டெல்லி: நாட்டின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் மற்றும் ஒஎன்ஜிசி நிறுவனங்களின் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்ததால் 2018-19ஆம் நிதியாண்டில் மொத்த எண்ணெய் உற்பத்தி 4 சதவிகிதம் குறைந்துவிட்டது.
கடந்த நிதியாண்டில் 3.70 கோடி டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் 3.42 கோடி டன் கச்சா எண்ணெய் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2017-18ஆம் நிதியாண்டில் நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி 3.57 கோடி டன்னாக இருந்ததாக மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.
கச்சா எண்ணெய் பற்றாக்குறை
நாட்டின் கச்சா எண்ணெய் தேவையை 90 சதவிகிதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை வைத்தே பூர்த்தி செய்யவேண்டியதுள்ளது. உள்நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி இருந்தாலும் அது 10 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இதன் காரணமாவே நம்முடைய கச்சா எண்ணெய் தேவைக்கு வெளிநாடுகளிடம் கையேந்த வேண்டியுள்ளது.
தீவிர ஆராய்ச்சி
இந்தியாவில கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு தொழிலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஒஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா ஆகிய நிறுவனங்கள் ஈடுபட்டுவருகின்றன. மேலும் சில இடங்களில் எண்ணெய் துரப்பன ஆராய்ச்சியிலும், இயற்கை எரிவாயு உற்பத்தியிலும் ரிலையன்ஸ் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.
இறக்குமதியை குறைக்க ஆலோசனை
நம் நாட்டின் கச்சா எண்ணெய் தேவை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்வதால், வெளிநாடுகளில் இருந்து இறக்குதி செய்யும் அளவை குறைத்துக்கொண்டு உள்நாட்டிலேயே உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. வரும் 2022ஆம் ஆண்டுக்குள் கச்சா எண்ணெய் இறக்குமதியை 67 சதவிகிதத்திற்கும் கீழ் குறைப்பதற்கு மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
உற்பத்தி சரிவு
கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் 3.70 கோடி டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த ஆண்டில் நம் நாட்டின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் உற்பத்தி 3.42 கோடி டன்னாக இருந்தது. கடந்த 2017-18ஆம் நிதியாண்டில் நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தி 3.57 கோடி டன்னாக இருந்தது. முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது இது சுமார் 4 சதவிகிதம் குறைவாகும்.
தொழில்நுட்ப காரணம்
ஒஎன்ஜிசி நிறுவனத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தியானது கடந்த 2017-18ஆம் நிதியாண்டில் 2.23 கோடி டன்னாக இருந்தது, ஆனால் 2018-19ஆம் நிதியாண்டில் கச்சா எண்ணெய் உற்பத்தியானது 2.10 கோடி டன்னாக குறைந்துது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 5.6 சதவிகிதம் குறைவாகும். ஒஎன்ஜிசியின் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைவுக்கு அரபிக்கடல் பகுதியில் உள்ள எண்ணெய் கிணறுகளில் இருந்து கச்சா எண்ணெய் எடுப்பதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் காரணங்களே ஆகும்.
மற்றொது பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான ஆயில் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி கடந்த 2017-18ஆம் ஆண்டில் 33 லட்சம் டன்னாக இருந்தது. ஆனால் 2018-19ஆம் நிதியாண்டில் 2.5 சதவிகிதம் குறைந்து 32 லட்சம் டன்னாக குறைந்துவிட்டது.
கச்சா எண்ணெயின் அளவு குறைந்தது
தனியார் எண்ணெய் நிறுவனங்களின் கச்சா எண்ணெய் உற்பத்தியானது கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் 98 லட்சம் டன்னாக இருந்தது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 2 சதவிகிதம் குறைவாகும். தனியார் எண்ணெய் நிறுவனமான கெய்ர்ன் இந்தியாவின் ராஜஸ்தான் எண்ணெய் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெயின் அளவு குறைந்ததால் கடந்த ஆண்டின் உற்பத்தி குறைவுக்கு காரணமாகும்.
இறக்குமதியில் 3ஆவது இடம்
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளது. நம் நாடு ரஷ்யா, சவுதி அரேபியா, ஈரான், ஈராக் மற்றும் வெனிசூலா போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது.
இறக்குமதி அதிகரிப்பு
கடந்த 2018-19ஆம் நிதியாண்டில், ஒட்டுமொத்த அளவில் சுமார் ரூ.9.81 லட்சம் கோடிக்கு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது இது சுமார் 29 சதவீதம் கூடுதலாகும். முந்தைய ஆண்டின் இறக்குமதி ரூ.7.59 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த 2017-18ஆம் நிதியாண்டில் நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி 3.57 கோடி டன்னாக இருந்ததாக மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது
இறக்குமதி செலவு அதிகரிப்பு
2018-19ஆம் நிதியாண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் வரலாறு காணாத அளவில் ரூ.8.03 லட்சம் கோடியாக இருக்கும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது சுமார் 30 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.