மும்பை: ஜிங், காப்பர், அலுமினியம், லீட், எண்ணெய் மற்றும் எரிவாயு, இரும்பு என பல உலோகங்கள் சார்ந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் Vedanta-ம் ஒன்று.
இந்த Vedanta நிறுவனம் தான் தமிழகத்தில் போராட்ட களமான தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையையும் நடத்தி வருகிறது. இந்த Vedanta நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் சுமார் 55,000 கோடி ரூபாயை முதலீடு செய்யப் போவதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
இந்தியாவிலேயே அதிக எண்ணெய் மற்றும் கேஸ் படுகைகளை (Gas Blocks) வைத்திருக்கும் நிறுவனம் இந்த Vedanta நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் தான் இந்தியாவின் 53 புதிய கேஸ் படுகைகள் இருக்கின்றன. சரி 55,000 கோடி முதலீட்டுக்கு வருவோம்.
முதலீடுகள்
இந்த 50,000 கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் Vedanta நிறுவனத்தின் மொத்த உற்பத்தியை 50 சதவிகிதம் வரை அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இந்த 55,000 கோடி ரூபாய் முதலீட்டை யாரிடம் இருந்தோ கொண்டு வரப் போவதில்லை. வழக்கம் போல வங்கிகளிடம் இருந்து வட்டிக்கு கடன் வாங்கப் போவதில்லையாம். பின் எப்படி முதலீடு செய்யப் போகிறார்கள்...?
சொந்த பணம்
அவர்கள் நிறுவனத்தில் இருக்கும் பணத்தைக் கொண்டே இந்த 55,000 கோடி ரூபாய் முதலீட்டைச் செய்யப் போவதாக Vedanta நிறுவனத்தின் 54-வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் சொல்லி இருக்கிறார் vedanta குழுமத்தின் தலைவர் நவீன் அகர்வால். ஆக யாரிடமும் கடன் வாங்கத் தேவை இல்லாத அளவுக்கு இந்த நிறுவனத்திடம் அவ்வளவு பணம் குவிந்து கிடக்கிறது என்பதை இவர்களே ஒப்புக் கொண்டது போல் இருக்கிறது. இன்றைய தேதியில், அதுவும் பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதற்கு இடையில், ஒரு நிறுவனத்திடம் 55,000 கோடி ரூபாய் பணம் இருப்பது எல்லாம் பெரிய விஷயம் என்பதையும் கவனிக்க வேண்டி இருக்கிறது.
உற்பத்தி விவரம்
இந்தியாவிலேயே அதிக அலுமினியம் உற்பத்தி செய்யும் நிறுவனம் Vedanta தான். இன்னும் இந்த அளவை 50 சதவிகிதம் வரை அதிகரிக்க இருக்கிறார்களாம். அதோடு உலகிலேயே அதிக ஜிங்க் தயாரிக்கும் நிறுவனமாகவும், உலகின் டாப் 3 வெள்ளி உற்பத்தியாளர்களில் ஒரு நிறுவனமாகவும் Vedanta நிறுவனம் வர விரும்புவதையும் கூட்டத்தில் சொல்லி இருக்கிறார்கள்.
இயற்கை வளங்கள் தேவை
நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டில் இன்ஃப்ராஸ்ட்ரக்சருக்கு 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யவிருப்பதால், இந்தியாவில் நகர்மயமாதலும், தொழில் மயமாவதையும் பெரிய அளவில் முன்னெடுக்கப்படும், எனவும் சொல்லி இருக்கிறார்கள். இந்த இன்ஃப்ராஸ்ட்ரக்சர் திட்டங்களுக்கான முதலீடு அதிகரிக்கும் என்றால், அதற்கு தேவையான மூலப்பொருட்களுக்கான தேவையும் அதிகரிக்கத் தானே செய்யும். அதோடு இரும்பு, காப்பர், ஸ்டீல், அலுமினியம், பாக்ஸைட் போன்ற இயற்கை வளங்களுக்கான தேவையும் அதிகரிக்கும் என்கிற கணக்கில், தங்கள் பிசினஸ் லாபக் கணக்கில் இருக்கிறார்கள் Vedanta நிறுவனத்தினர்கள்.
இந்தியாவின் நிலை
அதோடு பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இந்தியாவைப் போன்ற இயற்கை வளம் கொண்ட நாடுகள் தான். ஆனால் அந்த நாடுகளில் 8 - 10 சதவிகி ஜிடிபியை அவர்கள் நாட்டு இயற்கை வளம் சார்ந்த தொழில்களில் இருந்து தான் வருகிறது. ஆனால் இந்தியாவில் தான் இயற்கை வளம் சார்ந்த தொழில்களில் இருந்து வெறும் 4 சதவிகித ஜிடிபி வருகிறது எனவும் சொல்லி இருக்கிறார்கள்.
உற்பத்தி செய்வோம்
இந்தியாவில் ஆண்டுக்கு 150 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறோம். இந்தியாவின் மிகப் பெரிய எண்ணெய் மற்றும் கேஸ் உற்பத்தியாளராக இருக்கும் Vedanta இந்த வருடத்தில், தன் எண்ணெய் மற்றும் கேஸ் உற்பத்தியை இரண்டு மடங்காக அதிகரிக்க உள்ளதையும் சொல்லி இருக்கிறார்கள்.
காற்று மற்றும் நீர் மாசு
இவர்கள் முதலீடு செய்வது, நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்... இதுவரை தூத்துக்குடி ஸ்டெர்லைட்டால் தூத்துக்குடி நகர காற்று மாசு, நீர் மாசுக்கு எல்லாம் Vedanta நிறுவனம் காரணம் இல்லை எனச் சொல்லி வருகிறார்கள். ஆனால் தூத்துக்குடியில் காற்று மாசு, நீர் மாசு இருப்பதை ஒப்புக் கொள்கிறது தமிழக அரசு. ஆக தூத்துக்குடியில் காற்று மற்றும் நீர் மாசுக்கு யார் காரணம் என இதுவரை ஒரு தெளிவான பதில் கிடைக்கவில்லை.
13 பேருக்கு என்ன பதில்
தமிழக அரசும் Vedanta நிறுவனத்துக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருவது போலவே தெரிகிறது. அரசும் ஸ்டெர்லைட் குறித்து என்ன முடிவைத் தீர்மானமாக எடுக்கப் போகிறது எனத் தெரியவில்லை. அதற்கும் பதில் இல்லை. 13 அப்பாவி பொதுமக்கள் இந்த நிறுவனத்தை எதிர்த்துப் போராடிய காரணத்தால் உயிர் இழந்தார்கள். அதற்கு யார் காரணம் எனச் சொல்லவில்லை. இப்படி எதற்கும் பதில் சொல்லாமல் தன் உற்பத்தியைப் பெருக்கிக் கொள்ள, 55,000 கோடி ரூபாயை முதலீடு செய்யப் போகிறது Vedanta. நம் தமிழக அரசும் பேசாமல் மெளனம் காக்கிறது.