கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பில் சிறந்து விளங்கும் சவுதி ஆரம்கோ தனது உற்பத்தி அளவை அதிகரிக்கப் பல நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து வருகிறது. இதில் இந்தியாவும் ஒன்று.
இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய ஆரம்கோ மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இத்திட்டத்திற்காக நிலத்தைக் கையகப்படுத்தும் பணியில் இறங்கிய போது மத்திய அரசுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
கூட்டணி
இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து தனது வர்த்தகத்தை ஆசியாவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்ட சவுதி ஆரம்கோ நிறுவனம் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்துடன் இணைந்து இந்திய உற்பத்தி தளத்தை அமைக்க முடிவு செய்தது.
இதற்காக மத்திய அரசுடன் 2018ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போராட்டம்
இந்நிலையில், இத்திட்டத்தை முதலில் தென் மும்பையிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ரத்தனகிரி பகுதியில் அமைக்கத் திட்டமிடப்பட்டது.
எனவே இத்திட்டத்திற்காக நிலத்தைக் கையகப்படும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியபோது அப்பகுதி மக்களும், விவசாயிகளும் நிலத்தைக் கொடுக்க முடியாது எனப் போராட்டம் நடத்தினர்.
பாதிப்பு
இத்திட்டம் ரத்தனகிரி பகுதிக்கு வந்தால் இப்பகுதியில் விளையும் அல்போன்ஸா மாம்பழம், முந்திரி விளைச்சல், மீன் பிடி தொழில் ஆகியவை அதிகளவில் பாதிக்கும் என உணர்ந்த மக்கள் மத்திய அரசையும், இத்திட்டத்தையும் எதிர்த்துக் கடுமையான போராட்டம் நடத்தினர்.
இதனால் இத்திட்டம் தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
புது இடம்
ஆரம்கோ மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் மகாராஷ்டிரா பகுதியில் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தினமும் 1.2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் திட்டத்தை இந்தியாவில் அமைக்க உள்ளது.
மக்கள் எதிர்பின் காரணமாகத் தற்போது இத்திட்டம் ராய்காட் மாவட்டத்தின் ரோஹா பகுதியில் அமைக்கப்பட உள்ளது. இது தென் மும்பையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
விலை
ரத்தினகிரி பகுதியில் அமைக்கப்படுவதாக ஒப்பந்த செய்யப்பட்ட நிலையில் இத்திட்டத்தின் மதிப்பு 44 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டது.
தற்போது இடம் மாற்றம் மற்றும் இதர காரணிகளை மையப்படுத்தி இத்திட்டத்தின் மதிப்பு 36 சதவீதம் வரையில் உயர்ந்து 60 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டு உள்ளது.
தொடரும்..
இந்த விலை உயர்வை சவுதி ஆரம்கோ நிறுவனத்திடம் தெரிவித்தபோது எவ்விதமான மறுப்பும் தெரிவிக்காமல் ஒப்புக்கொண்டது.
இதன் மூலம் இத்திட்டம் 2025ஆம் ஆண்டு துவங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆரம்கோ கூட்டணி இந்தியாவில் இருக்கும் 1.3 பில்லியன் மக்களுடன் நேரடியாக வர்த்தகம் செய்ய முடியும்.
பங்கீடு
இத்திட்டத்தின் 50 சதவீத பங்குகள் ஆரம்கோ - அபுதாபி தேசிய நிறுவன கூட்டணியும், மீதமுள்ள 50 சதவீத பங்குகளை அரச எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை வைத்துக்கொள்ள உள்ளது.