டெல்லி: மத்திய அரசு தற்போது எடுத்து வரும் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் தொட்ர்ந்து செயல்படுத்தி வந்தால் 2025ஆம் ஆண்டுக்குள் பொருளாதார வளர்ச்சியில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா நிச்சயம் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் என்று ஐஎச்எஸ் மார்கிட் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
நடப்பு 2019-20ஆம் நிதியாண்டில் நிச்சயம் இங்கிலாந்தை ஓவர்டேக் செய்து இந்தியா உலகின் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது மிகப் பெரிய நாடு என்ற இடத்தை பிடிக்கக்கூடும் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இன்றைக்கு உலக பொருளாதார வளர்ச்சியே இந்தியாவின் நுகர்வோர் சந்தையைத் தான் அதிக அளவில் சார்ந்துள்ளது. அதனாலேயே சர்வதேச பொருளாதார வளர்ச்சி என்பதும் இந்தியாவையே அதிக அளவில் சார்ந்துள்ளது. எனவே இந்தியாவின் ஜிடிபி (GDP) முன்னோக்கி சென்றால் தான் சர்வதேச பொருளாதாரமும் முன்னோக்கி செல்லும்.
பொருளாதார மந்தநிலை
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை சதவிகிதம் என்பது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்திருப்பதாக, கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மத்தியில், மத்திய பொருளாதார கண்காணிப்பு மையம் கவலை தெரிவித்திருந்தது. இதற்கு முக்கியமாக பொருளாதார வளர்ச்சியோடு தொடர்புடைய நாட்டின் தொழில் வளர்ச்சியும் மந்த கதியில் இருந்ததே முக்கிய காரணம் என்று பொருளாதார நிபுணர்களும் கவலை தெரிவித்திருந்தனர்.
பொய்த்த பருவ மழை
அதோடு பொருளாதார வளர்ச்சியின் மற்றொரு காரணியான விவசாய விளைச்சலும் கனிசமாக குறைந்து வருவது தான். தொடர்ச்சியாக ஒவ்வொரு முறையும் ஏமாற்றி வரும் தென்மேற்கு பருவ மழையும் வடகிழக்கு பருவ மழையும் விவசாய விளைச்சலை பதம் பார்ப்பதால், இதன் தொடர்ச்சியாக பணவீக்க விகிதமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. பணவீக்க விகிதம் ரிசர்வ் வங்கியின் பாதுகாப்பு இலக்கான 4 சதவிகித இலக்கை எட்டும் நிலைக்கு வந்து விட்டது. இதனாலும் பொருளாதார வளர்ச்சி சற்று சுனக்கமாகவே இருந்து வருகிறது.
இலக்கை எட்டவில்லை
இருந்தாலும் கூட, கடந்த 2018-19ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிச்சயமாக 7.5 சதவிகிதம் என்ற இலக்கை எட்டும் என்று மத்திய அரசும், இந்திய பொருளாதார நிபுணர்கள் மற்றும் உலக வங்கியின் பொருளாதார ஆய்வறிக்கை என அனைத்துமே, சத்தியம் செய்தன. ஆனால், இவை அனைத்தையும் மீறி கடந்த 2018-19ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவிகிதத்துடன் முடங்கிவிட்டது. இதை இந்தியாவின் பொருளாதார ஆய்வறிக்கையும் உறுதி செய்தது.
5 லட்சம் கோடி டாலர் இலக்கு
தற்போது இரண்டாம் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 8 சதவிகித இலக்கை எட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில் 1.85 லட்சம் கோடி டாலராக இருந்த இந்திய பொருளாதாரத்தை நடப்பு 2019ஆம் ஆண்டில் 2.7 லட்சம் கோடி டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக உயர்த்தியுள்ளதாக நடப்பு நிதியாண்டின் பட்ஜெட் உரையில் தெளிவுபடுத்தி இருந்தது. இதை வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 2025ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் வளர்ச்சி பெற்ற பொருளாதார நாடாக உயர்த்த தேவையான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பட்ஜெட் உரையின் போது குறிப்பிட்டார்.
ஆலோசனைக் கூட்டம்
பட்ஜெட் அறிவிப்புக்கு பின்னர், மத்திய கேபினட் செயலாளர் பி.கே.சின்ஹாவும் கடந்த வாரம் 5 லட்சம் டாலர் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு என்னென்ன சாத்தியக்கூறுகள் உள்ளன என்பது பற்றி விரிவாக விவாதிப்பதற்கான ஆய்வுக்கூட்டத்தை கூட்டியிருந்தார். அதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை, சுகாதாரம் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட எட்டு துறை செயலாளர்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
நடப்பு ஆண்டில் 5ஆவது இடம்
தற்போது, வரும் 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியா சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் ஜப்பானை முந்தி மூன்றாம் இடத்தை எட்டிப் பிடிக்கும் என்றும், நடப்பு 2019ஆம் ஆண்டில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறும் என்று பிரபல பொருளாதார ஆய்வு நிறுவனமான ஐஎச்எஸ் மார்கிட் (HIS Markit) தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியா முக்கிய இடம்
நடப்பு 2019ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது 3 லட்சம் கோடி டாலராக உள்ளது. இதை வரும் 2025ஆம் ஆண்டில் 5 லட்சம் கோடி டாலராக உயர்த்துவதே முக்கிய குறிக்கோளாக உள்ளது. ஒருவேளை நாம் எதிர்பார்க்கும் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடா உயரும்போது உயர் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளின் பட்டியிலில் இந்தியா முக்கிய இடத்தை பிடிக்கும் என்றும் ஐஎச்எஸ் மார்கிட் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவை சார்ந்துள்ளது
அதே போல், இன்றைக்கு உலக பொருளாதார வளர்ச்சியே இந்தியாவின் நுகர்வோர் சந்தையைத் தான் அதிக அளவில் சார்ந்துள்ளது. அதனாலேயே சர்வதேச பொருளாதார வளர்ச்சி என்பதும் இந்தியாவையே அதிக அளவில் சார்ந்துள்ளது. எனவே இந்தியாவின் ஜிடிபி (GDP) முன்னோக்கி சென்றால் தான் சர்வதேச பொருளாதாரமும் முன்னோக்கி செல்லும்.
பிரமாண்ட நுகர்வோர் சந்தை
இந்தியாவின் நுகர்வோர் சந்தையானது மிகப் பிரமாண்டமானது என்பதோடு, அதிவேகமாக வளர்ந்து வருவதால், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய கேந்திரமாக விளங்கும். கூடவே, ஆசிய பிராந்தியத்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு சந்தையின் முக்கிய கேந்திரமாகவும் விளங்கும் என்றும் ஐஎச்எஸ் மார்கிட் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.