டெல்லி: தனியார் நிறுவனங்கள் கட்டணம் செலுத்தி ஆதார் எண்ணை வாடிக்கையாளர் சரிபார்ப்புக்கு பயன்படுத்தலாம் என ஆதார் ஆணையம் அறிவித்திருக்கிறது. ஆதார் தகவல்களின் குறைந்தபட்ச பயன்பாட்டுக்கு 50 பைசாவும் முழு பயன்பாட்டுக்கு 20 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர் சரிபார்ப்பு என்பதை KYC என அழைக்கிறார்கள். இது வாடிக்கையாளர்களைப் பற்றிய தகவல்களை உறுதிசெய்யும் முறை ஆகும். இந்த சரிபார்ப்புக்கு ஆதார் எண் மூலம் வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களைப் தனியார் நிறுவனங்கள் பெற்றுக்கொள்கின்றன.
சிம் கார்டு வாங்கும்போது ஆதார் எண்ணை மட்டும் பெற்று ஆதார் விவரங்களை சரிபார்த்து அந்த நபருக்கு மொபைல் எண்ணை ஆக்டிவேட் செய்கிறார்கள். இது e-KYC முறைக்கு உதாரணம். நம்முடைய பயோமெட்ரிக் ஐடி மூலம் தகவல்களை உறுதிசெய்துகொள்வார்கள். இதுவே பழைய KYC முறை என்றால், வாடிக்கையாளர்களின் தகவல்களை விண்ணப்பம் மூலம் பெற்றுக்கொண்டு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களை அரசு ஆவணங்கள் மூலம் சரிபார்த்து பின்னரே சிம் கார்டை ஆக்டிவேட் செய்வார்கள். அவுட்சோர்ஸ்சிங் மூலம் செய்வதால் ஒவ்வொரு KYC க்கும் குறைந்தது 100 ரூபாயாவது செலவாகும். இதுவே ஆதார் சரிபார்ப்பு என்றால் இந்த செலவு மிச்சம்.
ஆன்லைன் வருமான வரி தாக்கல்
ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்துவிட்டு, அதை நாம்தான் செய்தோம் என உறுதிசெய்யும் வகையில் அந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து கையெழுத்திட்டு வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும். இதெல்லாம் ஆதார் வருவதற்கு முன்பு. இப்போது நம்முடைய ஆதார் எண் கொடுத்து, மொபைல் OTP மூலம் உறுதிப்படுத்திவிட்டால் போதும். உடனே e-verification முடிந்தது. இது ஆம்/இல்லை என்ற பதில் மூலம் சரிபார்க்கும் முறையாகும்.
உச்சநீதிமன்றம் தடை
கடந்த ஆண்டு ஆதார் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர் சரிபார்ப்புக்காக ஆதார் எண்ணைப் பயன்படுத்துவதற்கு தடைவிதித்ததோடு சட்டத்தில் அதற்கு இடமில்லை என்று தீர்ப்பளித்தது. இதனால் தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை வைத்து வாடிக்கையாளர்களை சரிபார்ப்பதில் சிக்கல் எழுந்தது. இதைத் தொடர்ந்து அண்மையில் நாடாளுமன்றத்தில் அவசரச்சட்டம் ஒன்றை இயற்றி தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியது
20 ரூபாய் கட்டணம்
இந்நிலையில் இனி வாடிக்கையாளர் சரிபார்ப்பு என்ற பெயரில் ஆதார் வசதியைப் பயன்படுத்த 20 ரூபாய் (வரி உட்பட) கட்டணமும் ஆம்/இல்லை என்ற பதில் மூலம் சரிபார்ப்புக்கு ஆதார் எண்ணை பயன்படுத்தினால் 50 பைசா கட்டணமும் செலுத்த வேண்டும் என ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர் தகவல்களை சரிபார்க்க செலவிட்டதைவிட புதிய கட்டணம் மூலம் ஏற்படும் செலவு குறைவுதான் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
விதி விலக்கு யாருக்கு
தபால் நிலையங்கள், பாஸ்போர்ட் அலுவலகங்கள், வருமான வரித்துறை போன்ற அரசு நிறுவனங்களுக்கும் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்யும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் வங்கிகளுக்கும் இந்தக் கட்டணத்திலிருந்து விலக்கு உண்டு.
வட்டியோடு கட்டணம்
வாடிக்கையாளர் தகவல்களை சரிபார்க்க ஆதார் எண்ணை பயன்படுத்தினால் உடனே அதற்கான கட்டணத்தைக் குறிப்பிட்டு ஒரு ரசீதை ஆதார் ஆணையம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அனுப்பும். அந்த நிறுவனம் 15 நாள்களில் ஆதார் ஆணையம் அளித்த ரசீதில் குறிப்பிட்டிருக்கும் தொகையை செலுத்த வேண்டும். இதற்குத் தவறினால் மாதம் 1.5% வட்டியும் இணைத்துச் செலுத்தவேண்டும்.
ஆதார் ஆணையம் ரத்து செய்யும்
வாடிக்கையாளர் சரிபார்ப்புக்கு ஆதார் எண்ணை பயன்படுத்தும் வசதியும் அந்த நிறுவனத்துக்கு ரத்து செய்யப்படும். கட்டணம் செலுத்தி ஆதார் எண் மூலம் சரிபார்ப்பைச் செய்ய விரும்பாத நிறுவனங்கள் ஆதார் ஆணையத்திடம் பெற்ற அனுமதியை உடனடியாக திரும்ப ஒப்படைக்க வேண்டும்.