பொதுவாக, தன் மனதில் பட்டதை தைரியமாகவும், நிதானமாகவும் பேசும் நபர்கள் எண்ணிக்கை, இன்றைய கார்ப்பரேட் கலாச்சாரத்தில் குறைந்து கொண்டே வருகிறது.
அதிலும் குறிப்பாக முதலாளிகள், பெரிய வியாபாரிகள், அரசு அதிகாரிகள் எல்லாம் தங்கள் எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு, எந்த சிக்கலிலும் சிக்காத வண்ணம் கூடுமான வரை அளந்து அளந்து பேசுவார்கள்.
ஆனால் இதற்கு பஜாஜ் ஆட்டோஸ் நிறுவனத்தின் ராஜீவ் பஜாஜ் விதி விலக்கு. எப்போதும் தன் மனதில் தோன்றுவதை பெரும்பாலும் நேர்மையாக பேசி ஒரு ஆக்கப்பூர்வமான விவாதத்தை ஏற்படுத்தக் கூடியவர்.
உதாரணம்
அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் எல்லாமே மின்சார வாகனங்களாக மாற்ற வேண்டும் என்கிற அரசின் பரிந்துரைகள் வெளியான போது "இந்தியாவில் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் இயற்கை எரிவாயு ரக வாகனங்களுக்கு எரிவாயுவை நிரப்பவே போதுமான வசதிகள் இல்லாத போது... மின்சாரத்தில் இயங்கப் போகும் வாகனங்களுக்கு போதுமான சார்ஜிங் பாயிண்டுகள் இல்லாமல் அடுத்த 3 - 5 ஆண்டுகளில் அனைத்தையும் இ-பைக்குகளாக மாற்றப் போகிறோம் என்றால் எப்படி விற்க முடியும். இது எதார்த்தத்தில் சாத்தியம் இல்லை" என தன் மனதில் பட்டதை அரசுக்குச் சொன்னவர். இந்த வெளிப்படைத் தன்மை இப்போது இன்னொரு இடத்திலும் பிரதிபலித்து இருக்கிறது.
ஒரு முறை பாருங்கள்
அரசிடம் நம்மைப் போன்ற ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உதவி கேட்பதற்கு முன், நாம் உலக தரத்தில் போட்டி போட்டுக் கொண்டு வாகனங்களைத் தயாரித்து இருக்கிறோமா..? உலக சந்தைகளில் போட்டி போடும் அளவுக்கு நம் வாகனங்களின் விலை குறைவாக இருக்கிறதா..? என நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும் என புதிதாக தன் சக ஆட்டோமொபைல் நிறுவனங்களைப் பார்த்துக் கேட்டிருக்கிறார். அதோடு நம் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களின் தயாரிப்புகள் பிரம்மாதமான தரத்தில் எல்லாம் இல்லை, சராசரி தரத்தில் தான் இருக்கிறது எனவும் சொல்லி இருக்கிறார்.
நாம் தான் காரணம்
இப்போது இந்திய ஆட்டோமொபைல் துறை சந்திக்கும் விற்பனை சரிவுகளுக்கு, நாம் தான் காரணம் என பழியை நிறுவனங்கள் மீதே திருப்பிவிட்டிருக்கிறார். "இந்திய ஆடோமொபைல் நிறுவன தயாரிப்புகளின் தரம் காரணமாக பெரிதாக ஏற்றுமதியை அதிகரிக்க முடியவில்லை. நாம் தயாரிக்கும் ஸ்கூட்டர், பைக், கார், ஜீப், எஸ் யூ வி, ட்ரக்குகள், பேருந்துகள் என எதுவுமே உலக தரத்தில் இல்லை" என மனதில் பட்டதை பொது வெளியில் போட்டு உடைத்திருக்கிறார்.
வேலை இழப்பு
அதோடு விட்டாரா என்றால் இல்லை, ஆட்டோமொபைல் துறையில் நிலவும் வேலை இழப்பு பிரச்னை குறித்தும் உணர்வுப் பூர்வமாகப் பேசி இருக்கிறார். "இந்திய ஆட்டோமொபைல் துறை கடினமான சூழலில் இருப்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் 5 சதவிகிதம் முதல் 7 சதவிகிதம் வரை ஏற்படும் விற்பனை சரிவை எல்லாம் ஒரு பிரச்னையாக எடுத்துக் கொள்ள முடியாது" என தன் சக ஆட்டோமொபைல் நிறுவனங்களிடமே சொல்கிறார்.
எப்படி நம்பிக்கை வரும்
"என் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் இப்போது சூழ்நிலை சரி இல்லை, ஆகையால் உன்னை நான் வேலையில் இருந்து தூக்கிவிட்டேன். உன்னை வீட்டுக்கும் அனுப்புகிறேன் என்று சொன்னால்... என் ஊழியர்கள் என்னை எப்படி நம்புவார்கள். நிறுவனத்துக்கு வாகன விற்பனை மூலம் வரும் மொத்த வருமானத்தில் சுமாராக 4 சதவிகிதம் தான் ஊழியர்களின் சம்பளத்துக்கு செலவாகிறது. இந்த சின்ன செலவைக் குறைக்க நம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமா..?" என உணர்வுப் பூர்வமாகப் பேசி இருக்கிறார் ராஜிவ் பஜாஜ்.
எனக்கு விருப்பம் இல்லை
இப்படிச் சின்ன சின்ன பிரச்னைகளுக்காக என் ஊழியர்களின் வாழ்கையோடும், என் ஊழியர்களின் குடும்பத்தினரின் வாழ்கையோடும் விளையாட எனக்கு விருப்பம் இல்லை என அழுத்தம் திருத்தமாகச் சொல்லி இருக்கிறார் ராஜிவ் பஜாஜ். அதோடு வரும் பண்டிகை காலங்களில் வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்லி இருக்கிறார் ராஜிவ் பஜாஜ். கடந்த 9 மாதங்களாக இந்தியாவின் வாகன விற்பனை தொடர்ந்து சரிந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.