டெல்லி : வருமான வரிச் சட்டத்தில் மாற்றங்களைப் பரிந்துரைக்கும் புதிய நேரடி வரி விதிகள் வரைவு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கடந்த திங்கட்கிழமையன்று அகிலேஷ் ரஞ்சன் தலைமையிலான குழு ஒப்படைத்துள்ளது.
அகிலேஷ் ரஞ்சன் குழுவின் வரி பரிந்துரையைப் நிதி அமைச்சகம் பரிசீலித்த பிறகு, பொது மக்கள் கருத்து பெற புதிய நேரடி வரி விதிகள் வரைவு வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது உள்ள சுமார் 60 ஆண்டுகள் பழமையான வருமான வரி சட்டம் 1961க்கு மாற்றம் காணும் நோக்கத்தில், மத்திய அரசு புதிய நேரடி வரி விதிகளை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கான பரிந்துரையை தயாரிக்க, மத்திய நேரடி வரி வாரியத்தின் உறுப்பினர் அகிலேஷ் ரஞ்சன் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் தற்போது இந்தக் குழு சமர்ப்பித்துள்ள வரைவில், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு சலுகைகள் தருவது, வரி தாக்கல் செய்யும்போது ஏற்படும் பிரச்னைகளுக்கு வரி செலுத்துபவரும் வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவும் பேசி தீர்வு காண்பது போன்ற அம்சங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதோடு அதிகளவிலான வரி தனியார் முதலீட்டை குறைப்பதால், இது வளர்ச்சிக்கும் தடையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், 400 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யும் உள்நாட்டு நிறுவனங்கள் 25 சதவிகிதம் வரி செலுத்துகின்றன. எனினும் அரசுக்கு அதிகளவில் வருவாயை கொடுக்கும் நிறுவனங்கள் இன்றளவிலும் 30 சதவிகிதம் வரியை செலுத்துகின்றனவாம். ஆக இந்த வரி கட்டமைப்பிலும் வரி மாற்றலாம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல் தனிநபர் வருமான வரி முறையிலும் முக்கிய மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனவும் இதன் மூலம் நடுத்தர மக்கள் பயனடைவார்கள் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் தனது கிளைகளை நடத்தி அதன் லாபத்தை அயல்நாட்டில் உள்ள தலைமையகத்துக்கு பலன் அளிக்கும் வகையில் செயல்படுவதைக் கட்டுப்படுத்த கிளை லாப வரி ( Branch Profit Tax) என்ற புதிய வரி புகுத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.