டெல்லி: நிதிச்சேவைத் துறைகளில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகி வருவதால் அடுத்த பத்து ஆண்டுகளில் உலகின் முதலீடு தொடர்பான நிதிச் சந்தையில் இந்தியா தான் முன்னணியில் இருக்கும் என்று இந்திய பட்டய கணக்காளர் நிதி ஆய்வு மையம் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
அதேபோல், இந்தியாவில் தற்போது நிதிச்சேவைத் துறைகள் தான் வேகமாக வளர்ந்து வருவதால், பெரும்பாலான இளைஞர்கள் அதை நோக்கியே நகர்வதால் வருங்காலத்தில் முதலீட்டுத் துறை நிபுணர்களின் தேவை கிட்டத்ட்ட 2.9 சதவிகித அளவிற்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்று கணக்கிடப்பட்ட ஆண்டு வளர்ச்சி விகித அறிக்கை தெரிவிக்கறது.
இளம் வயதில் இந்தியாவின் உயர்ந்த பதவியான தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள கேவி.சுப்ரமணியன், மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள கீதா கோபிநாத் ஆகியோர் மிகக் குறைந்த வயதிலேயே உயர்ந்த பதவியை எட்டிப்பிடிக்க முக்கிய காரணம், நிதித்துறை சம்பந்தமான துறையில் அதிக நிபுணத்துவம் பெற்றிருந்ததுதான்.
சிறந்த ஏற்றுமதி மையமாகும் இந்தியா..இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Apple iphone..ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி!
தொடர்ந்து அதிகரிக்கும் வேலையின்மை
இந்தியாவில் நாளுக்கு நாள் தொடர்ந்து வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவதாக அனைத்து புள்ளிவிவரங்களும் புளியைக் கரைக்கின்றன. அதிலும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை தான் அதிக அளவில் இருப்பதாகவும் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தை எட்டியுள்ளதாகவும் மத்திய அரசின் பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
ரூட்டை மாத்து
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மேல்நிலைக் கல்வியை முடித்த பெரும்பாலான மாணவர்கள், தகவல் தொழில்நுட்பம், பொறியியல் துறைகளில் படிப்பதற்கான ஆர்வத்தை குறைத்துக்கொண்டு, நிதித்துறை சம்பந்தமான படிப்புகளில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும், புள்ளியியல் ஆய்வு, வங்கியியல், நிதி மேலாண்மை, வணிகவியல், சர்வதேச கணக்கியல் மற்றும் வரிவிதிப்பு, பட்டயக்கணக்காளர் போன்ற துறைகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மூடுவிழா காணும் கல்லூரிகள்
இன்றைய இளைய தலைமுறை மாணவர்களுக்கு நிதித்துறை சம்பந்தமான படிப்புகளில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, ஒரு காலத்தில் பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கல்லூரிகளில் சேர்வதற்கு போட்டி போட்டு இடம் கிடைக்காமல் இருந்த நிலைமாறி இன்றைக்கு பொறியியல் கல்லூரிகள் தொடர்ந்து மூடுவிழா கண்டு வருகின்றன. அதற்கு பதிலாக அவையனைத்தும் கலை மற்றும் அறிவியல் கல்லூரகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
எலி வாலா அல்லது புலி தலையா
இன்றைக்கு பெரும்பாலானவர்கள் கலை அறிவியல் மற்றும் கணக்குபதிவு மற்றும் பட்டயக் கணக்காளர் போன்ற துறைகளில் அதிக அளவில் நாட்டம் கொள்வதற்கு மற்றொரு காரணமும் உண்டு. தகவல் தொழில்நுட்பத்துறை அல்லது பொறியியல் துறை படிப்பு முடித்து ஏதாவது ஒரு தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனத்தில் சேர்ந்து பத்தொடு பதினொன்றாக இருந்துகொண்டு இலக்கு (Target) என்ற இம்சையில் சிக்கிக் கொள்ளாமல், எலிக்கு வாலாக இல்லாமல் புலிக்கு தலையாக இருக்கவேண்டும் என்று பெரும்பாலான இளைஞர்கள் நினைப்பதே முக்கிய காரணமாகும்.
சாதிக்கும் இளைஞர்கள்
இதற்கு சரியான உதாரணம், இளம் வயதில் இந்தியாவின் உயர்ந்த பதவியான தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள கேவி.சுப்ரமணியன், மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள கீதா கோபிநாத் ஆகியோர் மிகக் குறைந்த வயதிலேயே உயர்ந்த பதவியை எட்டிப்பிடிக்க முக்கிய காரணம், நிதித்துறை சம்பந்தமான துறையில் அதிக நிபுணத்துவம் பெற்றிருந்ததுதான்.
முதலீட்டு ஆலோசகர்கள்
தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதற்கு முக்கிய காரணியாக இருப்பது தொழில்துறைதான். தொழில் துறையை அதிக அளவில் ஊக்குவிப்பதற்கு அதிக அளவில் முதலீடுகள் தேவை என்பதால், சரியான முறையில் முதலீடுகளை திட்டமிடுதல், அவற்றை சரியான முறையில் கொண்டு சேர்த்தல், சரியான தொழிலை தேர்ந்தேடுத்து அவற்றில் தங்களுடைய மூலதனத்தை முதலீடு செய்தல் ஆகியவற்றுக்கு முதலீட்டு மற்றும் மூலதன ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முதலீட்டு நிபுணர்களின் வளர்ச்சி
மேலும், வாடிக்கையாளர்களின் மனநிலையை அறிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் முதலீட்டு திட்டங்களை உருவாக்குவதிலும் முதலீட்டு நிபுணர்களின் பணி அவசியமாதலால் அவர்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே அடுத்த பத்தாண்டுகளில் முதலீட்டுத் துறை நிபுணர்களின் வளர்ச்சி விகிதம் 2.9 சதவிகித அளவிற்கு இருக்கும் என்று கணக்கிடப்பட்ட ஆண்டு வளர்ச்சி விகித அறிக்கை தெரிவிக்கறது.
தேவை இவர்களின் சேவை
அதேபோல், இன்றைக்கு உலக நாடுகளின் முதலீட்டு சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளதால், இந்திய சந்தைகளில் முதலீடு செய்வதற்கு அனைத்து நாடுகளில் இருந்தும் முதலீட்டாளர்கள் தங்கள் மூலதனத்தை குவிப்பதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. குறிப்பாக பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் தங்களின் முதலீடுகளை குவிப்பதற்கு தயாராக உள்ளனர். இவர்களுக்கு சரியான ஆலோசனை வழங்க முதலீட்டு ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்களின் உதவி தேவைப்படுவதால் அவர்களின் தேவையும் தொடர்ந்து கூடிக்கொண்டே போகிறது.
33 சதவிகிதம் அதிகரிப்பு
இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடுகள் அதிக அளவில் குவிந்துவருவதற்கு உதாரணம், கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரலில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்திருந்த மொத்த தொகை சுமார் ரூ.19.26 லட்சம் கோடியாகும். இதுவே இரண்டு ஆண்டுகளில் சுமார் 33 சதவிகிதம் வரை அதிகரித்து கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமார் ரூ.25.27 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் முதலீட்டு ஆலோசகர்களின் சரியான வழிகாட்டுதல் மற்றும் திட்டமிட்ட ஆலோசனைகளும் தான்.