டெல்லி: கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளின் இருப்புத் தொகையானது தற்போது ரூ.1 லட்சம் கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய மாநில அரசுகள் வழங்கும் சமூக நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு நேரடியாக கிடைக்கும் வகையில் கடந்த 2014ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று ஜன் தன் யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள், முதியோர், சமூகத்தில் பின்தங்கியோர் மற்றும் வறுமையில் வாடும் விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கடந்த பல ஆண்டுகளாவே வழங்கி வருகிறது. இந்த நலத்திட்ட உதவிகளில் பெரும்பாலானவை பயனாளிகளுக்கு சென்றடைவதில்லை.
ஒருவேளை, நலத்திட்ட உதவிகள், பயனாளிகளின் கைகளுக்கு சென்றாலும் அவை மிகச் சிறிய அளவிலேயே கிடைத்து வந்தன. நடுவில் இருக்கும் பல சமூக விரோதிகள் மற்றும் போலியான பயனாளிகளின் கைகளுக்கு சென்றடைந்து வந்தன. இதனால் சமூக நல உதவித் திட்டங்கள் அனைத்துமே வெற்றிகரமான தோல்வியாகவே இருந்துவந்தன.
கடந்த 2014ஆம் ஆண்டு முதன்முதலில் ஆட்சியைப்பிடித்த மோடி, சமூக நலத்திட்ட உதவிகள் சிந்தாமல் சிதறாமல் அப்படியே முழுவதுமே பயனாளிகளின் கைகளுக்கு சென்றடையும் விதமாக பிரதான் மந்திரி ஜன்-தன்-யோஜனா என்னும் பொதுமக்கள் நிதித் திட்டத்தை தனது முதல் சுதந்திர தினத்தன்று தொடங்கி வைத்தார்.
இதையடுத்து ஜன்-தன்-யோஜனா திட்டம் கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்டு 28ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம் வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. சமூகத்தில் மிகவும் பின்தங்கியவர்கள், ஏழை எளிய மக்கள், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என அனைவருக்கும் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளின் பயன்களை நேரடியாக பெறும் வகையில் இந்த வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டன.
ஜன்-தன்-யோஜனா வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதால் மத்திய அரசு எதிர்பார்த்ததைக் காட்டிலும் அனைவரிடமும் பலத்த வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தற்போது இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஐந்தே ஆண்டுகளில் இருப்புத் தொகையானது 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டி சாதனை படைத்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி நிலவரப்படி ஜன்-தன்-யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட சுமார் 36.06 கோடி வங்கிக்கணக்கில் உள்ள இருப்புத் தொகை சுமார் 99 ஆயிரத்து 650 கோடி ரூபாயாக இருந்தது. அதுவே கடந்த ஜூலை 3ஆம் தேதி வரையிலான புள்ளி விவரப்படி, வங்கிக் கணக்குகளின் இருப்புத் தொகையானது சுமார் 1 லட்சத்து 496 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கூடவே பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் இருப்புத் தொகையானது படிப்படியாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதே கடந்த 2018ஆம ஆண்டின் மார்ச் மாதத்தில், இத்திட்டத்தின் கீழ் இருப்புத் தொகை இல்லாத கணக்குகளின் எண்ணிக்கையானது சுமார் 5.10 கோடியாக இருந்தது. இது ஒட்டுமொத்த ஜன்-தன்-யோஜனா திட்ட கணக்குகளின் எண்ணிக்கையில் 16.22 சதவிகிதம் ஆகும். ஆனால் நடப்பு 2019ஆம் ஆண்டின் மார்ச் இறுதி நிலவரப்படி சுமார் 5.07 கோடியாக குறைந்துவிட்டது. இது மொத்த கணக்குகளின் எண்ணிக்கையில் சுமார் 14.37 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜன்-தன்-யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு தொடங்கியவர்களில் சுமார் 28.44 கோடி பேர்களுக்கு ரூபே (RuPay) டெபிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன என்பது சிறப்பம்சமாகும். இத்திட்டம் மத்திய அரசு எதிர்பார்த்ததைக் காட்டிலும் பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றதை கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு 28ஆம் தேதியன்று தொடங்கப்பட்ட கணக்குகளுக்கு விபத்துக் காப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், இத்திட்டத்தின் கீழ் உள்ள வங்கிக் கணக்குகளுக்கான மிகைப்பற்று (Over Draft) வரம்பானது 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தொடங்கியவர்களில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.