டெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவுப் பாதையிலேயே பயணிப்பதை தடுத்து நிறத்தி வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் வகையிலேயே இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இருக்கவேண்டும் என்று பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வேலையில்லாத் திண்டாட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு தொழில் வளர்ச்சியும் மந்தமாகவே உள்ளது. இதற்கு சான்றாக வாகன உற்பத்தி மற்றும் விற்பனை சரிந்து வருவதே சாட்சி. அதோடு மழைவளமும் தொடர்ந்து ஏமாற்றி வருவதால் விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்கும், விவசாயிகளின் வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று சாமான்ய மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நேற்று வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் நடப்பு 2019-20ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி நிச்சயம் 8 சதவிகிதத்தை தொடும் என்று நம்பிக்கை அளித்திருப்பதால், இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டும் அந்தப் பாதையை நோக்கியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓட்டு முக்கியம்
கடந்த பிப்ரவரி மாதத்தில் மத்திய அரசின் அத்தியாவசிய செலவினங்களுக்கு அனுமதி அளிக்கும் வகையிலேயே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதோடு லோக்சபா தேர்தலை ஒட்டி மாதச் சம்பளதாரர்களை திருப்தி படுத்துவதற்காகவும், விவசாயிகளின் ஓட்டுக்கள் முக்கியம் என்று திடீரென்று தோன்றிய ஞானத்தினாலும், சில பல சலுகைகள் மற்றும் சமூக நலத்த்திட்டங்கள் அந்த இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற்றது.
நம்பிக்கை பலிக்குமா பொய்க்குமா
இடைக்கால பட்ஜெட்டில் மாதச் சம்பளதாரர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள், வரி செலுத்த தேவையில்லை என்று அறிவித்துவிட்டதால், மாதச் சம்பளதார்கள் அனைவரும் வரிச்சலுகையை எதிர்பார்த்திருப்பார்கள். இதை வைத்து ஏற்கனவே பல மனக்கோட்டைகளை கட்டியிருப்பார்கள். எனவே இன்று தாக்கல் செய்யவிருக்கும் பட்ஜெட்டில் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலேயே திட்டங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி ஆதாரம் எங்கே
அதோடு, இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளின் ஓட்டுக்களை கவரும் வகையில் அவர்களின் குறைந்தபட்ச வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் ஆண்டுக்கு ரூ.6000 அளிக்கும் பிஎம்-கிஷான் திட்டமும் அறிவிக்கப்பட்டு பெரும்பாலபனவர்களுக்கு ஏற்கனவே இரண்டு தவணைகள் அளிக்கப்பட்டுவிட்டன. ஏற்கனவே கடந்த நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 6.4 சதவிகிதமாக உள்ள நிலையில், இதற்கு தேவைப்படும் நிதி ஆதாரங்கள் எங்கிருந்து பெறப்படும் என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும்.
அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம்
அடுத்ததாக, வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த சில ஆண்டுகளாகவே தலையாய பிரச்சனையாகவே உருவெடுத்துள்ளது. அதிலும் கடந்த இடைக்கால பட்ஜெட் தாக்கலான பிப்ரவரி மாதத்தில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து விட்டதாக பொருளாதார கண்காணிப்பு மையம் புள்ளிவிவரப்பட்டியலை வெளியிட்டு மத்திய அரசுக்கு புளியைக் கரைத்தது. எனவே, இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் வகையில் இன்று தாக்கலாகும் பட்ஜெட்டில் ஆக்கபூர்வமான மற்றும் கவர்ச்சிகரமான திட்டங்கள் இடம்பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டியில் மாற்றம் வருமா
அடுத்ததாக, மத்திய அரசின் கஜனாவுக்கு அதிக வருவாயை ஈட்டித்தரும் ஜிஎஸ்டி வரி முறையில், மேலும் கூடுதலான தொழில் நிறுவனங்கள், வர்த்தகர்களை ஜிஎஸ்டி வரி வட்டத்திற்குள் கொண்டுவரும் வகையில் அதிரடியான திட்டங்கள் இன்று தாக்கலாகும் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு அரசுக்கு செலுத்தவேண்டிய வரியை செலுத்தாமல் மோசடி செய்பவர்களை தண்டிக்கும் வகையில் கடுமையான சட்டத் திருத்தங்களை பட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்பிருக்கிறது. அதோடு 5 பிரிவு வரிகளை ஒன்று அல்லது இரண்டு பிரிவுகளாக மாற்றும் வகையில் அதிரடி அறிவிப்புகள் இன்று தாக்கலாகும் பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
தேவை மறுசீரமைப்பு நிதி
தொழில் துறையும் தற்போது கடும் நிதிச் சிக்கல்களை சந்தித்து வருகிறது. இதில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் அடங்கும். ஏற்கனவே ஜிஎஸ்டி பிரச்சனையால் பல நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. எனவே மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி தொழில்துறை வளம் பெற அதிக அளவில் கடன் வசதி அளித்து அவற்றிற்கு புத்துயிர் அளிக்கவேண்டும். ஆனால் கடன் வழங்கும் நிலையில் தற்போது பொதுத்துறை வங்கிகளும் இல்லாததால், அவற்றின் மறுசீரமைப்பிற்கு கூடுதல் நிதியுதவி அளிக்க வேண்டும். அதோடு வங்கிகள் ஏற்கனவே கொடுத்த கடனை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனால் வராக்கடன் பிரச்சனை குறைவதோடு, தொழில்துறையினருக்கு புதியதாக அதிக அளவில் கடன் வழங்கி தொழில் வளர்ச்சியை மேலும் அதிகரிக்க முடியும். இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன் உள்ள மிக முக்கிய பிரச்சனையாகும்.
தனியார் முதலீட்டுக்கு முன்னுரிமை
அதோடு உள்கட்டமைப்பு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் மேலும் அதிகரிக்க மத்திய அரசு முன்வரவேண்டும். இதற்கு மத்திய அரசு நிதியுதவி அளிப்பதோடு, முன்னனியில் உள்ள தனியார் நிறுவன முதலீடுகளையும் ஈர்க்கும் வகையில் திட்டங்களை கொண்டுவரலாம். மேலும் கடன் பத்திரங்களை வெளியிட்டு கூடுதல் நிதி திரட்டுவதோடு, இவ்வாறான முதலீட்டுத் திட்டங்களுக்கு கூடுதல் வருமான வரிச் சலுகையும் அளிக்க முன்வரவேண்டும். எனவே இதற்கான அறிவுப்புகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கொண்டாட்டம்தான்.
ஏறுமா அல்லது சறுக்குமா
மேற்கண்ட ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே பொருளாதார ஆய்வரிக்கையில் குறிப்பிட்டபடி நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதம் என்ற இலக்கை எட்ட முயற்சிக்கலாம். அதை விடுத்து பரம்பரை வரி, ஏடிஎம்மில் அதிகமாக பணம் எடுத்தால் வரி என்று மேலும் சுமையைக் கூட்டினால், அது வளர்ச்சி என்ற ஏணியாக இல்லாமல் பரமபத விளையாட்டில் இருக்கும் பாம்பைப் போல் மீண்டும் சறுக்கவே செய்யும்.