டெல்லி: அமெரிக்கா தனது முன்னுரிமை வர்த்தக நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கியதால் அதிர்ச்சியடைந்த இந்தியா, மீண்டும் வர்த்தக உறவை வலுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்த சந்தோசத்தில் திளைக்கும் நிலையில் இந்தியாவுக்கு அளித்திருந்து வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை அமெரிக்கா திரும்பப் பெற்றுள்ளது மத்திய அரசுக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
அமெரிக்காவின் அதிரடி முடிவை அடுத்து, வரும் ஜூன் 5ஆம் தேதிக்கு பின்னர், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரத்துக்கும் கூடுதலான பொருட்களுக்கு அமெரிக்க கூடுதல் வரி விதிக்கும் அபாயம் உள்ளதால் ஏற்றுமதி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
என்ன டிரம்ப் சார்... வெள்ளக் கொடி காட்டுனா, பயந்துட்டோன்னு நெனைச்சீங்களா..? காம்ரெட் China சார்..!
முன்னுரிமை வர்ததக ஒப்பந்தம்
வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கு உதவும் நோக்கத்தில், அந்த நாடுகளுடன் வரியில்லாத வர்த்தகத்தை மேற்கொள்ளும் வகையில் முன்னுரிமை வர்ததக ஒப்பந்தத்தை (Preferential Trade Agreement) கடந்த 1974ஆம் ஆண்டு அமெரிக்கா ஏற்படுத்தியது. இந்த ஒப்பந்தத்தின் படி, வர்த்தக முன்னுரிமை நாடுகள் அமெரிக்காவுடன் வரியற்ற வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றன.
இறக்குமதி வரி அதிகம்
இந்தியாவும் இந்த வரியற்ற சலுகை என்ற பயனை நாள்வரையிலும் அறுவடை செய்துவருகின்றது. ஆனால், அதே சமயத்தில் இதை எல்லாம் மறந்தோ என்னவோ கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விலை உயர்ந்த ஹார்லி டேவிட்சன் பைக் முதல் 2000த்துக்கும் மேற்பட்ட பொருட்களுக்கான இறக்குமதி வரியை 30 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரையிலும் உயர்த்தியது.
அதிகரித்த வர்த்தகப் பற்றாக்குறை
வர்த்தக முன்னுரிமை சலுகையை அனுபவித்து வரும் நாடுகள் அனைத்தும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரியை விதிப்பதால் தங்களுக்கு வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டு கூடுதல் நிதிச்சுமை ஏற்படுவதை ஜுரணிக்க முடியாத ட்ரம்ப் கடுப்படைந்தார். அதிலும் இந்தியா மற்றும் சீனாவுடன் மேற்கொண்டுள்ள வர்த்தகத்தால் தங்களுக்கு வர்த்தகப்பற்றாக்குறை அதிகரித்திருப்பதை ட்ரம்ப்பால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ட்ரம்ப் கோபம்
தங்களிடம் வரியற்ற வர்த்தக சலுகையை அனுபவித்துக்கொண்டு, அதற்கு மாறாக தங்களின் இறக்குமதிப் பொருட்களுக்கு அதிக இறக்குமதி விதிப்பது நியாயமா என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து தனது அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தினார். இதையடுத்து ஹார்லி டேவிட்சன் பைக்குக்கு மட்டும் இறக்குமதி வரியை 100 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாக குறைத்தார்.
பருப்புக்கு வரி உயர்வு
ட்ரம்ப், இந்தப்பக்கம் மோடியிடம் பேசி இறக்குமதி வரியை குறைக்க மிரட்டியதோடு, அந்தப்பக்கம், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை அதிரடியாக 10 முதல் 25 சதவிகிதம் வரையிலும் உயர்த்தியது. பதிலுக்கு இந்தியாவும் பாதாம் பருப்பு, வால்நட் உட்பட 29 பொருட்களுக்கு வரியை உயர்த்திவிட்டது.
முட்டுக்கட்டையை நீக்குங்கள்
அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரியை உயர்த்துவதாக இந்திய அறிவித்தாலும், வரி உயர்வை உடனடியாக அமல்படுத்தாமல், அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிந்து தொடர்ந்து தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தது. இதனால் பொறுமை இழந்த ட்ரம்ப், கடந்த பிப்ரவரி மாதத்தில், எங்களின் பொருட்களுக்கு இந்தியா விதித்துள்ள கூடுதல் இறக்குமதி வரி உயர்வை நீக்கவேண்டும் என்றும், இந்தியாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கு உள்ள இடைஞ்சல்களையும் முட்டுக்கட்டைகளையும் நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மீண்டும் மிரட்டல் விடுத்தார்.
ஜூன் 16ஆம் தேதி வரை வரி இல்லை
இறக்குமதி வரியை குறைக்க மிரட்டியதோடு நில்லாமல், இந்தியா இறக்குமதி வரி விதிப்பதை நிறுத்தாவிட்டால், தங்களின் முன்னுரிமை வர்த்தக நாடுகளின் சலுகை பட்டியலில் இருந்து நீக்கிவிடுவோம் என்றும் மிரட்டியது. இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வந்த அமெரிக்க வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸிடம், லோக்சபா தேர்தல் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டி, தேர்தல் முடியும் வரையிலும் இது குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதை தெளிவு படுத்தியதோடு, இறக்குமதி வரி உயர்வை வரும் ஜூன் 16ஆம் தேதி வரையிலும் ஒத்தி வைத்தது.
வெற்றிக்கு வாழ்த்துக்கள்
தற்போது, லோக்சபா தேர்தல் முடிந்து பாஜக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. மோடியே மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் மோடியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, மோடியை பிரதமராக வாய்த்தது இந்திய மக்கள் செய்த புண்ணியம் என்றும் அதிர்ஷ்டசாலிகள் என்றும் வானளாவ புகழ்ந் தள்ளிவிட்டார். அதோடு, இந்த மாத இறுதியில் ஜப்பானில் நடக்கும் ஜி-20 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளம்போது இரு தரப்பு வர்த்தக உறவை மேம்படுத்துவதற்கான பேச்சு வார்த்தை நடத்துவோம் என்றும் உத்தரவாதம் அளித்தார்.
இந்தியாவை நீக்கிவிட்டோம்ல
இரு தரப்பு உறவும் இவ்வாறு சீராக போய்க்கொண்டிருக்கிறது என்று இரு தரப்பும் நினைக்கையில், கடந்த வெள்ளியன்று ட்ரம்ப், நாங்கள் ‘எதிர்பார்த்து' போல், இறக்குமதி வரியை குறைப்பது தொடர்பாக இந்தியா எந்தவிதமான உத்தரவாதமும் அளிக்காததால், "எதிர்பாராவிதமாக' முன்னுரிமை வர்த்தக நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிவிட்டோம் என்று தடாலடியாக குண்டைப்போட்டுவிட்டார். இதனால் வரும் 5ஆம் தேதிக்கு பின்னர் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
40000 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கும்
அமெரிக்காவின் முன்னுரிமை வர்த்தக நாடு என்ற அந்தஸ்தை இந்தியா இழந்து விட்டதால், இனிமேல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இரும்பு, அலுமினியப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், ஜவுளிப் பொருட்கள், நவரத்தினக் கற்கள் என 2000த்துக்கும் மேற்பட்ட பொருட்களுக்கு கூடுதலாக இறக்குமதி வரி செலுத்த வேண்டியதிருக்கும்.
பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்
அமெரிக்கா கூடுதல் வரி விதித்தால், அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கும். ஏற்றுமதிப் பொருட்களின் விலை அதிகரித்து அந்நியச் செலாவணியிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் உண்டு. தொடர்ச்சியாக பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
உறவுகள் மேம்படும்
அமெரிக்காவின் வர்த்தக முன்னுரிமை சலுகையை இழந்தது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய வர்ததக அமைச்சக அதிகாரிகள், அமெரிக்கா எடுத்துள்ள தற்போதைய நிலை நாங்கள் எதிர்பாராதது. இருந்தாலும், இரு தரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.