன்றைய பட்ஜெட்டில் சில அறிவிப்புகள் அள்ளி தெளித்து சாமான்ய மக்களின் பாராட்டை பெற்றுள்ளன.
அதில் முக்கியமானதும், சொல்லியே ஆக வேண்டியதும் விவசாயிகளுக்கான நலன்கள்தான். இந்திய வரலாற்றில் இதுவரை எந்த அரசும் செய்யாத வகையில், விவசாய பொருட்களுக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலையை இந்த அரசு வழங்கியுள்ளது.
ஏழை விவசாயிகள்
அதாவது ரூ. 6000 சிறு விவசாயிகளுக்கு நேரடியாக வங்கி கணக்கிற்கு அனுப்புகிற பிரதமர் கிஷான் திட்டம் என்ற வரலாற்று திட்டத்தை உருவாக்கியுள்ளது. 2 ஹெக்டேர் நிலப்பரப்பிற்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் ஏழை விவசாயிகளுக்கு ரூ.6,000 மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
12 கோடி விவசாயிகள்
இந்த பணம் ரூ.2000 மாக 3 தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 12 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்பதால், இதற்காக 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2021-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகவும் அதற்காகவே இத்தகைய அறிவிப்புகள் என்று காரணம் சொல்லி உள்ளதை வரவேற்றே ஆக வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
பென்ஷன் திட்டம்
அடுத்ததாக, அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்காக ஒரு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரதம மந்திரி ஷ்ராம் யோகி மந்தன் என்ற பெயரும் இந்த பென்ஷன் திட்டத்திற்கு சூட்டப்பட்டு, இதற்காக ரூ.500 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இந்த பென்ஷன் போய் சேர உள்ளது. இதன்படி மாதம் 100 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும், அவ்வளவுதான். ஆனால் ஓய்வூதியமாக குறைந்தபட்சம் ரூ.3000 பெறுவார்கள் என்பதுதான் இதன் சிறப்பம்சமே.
குறைந்தபட்ச உதவி
60 வயது ஆனாலும்கூட இந்த 3000 ரூபாய் அவர்களுக்கு கிடைக்கும் வகையில்தான் இத்திட்டம் செயல்பட போகிறது. இது குறைந்தபட்ச உதவி தொகை என்றாலும் இதனால் பயனடையபோவது கிட்டத்தட்ட 10 கோடி பேர் என மத்திய அரசு நம்புகிறது. அது மட்டுமல்ல, பி.எஃப் சந்தாதாரர் உயிரிழந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதி ரூ.6 லட்சமாக உயர்த்தப்படும் என்ற மகிழ்ச்சிகரமான தகவலையும் பட்ஜெட்டின் போது அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி உச்சவரம்பு
இன்றைய பட்ஜெட்டில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அறிவிப்பு மற்றொன்று என்னவென்றால் தனிநபர் வருமான வரிவிலக்கு தான். 10 சதவீத இடஒதுக்கீட்டை தந்து முன்னேறிய சமூகத்தினருக்கு சலுகையை அறிவித்தும், விவசாயிகளின் நலனில் அக்கறையும் செலுத்திய மத்திய அரசு இவர்கள் இரு தரப்பினருக்கும் இடையே எங்கே நடுத்தர மக்களை விட்டு விடுமோ என்று கவலை அதிகரித்து கொண்டே இருந்தது. ஆனால், அவர்களுக்கும் ஒரு அறிவிப்பை அளித்து நல்ல பெயரை வாங்கி கொண்டுவிட்டது. அதாவது வருமான வரி உச்ச வரம்பு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயில் இருந்து உயர்த்த வாய்ப்புள்ளதாகவும், அதற்காக அதிரடியாக 5 லட்சமாக அதை உயர்த்தி அசத்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்ப அதிர்ச்சி
இது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. காரணம், சமீப ஆண்டுகளாக வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படவே இல்லை. மாச சம்பளதாரர்களை ஈர்க்கும் விதத்தில் முக்கிய அறிவிப்பு வராதா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய இந்த அறிவிப்பு ஏற்றுக் கொள்ளக்கூடியதே, பாராட்டத்தகுந்ததே. அப்படியானால், 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை என்று இன்ப அதிர்ச்சி தந்துள்ளது பட்ஜெட் அறிவிப்பு.
பாலை வார்த்தது
நாட்டிலுள்ள விவசாயிகளின் வயிற்றில் அடித்து விட்டு, இப்போது அவர்களின் வயிற்றிலேயே பாலை வார்ப்பது போல அறிவிப்புகளை அறிவித்துள்ளது நாட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இந்த நான்கரை வருஷங்களாக செய்ய வேண்டிய ஒரு விஷயத்தை ஆட்சி முடிய நான்கு மாதங்களே இருக்கும்போது செய்திருப்பது அரசியல் காரணமாகவே பார்க்கப்படுகிறது.
மீண்டும் வருமா?
இப்படி சகட்டு மேனிக்கு பட்ஜெட்டில் சலுகைகள் வழங்கப்படுவது ஏன்? இதற்கான நிதி எங்கிருந்து ஒதுக்கப்படும்? யார் பணத்திலிருந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும்? வரப்போகும் தேர்தலில் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக விரிக்கப்படும் வலையா? என்றெல்லாம் பல கேள்விகள் எழுந்தாலும் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே இன்றைக்கு அறிவித்துள்ள அறிவிப்புகள் அனைத்தும் சாத்தியப்படும் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை!!