டெல்லி: மத்திய பட்ஜெட்டில் இந்த ஆண்டும் வழக்கம்போல் மாதச் சம்பளதாரர்களுக்கும் தனிநபர் பிரிவில் வருமான வரி செலுத்துவோருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. வருமான வரிச்சலுகையில் எந்த மாற்றமும் செய்யாமல் பழைய நிலையே தொடரும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து அல்வா கொடுத்து விட்டார். பெருசா எதிர்ப்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்துள்ளது.
கடந்த நிதியாண்டில் இருந்தது போல் தனிநபர் மற்றும் மாதச்சம்பளதாரர்ளின் வருமான வரி விலக்கு உச்ச வரம்பான 2.5 லட்சம் என்பதில் பழைய முறையே தொடரும் என்றும் அதில் எந்தவிதமான மாற்றமும் செய்யவில்லை என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு சென்றடையும் வருமான வரி வருவாயில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் வரையில் தனிநபர் மற்றும் மாதச்சம்பளதாரர்கள் செலுத்தும் வரியின் மூலமே கிடைக்கிறது. ஆனால் அதற்கு மாறாக அனைத்து வருமான வரிச்சலுகை பயன்கள் அனைத்துமே நிறுவனங்களுக்கு சென்றுவிடுகிறது. இது வேதனை வருமான வரிமுறை ஆரம்பமான காலத்தில் இருந்தே உள்ளது போலும்.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக நிதியமைச்சர், அனைத்து தரப்பினரிடம் இருந்தும் பட்ஜெட் தொடர்பான ஆலோசனைகளை கேட்டுப் பெறுவதுண்டு. அப்போது மாதச் சம்பளதாரர்களுக்கு இ(எ)ந்த ஆண்டு நிச்சயம் வருமான வரிச் சலுகையும் வரி விலக்குக்கான உச்ச வரம்பும் நிச்சயம் அதிகரிக்கப்படும் என்று நம்பிக்கை அளிக்கும் விதமாக தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல், இந்த ஆண்டும் மாதச் சம்பளதாரர்களுக்கு வருமான வரிச்சலுகையும் வரிவிலக்குக்கான உச்ச வரம்பும் நிச்சயம் அதிகரிக்கப்படும் என்று அனைவருமே எதிர்பார்த்திருந்தனர். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் அதற்கேற்ப நம்பிக்கை அளித்திருந்தார். இதற்கு முக்கிய காரணம், கடந்த பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த பியூஷ் கோயலும், பட்ஜெட் குறித்து கருத்து தெரிவிக்கையில், இது வெறும் சாம்பிள் தான், இன்னும் அதிகமான சலுகை முழு பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்றும் உறுதி அளித்திருந்தார்.
பியூஷ் கோயல் அளித்த நம்பிக்கையின் பேரில் மாதச்சம்பளதாரர்கள் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கே வாக்களித்து வெற்றி பெற வைத்துவிட்டனர். ஆனால் பியூஷ் கோயலுக்கு பதிலாக முதன்முறையாக நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன், வழக்கம்போல மாதச் சம்பளதாரர்கள் உருப்படியாக எந்தவித சலுகையும் அளிக்காமல் ஏமாற்றிவிட்டார் என்று வரி செலுத்தும் மாதச்சம்பளதாரர்கள் அனைவருமே ஏமாற்றத்தில் உள்ளனர்.
நேற்று தாக்கல் செய்யப்பட்ட முழு பட்ஜெட்டிலும் நிதியமைச்சர் தனிநபர் வருமானவரி உச்சவரம்பானது பழைய நிலையே தொடரும் என்று அறிவித்தார். அப்போது மாதச்சம்பளதாரர்களின் வரிச்சுமையை போக்க இந்த அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் வெளிப்பாடே இந்த வரி விலக்கு உச்ச வரம்பு என்று வலியுறத்தினார். இந்த உச்ச வரம்பானது ஏற்கனவே இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது தான்.
மாத சம்பளதாரர்களுக்கு வரி இப்படித்தான்:
இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது போல், தனிநபர் வருமானவரி உச்சவரம்பானது ரூ.2.50 லட்சமாகவே உள்ளது. அதேபோல் தனிநபர் பிரிவில் மொத்த வருமானம் ரூ.5 லட்சத்திற்குள் இருந்தால் அவர்கள் வருமான வரி செலுத்தத் தேவையில்லை. அதற்கு மேற்பட்டு வருமானம் இருந்தால் அதற்கு வருமான வரி செலுத்தவேண்டியது அவசியம்.
அதாவது தனிநபர் பிரிவில் ரூ.2.50 லட்சம் வரையில் வரி செலுத்த தேவையில்லை. ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வழக்கம்போல் 5 சதவிகித வரி செலுத்தவேண்டியது அவசியம்.
ஆனால் அதே சமயத்தில், மாதச் சம்பளதாரர்கள் பெறும் ஊதியம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையில் இருந்தால் அவர்கள் வருமான வரி செலுத்தவேண்டியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இதிலும் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை.
அதேபோல் நிரந்தர கழிவுத்தொகையானது (Standard Deduction) முன்பு ரூ.40 ஆயிரமாக இருந்த நிலையில் நடப்பு பட்ஜெட்டில் அது ரூ.50 ஆயிரமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
தற்போது நடைமுறையில் உள்ள வருமான வரி விலக்கு உச்சவரம்பான ரூ.2.50 லட்சம் என்பது கடந்த 2014ஆம் ஆண்டில் முதல் முறை பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்த ஆண்டில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அந்த உச்சவரம்பு இன்னும் அப்படியே உள்ளது அனைத்து மாதச் சம்பளதாரர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.