டெல்லி: ஜிஎஸ்டியில் நடைபெறும் வரி மோசடி மற்றும் வரி ஏய்ப்பை தடுக்கும் வகையில் ஜிஎஸ்டி கவுன்சிலும் மத்திய மறைமுக வரிகள் ஆணையமும் புதிய திட்டங்களை வகுத்துள்ளன. இதை வரும் 21ஆம் தேதி புதிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின்னர் நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது.
வரிச்சீர்திருத்தத்தின் நன்மைகளை தற்போது அனைவரும் வெளிப்படையாக உணரத் தொடங்கியுள்ள இந்த வேளையில், வர்த்தகர்களும் தொழில்துறையினரும் கடந்த 2 ஆண்டுகளாக செலுத்திய ஜிஎஸ்டி வரி மற்றம் அந்நிறுவனங்களின் நடவடிக்கைகளைப் பற்றி விரிவாக ஆய்வு மத்திய அரசு முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது என்று வரி நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலையில் புதிய வரி முறையான சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி முறை அமல் படுத்தப்பட்டது. வாட் வரி முறைக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டாலும், வரி விகிதங்கள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக வாட் வரி முறையில் குறைந்தபட்ச வரி விகிதங்களாகவும், வரிவிலக்கு பெற்ற பொருட்களும், ஜிஎஸ்டி வரி முறையில் 18 முதல் 28 சதவிகித கட்டத்திற்குள் கொண்டு செல்லப்பட்டன.
வரி விலக்குக்குரிய பொருட்கள் உச்ச வரிவிதிப்பு விகிதத்தில் கொண்டு செல்லப்பட்டதை ஏற்றுகொள்ள முடியாத சிறு, குறு மற்றம் நடுத்தர வர்த்தகர்களும், தொழில்துறையினரும் அப்போது நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லியிடம் முறையிட்டு வரி விகிதங்களை குறைக்கவேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தனர். உயர் வரி விகிதங்களால் வரி ஏய்ப்பும் வரி மோசடியுமே அதிக அளவில் நடக்கக்கூடும் என்று முறையிட்டனர்.
வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையினரின் கோரிக்கையை ஏற்று நிதியமைச்சர் அருண் ஜெட்லியும், அவ்வப்போது வரி விதிகங்களை மாற்றியும் உயர் வரி விகிதங்களை குறைத்தும் உத்தரவிட்டார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் பெரும்பாலான வர்த்தகர்களும் தொழில்துறையினரும் தாங்கள் வசூலித்த வரியை அரசுக்கு செலுத்தாமல் காலம் தாழ்த்தியும், இன்னமும வரி செலுத்தாமலும் இருந்து வருகின்றனர்.
கடந்த 2018-19ஆம் நிதியாண்டு வரையிலும் தாக்கல் செய்திருந்த மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன்களை விரிவாக ஆராய்ந்ததில் 225 போலி பில்களை தயாரித்து அதன் மூலமாக சுமார் 1314 கோடி ரூபாய் வரையிலும் வரி மோசடி செய்துள்ளது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வர்த்தகர்களின் இந்த நடவடிக்கையால் அரசுக்கு முறையாக வரவேண்டிய வரி வசூல் கிடைப்பதில் தடங்களும் கால தாமதமும் ஏற்படுகிறது. இதைத் தடுப்பதற்காகவே ஜிஎஸ்டி கவுன்சிலும் தற்போது ஜிஎஸ்டி வரி முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர தொடங்கிவிட்டது.
முதலில் சரக்கு பரிமாற்றத்தில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவரும் வகையில், வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் சரக்குகளோடு கண்டிப்பாக இ-பே பில் கண்டிப்பாக தயாரித்து அனுப்பவேண்டும் என்றும், கூடவே அஞ்சலக குறியீட்டு எண்ணையும் குறிப்பிட வேண்டும் என்று ஜிஎஸ்டி ஆணையம் அறிவுறுத்தியது. அதோடு ரூ.5 கோடிக்கும் அதிகமாக ஆண்டு விற்றுமுதல் கொண்டவர்கள் அனைவரும் வரும் அக்டோபர் முதல் கண்டிப்பாக இ-பில் என்னும் மின்னணு பில் உருவாக்குவதை கட்டாயமாக்கி உள்ளது.
பெருநிறுவனங்கள் அனைத்துமே தங்களின் அனைத்து பில் பரிவர்த்தனைகளை மின்னணு முறையில் மேற்கொள்வதால், வரி ஏய்ப்பு மற்றும் வரி மோசடியில் ஈடுபடுவது முற்றிலும் தவிர்க்கப்பட்டுவிடும். அதோடு அனைத்து பில் பரிவர்த்தகனைகளும், ஜிஎஸ்டி இணையதளத்தின் வழியாக வருமான வரி இணையதளத்தோடு இணைக்கப்பட்டுவிடும் என்பதால், ஆண்டு விற்றுமுதலிலும் மோசடி செய்யமுடியாமல் தடுக்கப்பட்டுவிடும். அதோடு தொழில்துறையினரின் நடவடிக்ககைள் எல்லாமே வெளிப்படைத் தன்மையோடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவேதான், வரி மோசடியையும் வரி ஏய்ப்பு செய்வதையும் தடுக்கும் பொருட்டு மத்திய மறைமுக வரிகள் ஆணையமும், ஜிஎஸ்டி கவுன்சிலும் இணைந்து தடுக்க புதிய திட்டத்தை வகுத்துள்ளன. இதை வரும் ஜூன் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின்னர் நடைமுறைப்படுத்த முடிவெடுத்துள்ளன.
தற்போது இரண்டாம் முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடித்தள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், அருண் ஜெட்லிக்கு பதிலாக முற்றிலும் புதியவரான நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். வரும் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யவிருக்கும் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பில் முழுமையாக ஈடுபட்டுள்ளார். அதோடு தன்னுடைய தேர்வை நியாயப்படுத்தும் வகையில் தனது திறமையை நிரூபிக்க ஆயத்தமாகி வருகிறார்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் புதிய தலைவராக உள்ள நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி வரி முறையில் பெரிய அளவிலான மாற்றத்தை புகுத்த தயாராகிவிட்டார் என்றே வரி நிபுணர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர். முக்கியமாக ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அதன் முழுமையான பயன்பாட்டை இபோதுதான் அனைத்து தரப்பினரும் தற்போது தான் நன்கு உணரத் தொடங்கியுள்ளதாக வரி நிபுணர்களும் ஒத்துக்கொள்கின்றனர்.
எனவேதான் வரி நிபுணர்களும் ஜிஎஸ்டி வரிமுறையில் நடைபெறும் வரி மோசடி மற்றும் வரி ஏய்ப்பை முற்றிலும் களையும் விதத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி வரி முறையில் புதிய உத்தியையும், திட்டத்தையும் செயல்படுத்தப்போவதை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.