டெல்லி: தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் என்பார்கள். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டால் பங்குச்சந்தைகள் கரடியின் பிடியில் சிக்கியுள்ளன. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை நிப்டியும் 270 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தன.
பட்ஜெட் தாக்கலுக்கு முன் உயர்வில் இருந்த பங்குச்சந்தைகள் பட்ஜெட் தாக்கலுக்குப் பின் கடுமை சரிவை சந்தித்து வருகின்றன. ஜூலை 1ஆம் தேதியில் இருந்து 5ஆம் தேதி வரையிலும், அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து சுமார் 475 கோடி ரூபாய் வரையிலான பங்குகளை விற்று விட்டு அதற்கு பதிலாக கடன் சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.
கடந்த வாரத்தில் திங்கள் முதல் வியாழன் வரையிலும் இந்திய பங்குச்சந்தைகள் தள்ளாட்டத்துடன் இருந்தாலும், வியாழன்று வர்த்தகத்தின் முடிவில் சந்தை சாதகமாகவே முடிந்தது. ஆனால் கடந்த வெள்ளியன்று காலையில் சந்தை சாதகமகவே வர்த்தகத்தை தொடங்கினாலும், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடனே இந்தியப் பங்குச் சந்தைகள் மளமளவென சரிந்தது.
முதலீட்டாளர்கள்
இந்தியப் பங்குச் சந்தைகளில் பல்வேறு வகையான முதலீட்டாளர்கள் முதலீடு செய்துவருகிறார்கள். இதில் சில்லறை முதலீட்டாளர்கள், இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என இருந்தாலும், இந்திய பங்குச் சந்தையில் அதிக அளவில் முதலீடு செய்வது என்னவோ அந்நிய நேரடி முதலீட்டாளர்களும், அந்நிய போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களும் தான். இந்தியப் பங்குச் சந்தைகளை தாங்கிப் பிடிப்பதும், அதள பாதாளத்தில் விழ வைப்பதும் பெரும்பாலும் அந்நிய முதலீட்டாளர்கள் தான்.
அந்நிய முதலீட்டாளர்கள்
கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரையிலும் தள்ளியே இருந்து அந்நிய முதலீட்டாளர்கள், லோக்சபா தேர்தல் நடைபெற்ற காலங்களில் கூட அதிக அளவில் முதலீடு செய்து வந்தனர். இதன் காரணமாகவே இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சங்களை தொட்டு சாதனை படைத்தது. இதன் பின்னர் லோக்சபா தேர்தலுக்கு பின்னர் கடந்த ஜூன் மாதம் முழுவதும் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டாததால் சந்தை தொடர்ந்து ஊசலாட்டத்திலேயே வர்த்தகமானது.
சாதக அம்சங்கள்
இந்நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்களுக்கு சாதகமான அம்சங்கள் இடம்பெறும் என்ற நம்பிக்கையில் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் மீண்டும் இந்திய சந்தையின் பக்கம் தங்கள் பார்வையை திருப்பினர். இதனால் சந்தை மீண்டும் சற்று வேகமெடுக்கத் தொடங்கின. ஆனால் கடந்த வெள்ளியன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடனே சந்தைகள் மீண்டும் விழத் தொடங்கின. தங்கம் இறக்குமதிக்கு கூடுதல் வரி பெட்ரோலிய பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டதால் இந்திய பங்குச்சந்தைகள் சரிவடைந்தன. சந்தையின் சரிவு இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று திங்கட்கிழமையும் தொடர்ந்தது
முதலீடுகளை தவிர்க்க காரணம்
இதற்கு முக்கிய காரணம், அந்நிய நிறுவன நிறுவன முதலீட்டாளர்களும் (FII), அந்நிய போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களும் (FPI) இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து தங்கள் முதலீடுகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்ததால் தான். கடந்த வாரத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடுகளை தவிர்த்துவிட்டனர் என்றே சொல்லலாம்.
வெளியேறும் அந்நிய முதலீட்டாளர்கள்
கடந்த வாரத்தில் மட்டும் அந்நிய முதலீட்டாளர்கள் சுமார் 3 ஆயிரத்து 710.21 கோடி ரூபாய் வரையிலும் விற்று விட்டு இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து வெளியேறிவிட்டனர். அதற்கு மாறாக இந்திய கடன் சந்தையில் சுமார் 3 ஆயிரத்து 234.65 கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்திருந்தனர். ஆக மொத்தத்தில் சுமார் 475.56 கோடி ரூபாய் கூடுதலாக விற்று விட்டு வெளியேறி இருந்தனர்.
காரணம் இதுதான்
அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து தங்கள் முதலீடுகளை விற்றுவிட்டு வெளியேற மற்றொரு முக்கிய காரணம், பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்நிய முதலீட்டாளர்களுக்கான கேஒய்சி (KYC) விதிமுறைகளை தளர்த்தியதும், மற்ற சமூக நலத்திட்டங்களிலும் மூலதனச் சந்தையிலும் தங்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அனுமதிப்பதற்குமான அறிவிப்பை வெளியிட்டதுதான். இதன் காரணமாகவே இந்தியப் பங்குச் சந்தைகளில் நேற்றும் கடும் சரிவு காணப்பட்டது எனலாம்.