டெல்லி: அதிகரித்து வரும் நிதிப்பற்றாக்குறை மற்றும் வர்த்தகப் பற்றாக்குறையை குறைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துணிந்து எடுக்கவேண்டியது அவசியம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
குறிப்பாக, இக்கூட்டத்தில் நலிந்து வரும் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவது, தொடர்ந்து சரிவை நோக்கிச் செல்லும் வேலைவாய்ப்பின்மை, பொதுத்துறை நிறுவனங்களில் அதிகரித்து வரும் கடன் சுமையை குறைத்து, முதலீடுகளை அதிகரிப்பது, நிதித் திட்டமிடலை எப்படி அதிகரிப்பது போன்ற அனைத்து காரணிகளையும் விவாதித்தாக நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வரும் ஜூலை 5ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்படவிருக்கும் 2019-20ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் தயாரிப்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் நிதியமைச்சக அதிகாரிகளும் பம்பரமாக சுற்றி வேலை செய்து வருகின்றனர். அதோடு முற்றிலும் புதிய சவாலான துறைக்கு பொறுப்பேற்றுள்ளதால், நிர்மலா சீதாராமனும் புதிய உத்வேகத்தோடு பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
முதல் கட்டமாக பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை நிர்மலா சீதாராமன் ஆவலோடு வரவேற்றுள்ளார். பொதுமக்களும், வரித் துறையினரும், வங்கித்துறையினரும் தங்களின் ஆலோசனைகளை இணையதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.
அடுத்ததாக, பொருளாதார நிபுணர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி, பட்ஜெட் தொடர்பான ஆலோசனைகளை கேட்டுள்ளார். அவர்களும் சரிந்து வரும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை எப்படி ஸ்திரத்தன்மையோடு வலுப்படுத்தவது என்பது புதிய நிதியமைச்சருக்கு சவாலான விசயமாகவே இருக்கும் என்பது நிபுணர்கள் எடுத்துக்கூறியுள்ளனர்.
கடந்த 2018-19ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிச்சயமாக 7.2 சதவிகிதத்தை எட்டும் என்று அனைத்து பொருளாதார நிபுணர்களும் கணித்திருந்னர். ஆனால் அதற்கு மாறாக 6.8 சதவிகிதமாகவே இருந்தது. அதோடு முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன், இந்திய பொருளாதார வளர்ச்சி வேண்டுமென்றே கூடுதலாக சித்தரித்து காட்டப்பட்டுள்ளது என்று கொளுத்திப்போட்டுள்ளார்.
அதோடு, பருவமழையும், கோடை மழையும் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே வருவதால் விவசாய விளைச்சலும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் குறைந்து விட்டது. இதன் தாக்கம் உணவுப்பொருட்கள் பணவீக்க விகிதத்தில் எதிரொலித்தது. உணவுப் பொருட்களின் மீதான் பணவீக்கம் கடந்த மே மாதத்தில் 6.99 சதவிகிமாக உயர்ந்துவிட்டது.
அதற்கு மாறாக சர்வதேச சந்தையில் தொடர்ந்து சரிந்து வரும் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியால் கடந்த 22 மாதங்களில் இல்லாத அளவில் மொத்த பணவீக்க விகதம் 2.45 சதவிகிதமாக குறைந்துவிட்டது. இப்படி இரண்டும் மாறுபட்ட பாதையில் பயணிப்பது பொருளாதார வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருக்கும் என்பதையும் பொருளாதார நிபுணர்கள் நிதியமைச்சரிடம் விரிவாக விளக்கி உள்ளனர்.
அதோடு, அந்நியச் செலாவணிக் கையிருப்பை நிர்ணயிக்கும் வர்த்தகப் பற்றாக்குறையை குறைப்பது தொடர்பாகவும் தங்களின் ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர். வர்த்தகப் பற்றாக்குறை கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சுமார் 1.07 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணமாக அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இறக்குமதி செய்ததால் ஏற்பட்டது.
எனவே வர்த்தகப் பற்றாக்குறையை போக்க ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அதிக சலுகைகளையும், தற்போது காலதாமதமாக கிடைத்து வரும் வரிப்பயனை உடனடியாக கிடைக்கும் வகையில் வழி வகை செய்யவேண்டும் என்றும், இதனால் நிதிச் சிக்கலின்றி தொடர்ந்து ஏற்றுமதி செய்வதற்கு உதவியாக இருக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எடுத்துக்கூறியுள்ளனர்.
தொழில் துறை வளர்ச்சியைப் பொருத்தவரையிலும் அது அதிக வேலை வாய்ப்பினை அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும், அப்படி இருந்தால்தான் அது மேக்ரோ பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் என்றம் பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை தெரிவித்திருக்கிறார்கள். அதோடு பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் பிரச்சனையை தீர்ப்பதற்கும், நிதி மேலாண்மையை வலுப்படுத்துவதற்கும் கூடவே அதிக அளவில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தேவயைன ஆக்கபூர்வமான திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்கவேண்டும் என்றும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்று நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ஜிஎஸ்டி வரிவிகிதங்களை மிகவும் எளிமையாக்கவேண்டும் என்றும், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் திவாலாவதை தடுக்கும் வகையில் கட்டமைப்பை உருவாக்கவேண்டும் என்றும் பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளதாக நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.