டெல்லி: ஓபெக் நாடுகள் உற்பத்தியை குறைக்க முடிவெடுத்திருந்தாலும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து, அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் குறையும் என்று எதிர்பார்ப்பு நிலவு வருகிறது.
சீனா மற்றும் மெக்ஸிகோ நாடுகளுடன் அமெரிக்கா வர்த்தகப் போரை தொடர்ந்து வரும் நிலையில், சர்வதேச கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்துவருவதால், தங்களின் வருவாய் கணிசமாக குறைந்துள்ளதை அடுத்து ஓபெக் நாடுகள் ஒன்றிணைந்து கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவெடுத்துள்ளன. இருந்தாலும் அதையும் மீறி கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து இறங்குமுகமாகவே உள்ளது.
இந்தியாவில் லோக்சபா தேர்தல் காரணமாக, கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை ஏறாமல் இருந்து வந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிந்த உடன் தொடர்ந்து ஏறிக்கொண்டே வந்த பெட்ரோல் டீசல் விலை கடந்த சில தினங்களாகத்தான் சிறிது குறைந்துள்ளது. இது மோடியின் இரண்டாவது ஆட்சியின் நல்ல துவக்கமாகவே பார்க்கப்படுகிறது.
வெற்றிக்கான ஆரம்பம்
ஒரு நல்ல தொடக்கம் என்பது பாதி வெற்றி (Well begun is half done) அடைந்ததற்கு சமம் என்று சொல்வதுண்டு. அது போலத்தான், நரேந்திர மோடி 2ஆவது முறையாக பிரதமராக பதவியேற்ற சில நாட்களிலேயே அந்த வெற்றிக்கான அறிகுறி தென்படுவதாகத் தான் நினைக்கத் தோன்றுகிறது. தொடர்ந்து ஏறிவந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக தினசரி குறைந்து கொண்டே வருகிறது.
15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே
கடந்த 2014ஆம் ஆண்டில் முதல் முறையாக மோடி பிரதமராக பதவிக்கு வந்த உடன் ஜூன் மாதத் தொடக்கத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 112 டாலராக இருந்தது. பின்னர் படிப்படியாக சரிந்துகொண்டே வந்து அந்த 2015ஆம் ஆண்டின் தொடக்க மாதமான ஜனவரியில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 47.76 டாலராக குறைந்தது. அப்போது 15 நாட்களுக்கு ஒரு முறைதான் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யப்பட்டு வந்தது.
15 சதவிகிதம் தான் குறைந்தது
மோடி பிரதமராக பதவியேற்ற 2014 ஆண்டு ஜூன் மாதத் தொடக்கத்தில் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71.62 ஆகவும், டீசல் விலை ரூ.66.51 ஆகவும் இருந்தது. கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டே வந்திருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் குறையவில்லை. 2015ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் ரூ.61.33 ஆகவும் டீசல் விலை ரூ.48.26 ஆகவும் குறைந்தது. இடைப்பட்ட 6 மாதங்களில் கச்சா எண்ணெயின் விலை கிட்டத்தட்ட 58 சதவிகிதம் குறைந்தது. ஆனால் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை 15 சதவிகிதம் மட்டுமே குறைந்துள்ளது.
தினசரி மாற்றம்
சர்வதேச கச்சா எண்ணெயின் விலை பெருமளவு குறைந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை எதிர்பார்த்த அளவில் குறையாததற்கு ருபாயின் மதிப்பு விலை வீழ்ச்சி என்று காரணம் சொல்லப்பட்டது. அதன் பின்பு 2016ஆம் ஆண்டு ஜூலையில் இருந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலையை தினசரி மாற்றி வருவது போல், இந்தியாவில் தினசரி பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது.
தேர்தல் எதிரொலியால் மாறவில்லை
கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்த நிலைமை தான் இப்பொழுதும் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஏறிக்கொண்டே வந்த பெட்ரோல், டீசல் விலையானது லோக்சபா தேர்தல் நடைபெற்ற ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் மாறாமல் இருந்து வந்தது. பின்னர் வாக்கு எண்ணிக்கை முடிந்த மறு நாளில் இருந்து மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.
4 நாளில் 9 டாலர் குறைந்தது
தொடர்ந்து ஏறிவந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக இறங்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு முக்கியமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருவதே காரணம் என்று சொல்லப்படுகிறது. கடந்த மே 30ஆம் தேதியன்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 70 டாலராக இருந்தது. பின்னர் படிப்படியாக 9 டாலர்கள் குறைந்து வந்து நேற்றைக்கு ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 61 டாலராக குறைந்து விட்டது.
மீண்டும் மோடி
கடந்த மே 30ஆம் தேதியன்று 2ஆவது முறையாக மோடி பிரதமராக பொறுப்பேற்ற அன்று முதல் இந்தியாவிலும் தினசரி பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்தாலும், சிறிய அளவிலேயே குறைந்து வருகிறது. அதே போல் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் கூடிக்கொண்டே வருவது முன்னேற்றத்திற்கான ஒரு நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு சாதகம்
பணவீக்க வீக்க விகிதமும் கூடிக்கொண்டே செல்கிறது, கூடவே பொருளாதார வளர்ச்சியும் எதிர்பார்த்த அளவில் இல்லாமல் மந்தமாகவே உள்ளது. இந்த நிலைமையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வருவது இந்தியாவுக்கும் சாதகமான அம்சமாகவே பார்க்கப்படுகிறது.
ஓபெக் நாடுகள் முடிவு
கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவதால் தங்களின் வருவாய் பாதிப்பதால், அதை ஈடுகட்ட ஓபக் நாடுகள் ஒன்றிணைந்து கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதோடு மெக்ஸிகோ மற்றும் சீனாவுடன் அமெரிக்கா தொடர்ந்து வர்த்தகப் போரை நடத்தி வருகிறது. இருந்தாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் கச்சா எண்ணெய் தொடர்ந்து சரிந்து வருகிறது. எனவே இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கும் என்று அனைவருமே எதிர்பார்க்கின்றனர்.
பெட்ரோல் விலையை குறை
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைக்கு 84 சதவிகிதம் இறக்குமதி செய்தே பூர்த்தி செய்துவருகிறது. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் உலகளாவிய பொருளாதார மந்த நிலை இந்தியாவையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே கடந்த 2014ஆம் ஆண்டில் மேற்கொண்டது போல் மீண்டும் பணவீக்கத்தை குறைப்பதற்கும், இறக்குமதிக்கான மானியத்தை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்காக தயங்காமல் பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைப்பதோடு பெட்ரோலியப்பொருட்களை ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் கொண்டு வர மத்திய அரசு முன்வரவேண்டும்.
தேவை உறுதியான நடவடிக்கை
தலைநகர் டெல்லியில் கடந்த மே 30ஆம் தேதியன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71.23 ஆகவும், டீசல் விலை ரூ.66.63 ஆகவும் இருந்தது. கடந்த 4 நாட்களாக பெட்ரோல் விலையில் மாற்றம் ஏதும் இல்லாமலும் டீசல் விலை ரூ.65.56 ஆகவும் உள்ளது. எனவே சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை மாற்றாமல் வெறும் 2 பைசா அல்லது 3 பைசாவை மட்டும் குறைப்பதோடு சந்தோசப்பட்டுக்கொண்டால், பணவீக்கமும் குறையாது, பொருளாதார வளர்ச்சியிலும் எதிர்பார்த்த இலக்கை எட்ட முடியாது என்பதை மோடி மனதில் வைத்து மேற்கொண்டு துணிந்து உறுதியான நடவடிக்கையை எடுக்க முன்வரவேண்டும்.