டெல்லி: நாட்டின் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் பெண் நிதியமைச்சர் என்ற சாதனைக்கு சொந்தக்காரதாக இருக்கும் மாண்புமிகு நிர்மலா சீதாராமனுக்கு (Nirmala sitharaman) அடுத்த வரவிருக்கும் அனைத்து நாட்களுமே சோதனையான காலகட்டமாகவே இருக்கப்போகிறது என்றே பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
தொடர்ந்து சரிந்து வரும் பொருளாதார வளர்ச்சி, அதிகரித்து வரும் வருவாய் பற்றாக்குறை, அதிகரித்து வரும் பணவீக்க விகிதம், கூடவே உயர்ந்து வரும் வேலைவாய்ப்பின்மை, அதோடு குறைந்து வரும் மொத்த உள்நாட்டு உற்பத்தி என எட்டு திக்கிலும் பிரச்சனைகள் சூழ்ந்திருக்கும் போது அதையெல்லாம் முறியடிப்பாரா அல்லது மூழ்கி முத்தெடுப்பாரா என்பது போகப் போகத்தான் நமக்கு தெரியும்.
மேற்கண்ட அனைத்தையும் திறமையாக சமாளித்து வெற்றி வாகை சூடினால் மட்டுமே புதிய நிதியமைச்சர் பிரதமர் மோடியின் தேர்வை நியாயப்படுத்தவும், ஏற்கனவே தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இருக்கும் என்பதே உண்மை.
நினைத்ததை முடிப்பவர்
நடந்து முடிந்த 17ஆவது லோக்சபா தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது. பிரதமராக நரேந்திர மோடியே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நிதியமைச்சர் பதவிக்கு தனக்கு வேண்டாம் என்று சொல்லி விட்டதால், அந்தப் பதவிக்கு தன் கண் அசைவுக்கு ஏற்ப தான் நினைத்ததை நடத்தி முடிக்கும் திறமையான ஒருவரை தேர்ந்தெடுக்க எண்ணினார்.
மோடியின் மனசாட்சி
தான் நினைப்பதை செயல் வடிவம் கொடுப்பதில் கில்லாடிகளான இருவர் மட்டுமே மோடியின் மனதில் நிழலாடியது. ஒருவர் மோடியின் மனசாட்சியான பாஜக தலைவர் அமித் ஷா. இன்னொருவர் பாதுகாப்புத்துறை அமைச்சரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான நிர்மலா சீதாராமன்.
காத்திருக்கும் சவால்கள்
நிர்மலா சீதாராமனை நிதியமைச்சராக தேர்ந்தெடுத்த உடனே அனைத்து தரப்பிருக்குமே ஆச்சர்யம். காரணம் நாட்டில் இப்போது நிலவிவரும் நிதிச் சிக்கல்கள், பொருளாதார சிக்கல்கள் என எட்டு பக்கமும் பிரச்சனைகள் பதம் பார்க்க காத்திருக்கின்றன. இவற்றை எல்லாம் சமாளித்து வெற்றி பெறுவாரா என்பதே அனைவரின் மனதில் எழுந்துள்ள கேள்வியாகும்.
ஒரே மருந்து தான்
தமிழ் படத்தில் வரும் காமெடிக் காட்சிதான் தற்போது நினைவுக்கு வருகிறது. ஒரு நோயாளி ஒரு மருத்துவ பிரதிநிதியிடம் தன் நோய் குணமாக மருந்து கேட்பார். அதற்கு இவர் என்ன நோய் என்ற கேட்டவுடன், நோயாளி, உட்கார்ர இடத்துலே கட்டி இருக்கு, ஒரு காது கேக்காது, சாயந்திரம் ஆனா மாலைக் கண் அதனாலெ கண் தெரியாது, ஒரு கை கால் வராது, பக்கவாதத்தால் அசைக்க முடியவில்லை, வயிற்றில் அல்சர், நெஞ்சுலே டிபி, ரத்தக் கொதிப்பு வேற இருக்கு, கால்லெ ஆணி என்று உலகத்தில் உள்ள அத்தனை நோய்களும் தனக்கு இருப்பதாக சொல்லி அதற்கு மருந்து கேட்பார். உடனே மருத்துவப் பிரதிநிதி அதுக்கு ஒரே மருந்து எலி மருந்துதான் என்று சொல்லுவார். அந்த காமெடி காட்சிபோலத்தான் தற்போதைய இந்தியப் பொருளாதாரத்தின் நிலைமையும் கூட.
பொருளாதார வளர்ச்சி சரிவு
தற்சமயம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிந்து வருகிறது. நான்காம் காலிறுதியில் பொருளாதார வளர்ச்சி விகிதம் சுமார் 6.3 சதவிகிதமாக சரிந்துவிட்டது. பொருளாதார வல்லுநர்களும் கடந்த 2018-19ஆம் நிதியாண்டின் வளர்ச்சி விகிதம் சுமார் சரிவில் தான் இருக்கும் என்று மதிப்பிட்டிருந்தார்கள். பொருளாதார நிபுணர்கள் சொல்வதற்கு மாறாக மத்திய புள்ளியியல் துறையோ வளர்ச்சி விகிதம் சுமார் 7 சதவிகிதமாக இருக்கக்கூடும் என்று மதிப்பிட்டிருந்தது. ஆனால் கடந்த 2018-19ஆம் நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.3 சதவிகிதத்திற்கு உள்ளேயே இருக்கும் என்று பெரும்பாரான புள்ளியியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
மந்த நிலை மாறணும்
புதிய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் இதையெல்லாம் மனதில் கொண்டு, நொண்டியடிக்கும் இந்தியப் பொருளாதாரத்தை முடுக்கிவிட்டு வேகமெடுக்க வைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டிய மிகப்பெரிய சுமையும் உள்ளது. எனவே விரைவில் தாக்கல் செய்யும் முழு பட்ஜெட்டில் பொருளாதார மந்த நிலையை போக்குவதற்கான திட்டங்கள் மற்றும் சலுகைகளை அவர் வெளியிட வேண்டிய நிலையில் உள்ளார்.
செலவைக் குறைக்கணும்
இரண்டாவதாக, வரைமுறையில்லாத மத்திய அரசின் செலவினங்களை கட்டுப்படுத்தி நிதிப்பற்றாக்குறையை போக்குவதற்கு உரிய ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களை கொண்டுவந்து அவற்றை முறையாக செயல்படுத்த வேண்டிய மிகப் பெரிய பொறுப்பும் புதிய நிதியமைச்சருக்கு முன் உள்ள சவாலாகும். இதற்கு முன்பும் மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை வரம்புக்கு மீறியே இருந்தது. எனவே இதை கட்டுப்படுத்த வேண்டிய முக்கிய பொறுப்பும் இவருக்கு உண்டு.
வர்த்தகப் பற்றாக்குறையை போக்கணும்
அடுத்ததாக நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதிக்கு இடையில் உள்ள வர்த்தகப் பற்றாக்குறையானது அதிகரிக்கும் நிலை ஏற்படும்போது, சர்வதேச தர நிர்ணய மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவின் பொருளாதார நிலையை கருதி குறைத்து மதிப்பிட்டு விட்டால், வெளிநாட்டு முதலீடுகள் இந்தியச் சந்தைக்கு வருவது குறையும். எனவே வர்த்தகப் பற்றாக்குறையை குறைப்பதற்காக உள்நாட்டில் நுகர்வுத் தன்மையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை முடுக்கி விடவேண்டும். அதோடு ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான திட்டங்களுக்கு ஊக்கமளிக்கவேண்டிய மிகப் பெரிய பொறுப்பும் புதிய நிதியமைச்சருக்கு உள்ளது.
வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கணும்
அடுத்ததாக மிக முக்கியமான ஒன்று வேலைவாய்ப்பின்மை. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் 6.1 சதவிகிதமாக அதிகரித்துவிட்டதாக மத்திய பொருளாதார கண்காணிப்பு மையம் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. எனவே இளைஞர்களுக்கு அதிகப்படியான வேலை வாய்ப்பினை உருவாக்கும் விதமாக திட்டங்களை அறிவித்து செயல்படுத்த வேண்டும். இதன் மூலமாக நாட்டின் தொழிலாளர் சந்தையை ஊக்கப்படுத்தி பொருளாதாரத்தையும் வளர்ச்சிப்பாதைக்கு திருப்ப முடியும்.
விவசாயத்திற்கு முன்னுரிமை
அடுத்ததாக நாட்டின் முதுகெலும்பான விவசாய வளர்ச்சி. பிரதமர் மோடி அறிவித்த விவசாயிகளின் வருமானத்தை வரும் 2022ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க வேண்டும் என்ற வாக்குறுதி. அதோடு தேர்தல் வாக்குறுதியில் அளித்த, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கும் திட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை தற்போது இருப்பதைக் காட்டிலும் 1.5 மடங்கு அதிகப்படுத்துதல் போன்ற திட்டங்களை நிறைவேற்றுவதற்கு சலுகையும் முன்னுரிமையும் அளிக்கவேண்டியது அவசியம்.
திவால் சட்டத்தை வலுப்படுத்தணும்
அடுத்ததாக, வங்கிகளின் வாராக்கடன் பிரச்சனை. வங்கிகளுக்கு வரவேண்டிய வாராக்கடன்கள் அனைத்தையும் வசூலிப்பதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அதோடு, வங்கிகளின் மறுசீரமைப்புக்கு தேவையான முதலீடுகளை அதிகப்படுத்துதல். திவால் சட்டத்தை பலப்படுத்துதல் என அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
ஒரே தீர்வு ஒரே வரிதான்
அடுத்ததாக ஜிஎஸ்டி வரிப்பிரச்சனை. நாட்டிலுள்ள அனைவருமே எதிர்நோக்கும் முக்கியமான ஒன்றாகும். பலவிகித வரிகளை ஒன்றிணைத்து ஒரே வரிவிகித வரிமுறையை நடைமுறைப்படுத்த தேவையான தீர்க்கமான நடவடிக்கையை எடுக்கவேண்டும். அதாடு, பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மதுபானப் பொருட்கள் ஆகியவற்றையும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு வட்டத்திற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகும். மேற்கண்ட அனைத்து பிரச்சனைகளையும் புதிய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் திறம்பட சமாளித்து வெற்றி பெற்றால், பிறந்த வீடான தமிழகமும் புகுந்த வீடான ஆந்திர மாநிலமும் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.