கொல்கத்தா, மேற்கு வங்கம்: கடந்த 2019 மக்களவைத் தேர்தல் காலத்தில் இருந்தே, மேற்கு வங்க முதல்வர் மமதா பேனர்ஜிக்கும், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்குமான புகைச்சல் இருந்து கொண்டே தான் இருக்கிறது.
அந்த புகைச்சலை அதிகரிக்கும் விதத்தில் தற்போது வருமான வரித் துறையினர், துர்கா பூஜை கமிட்டிகளுக்கு வரி கேட்டு நோட்டீஸ் கொடுத்து இருக்கிறார்கள். வருமான வரித் துறையினர் இப்படி பல்வேறு துர்கா பூஜை கமிட்டியினருக்கு நோட்டீஸ் வழங்கி வரி செலுத்தச் சொல்வதாக, தன் டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டு இருக்கிறார் மமதா பேனர்ஜி. அதோடு தாங்கள் அனைத்து தேசிய விழாக்களையும் பெருமையாகப் பார்க்கிறோம் எனவும் பதிவிட்டிருக்கிறார்.
இந்த விழாக்கள் எல்லோருக்குமானவை. இவைகளை வரிக்கு உட்படுத்த யாரும் விரும்பவில்லை எனவும் சொல்லி இருக்கிறார் மமதா பேனர்ஜி. வருமான வரித் துறையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசும் போது "துர்கா பூஜை கமிட்டியினரை வரி செலுத்தச் சொல்வது, பூஜையை ஏற்பாடு செய்பவர்களுக்கு பெரிய சுமையாக இருக்கும். மேற்கு வங்க அரசு ஏற்கனவே கங்கா சாகர் மேலா பூஜைகள் மீது விதித்திருந்த வரிகளை எல்லாம் நீக்கி இருக்கிறது. துர்கா பூஜை மீதோ அல்லது துர்கா பூஜை கமிட்டியினர் மீதோ வரி விதிக்கக் கூடாது என போராடுகிறோம்" எனச் சொல்லி இருக்கிறார் மமதா பேனர்ஜி.
இந்த வருமான வரித் துறையின் செய்கையைக் கண்டிக்கும் விதத்தில் மேற்கு வங்க முதல்வர் மமதா பேனர்ஜி நாளை (ஆகஸ்ட் 13, 2019 செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் தர்ணா செய்யப் போவதாகச் சொல்லி இருக்கிறார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பங்கா ஜனனி பிரிவு இந்த தர்ணாவை நடத்தப் போகிறார்களாம். நாளை காலை 10 மணி முதல் மாலை 06 மணி வரை சுபோத் மாலிக் சதுக்கத்தில் தர்ணா நடத்தப் போகிறார்களாம்.
யார் எல்லாம் வங்கத்தை நேசிக்கிறார்களோ... அவர்கள் எல்லாம் நாளை தர்ணா போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, தர்ணா போராட்ட ஏற்பாட்டாளர்கள், போராட்டத்தில் பங்கெடுக்க இருப்பவர்கள் மற்றும் மேற்கு வங்க மக்கள் என பலருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் தற்போதைய மேற்கு வங்க முதல்வர் மமதா பேனர்ஜி.