திருப்பூர்: இன்று தாக்கல் செய்யவிருக்கும் மத்திய முழு பட்ஜெட்டில், இந்தியாவின் டாலர் சிட்டி எனப் போற்றப்படும் திருப்பூர் நகர வாசிகளும் தங்கள் ஊரின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
பட்ஜெட்டில் அத்தியவசிய மருத்துவ வசதிகள், தொழில் வளர்ச்சிக்கு உதவும் ஆராய்ச்சி நிலையங்கள் போன்றவை இருந்தால் சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளோடு போட்டி போட்டு ஏற்றுமதியை உயர்த்த பெரும் உதவிகரமாக இருக்கும் என்பதே திருப்பூர் வாசிகளின் எதிர்பார்ப்பாகும்.
ஆயத்த ஆடைகள் மற்றும் பின்னலாடை ஏற்றுமதிக்கு ஜிஎஸ்டி வரியாக 5 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது. இதனால் தங்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பதோடு, லாபமும் குறைகிறது. தற்போது விதிக்கப்படும் 3 சதவிகிதமாகவோ அல்லது வரி விலக்கும் அளித்தோ பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடவேண்டும் என்று திருப்பூர் தொழில்துறையினரும் வர்த்தகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
அந்நியச்செலாவணி வருவாய்
சுறுசுறுப்புக்கு பெயர் பெற்ற நகரம் என்ற பெயரை, ஜப்பான் நாட்டிடம் இருந்து தட்டிப்பறித்த திருப்பூர் நகரம். இன்றைக்கு இந்தியாவின் அந்நியச்செலாவணி வருமானத்தில் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் திருப்பூர் நகரமே கொடுத்துக்கொண்டிருக்கிறது என்பது திருப்பூர் மக்களுக்கும் தொழில் துறையினருக்கும் பெருமைதான்.
30 ஆயிரம் கோடி ஏற்றுமதி
இன்றைக்கு ஜப்பான் மற்றும் சீனா போன்ற மிகவும் வளர்ந்த நாடுகளுடன் ஏற்றுமதி வர்த்தகத்தில் கடும் சவாலையும் போட்டியை கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரே நகரம் திருப்பூர் மட்டுமே. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்து முன்னணி நகரமாக திகழ்கிறது.
அவசியத் தேவைகள்
நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள், தொழில்துறையினர் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில் தூங்கா நகரம் என்றும் டாலர் சிட்டி எனப் புகழப்படும் நகரமான திருப்பூரில் வசிக்கும் சாதாரண மக்கள் மற்றும் தொழில் துறையினரும் தங்கள் நகரத்தின் தொழில் வளர்ச்சிக்கு தற்போதைய அத்தியாவசிய மிகவும் அவசியத் தேவைகள் என்ன என்று பட்டியல் வாசிக்கிறார்கள்.
மேலும் ஒரு இஎஸ்ஐ மருத்துவனை
திருப்பூர் நகரத்தின் ஏற்றுமதிக்கு முக்கிய பங்காற்றுவது, அன்றாட கூலித் தொழிலாளர்கள் தான். மாவட்ட மக்கள் தொகையில் 60 சதவிகிதம் வரையில் திருப்பூரில் வசிக்கின்றனர். பெரும்பான்மையான மக்கள் அன்றாட கூலித் தொழிலாளிகளாக இருப்பதால், அவர்களின் அத்தியவசிய மருத்துவ தேவைகளுக்கு நாடுவது பெரும்பாலும் அரசு மருத்துவமனை மற்றும் தொழிலாளர் மாநில காப்பீடு (ESI) மருத்துவனையையும் தான். கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள் தொகை உள்ள தங்களுக்கு அதிக வசதியுடன் கூடிய மேலும் ஒரு இஎஸ்ஐ மருத்துவமனை வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இவர்களின் தேவையை இன்றைக்கு தாக்கலாகும் பட்ஜெட்டில் பூர்த்தியாகுமா என்பது தெரியவில்லை.
தொழிலாளியா தீவிரவாதியா
அடுத்ததாக, தொழிலாளர் பிரச்சனை. முன்னணி வர்ததக நகரமான தங்கள் நகரத்திற்கு நாடு முழுவதும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் வந்தவண்ணம் உள்ளனர். அவர்களில் தொழிலாளர்கள் யார், பயங்கவாதிகள் யார் என்று தெரிவதில்லை. தீவிரவாதிகள் என்பது தெரியாமலேயே அவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விடுவதால் பின்னாளில் அவர்களைப் பற்றி காவல்துறைக்கு தெரியும்போது, வீட்டு உரிமையாளர்களும் பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறார்கள்.
கண்காணிப்பு மையம்
எனவே, திருப்பூருக்கு தினசரி வரும் தொழிலாளர்கள் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் வேலைவாய்ப்பு கண்காணிப்பு மையம் ஒன்று அவசியம் என்று பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் அவசியம் இடம்பெறவேண்டும் என்று திருப்பூர் மக்களும் தொழில் துறையினரும் பெரிதும் எதிர்பார்கிறார்கள்.
தேவை ஆராய்ச்சி மையம்
தற்போது ஆயத்த ஆடை மற்றும் பின்னலாடை தயாரிப்பதற்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் உதிரபாகங்களை இறக்குமதி செய்து ஆண்டு தோறும் கண்காட்சி நடத்தி வருகிறோம். வரும் காலங்களில் ஆயத்த ஆடைகள் மற்றும் பின்னலாடை உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும், தொழில்நுட்பத்தை புகுத்தவும் தேவையான ஆராய்ச்சி நிலையம் அவசியம் அமைக்கப்படவேண்டும் என்றும் இதற்கான முறையான அறிவுப்பு பட்ஜெட்டில் இடம்பெறவேண்டும் என்பது திருப்பூர்வாசிகளின் ஏக்கமாகும்.
தேவையில்லை ஜிஎஸ்டி வரி
ஆயத்த ஆடைகள் மற்றும் பின்னலாடை ஏற்றுமதிக்கு ஜிஎஸ்டி வரியாக 5 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது. இதனால் தங்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பதோடு, லாபமும் குறைகிறது. தற்போது விதிக்கப்படும் 3 சதவிகிதமாகவோ அல்லது வரி விலக்கும் அளித்தோ பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடவேண்டும் என்று திருப்பூர் தொழில்துறையினரும் வர்த்தகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
சாதனைக்குழந்தையா
இதோ இப்போது தான் பிரசவ வலி எடுத்து மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். இன்னும் சில மணி நேரங்களில் குழந்தை(பட்ஜெட்) பிறந்து விடும். அதன் பின்புதான் அது ஆணா அல்லது பெண்ணா என்பது தெரியவரும். மேலும், அது வளர்ந்து சாதனை படைக்குமா அல்லது சவலைப்பிள்ளையாக இருக்குமா என்பது தெரியவரும்.